எராலியின் வரலாற்று ஆய்வுகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரை படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் கச்சிதமான சொற்சித்திரங்களுடன் எழுதியிருக்கும் சுரேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும் சொல்லவேண்டும். புத்தரில் தொடங்கி தென்னிந்தியச் சித்திரங்கள் வரையிலான வரலாற்றுத் திருப்பங்களையும் சாதனைகளையும் வீழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டியபடி நீண்டு செல்கிறது. வணிக உறவுகளாலும் சாதனைகளாலும் உச்சத்துக்குச் சென்று வளர்ச்சியைத் தொட்ட இந்தியாவின் எழுச்சி, ரோம் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து தேங்கிவிட்ட அம்சம் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒன்று. மீண்டும் விவசாய சமூகமாக மாறி மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும் போக்கில் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து நேர்ந்த அந்நியப் படையெடுப்புகளால் உருவான சரிவு தெளிவான சித்திரங்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வரலாற்றைப் புரிந்துகொள்ள புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கும் எராலியின் பங்களிப்பை உணர்த்தியிருக்கும் சுரேஷின் கட்டுரையை மிகமுக்கியமான ஓர் ஆக்கமென்றே நினைக்கிறேன்.
அடுத்தடுத்த நூல்களைப்பற்றிய கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
– பாவண்ணன்
o0o
களபலி and வாழ்க்கை 24 x 7 poems are good. Also the article about srividya.true. her watery and large
Eyes added to her a lot of charm.life had not been kind to her. A sad thing.
– லாவண்யா
o0o
அரவிந்த் கண் மருத்துவமனை பற்றிய அருண் மதுரா கட்டுரை விரிவாக இருந்தது, மருத்துவமனை எப்படி செயல்படுகிறது எங்கு வெற்றி பெறுகிறது என்ற தகவல்கள் அருமை. இந்த விஷயத்தில் நல்ல ஒரு மருத்துவ சேவையை அளிக்க வாய்ப்பு இருப்பது புரிகிறது. இன்ஷூரன்ஸ் வியாபாரம் எல்லா செலவுகளையும் அதிகரித்து வரும் மாடல் இப்போது வளர்ந்து வருகிறது, அந்த பணக்கார நிறுவனங்களுடன் போட்டி போட்டு இது போன்ற முயற்சிகள் ஜெயிப்பது கஷ்டம்தான் என்று தோன்றுகிறது.
– ந.பாஸ்கர்
o0o
நெஞ்சை நெகிழ வைத்த கவித்வமான கட்டுரை.அந்த துயரம் நிரம்பிய அழகிய விழிகளை நியாயப் படுத்திய தமிழ் படங்கள் இரண்டே இரண்டுதான், அபூர்வ ராகங்கள் , சொல்லத்தான் நினைக்கிறேன் . வித்யாவின் அழகிய பெரிய விழிகளிலேயே செட் போட்டு படம் எடுத்துவிட்டார் பாலச்சந்தர் என்று குமுதத்தில் விமர்சனம் வந்ததாக ஞாபகம், அபூர்வ ராகங்களுக்கான விமர்சனத்தில். (ஶ்ரீ வித்யா பற்றிய சுரேந்திரநாத் கட்டுரை)
– மாலதி சிவராமகிருஷ்ணன்
o0o
தடம் பதித்த சிற்றிதழ்கள்
நல்லதொரு கட்டுரை. திரு.வே.சபாநாயகம் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று. இதைப் போல் பிற்காலத்தில் சில நூல்கள் வரக்கூடும். ஆனால் இதன் சிறப்பு என்னவெனில் இந்த இதழ்களை அவற்றின் பிறப்பின் போதும் வளர்ச்சியின் போதும் நின்றுபோன போதும் கவனித்த ஒருவரின் கட்டுரைகள். இலக்கிய உலதத்தை ஐம்பது ஆண்டுக்கும் மேலாக கவனித்தும் தொடர்பிலும் இருப்பவர் என்பதும் இவை வெறும் தகவல் திரட்டு அல்ல என்பதுமே.
– ரமேஷ் கல்யாண்
o0o
இதழ்: 145
இம்முறை சொல்வனத்தில், சிம்ப்சன், மகரந்தத்தில் ஒற்றைக்கண் மினியான், உலக திரைப்படத்தில் இன்னுமொரு ஒற்றைக்கண் என illuminatiகளின் தாக்கம் அதிகமாக தெரிகிறது. சிம்ப்சன் கூட இல்லுமினாட்டிகளின் தொடர் என்றுதான் நினைக்கிறேன்.முதல் படத்தில் சுவரில் மாட்டியிருக்கும் ஓவியத்தில் மூன்று பிரமிடுகள் உள்ளன,என் அறிவுக்கு அது மட்டும்தான் தெரிகிறது. இந்த ஒற்றைக்கண்ணையும், பிரமிடையும் சென்னையில் ஒரு கிறிஸ்துவ ஆலய்த்தில் பார்த்து அதிர்ந்து போனேன்,அங்கிருபவர்களுக்கு அந்த படம் ஏன் அங்கே வரையப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை.
– நரேஷ்
o0o
சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?
இக்கட்டுரையில் இருந்து அரசர் அப்துல்லா எந்த அளவு மக்கள் நலவிரும்பியாக இருந்தார் என்பதும், மக்கள் நலனுக்காக தீவிரப்போக்குள்ள மதத்தை அவர் எப்படி புத்திசாலித்தனமாக கையாண்டர் என்பதும் தெரியவருகின்றன. அவர் மீது மரியாதையை வரவழைக்கிறது கட்டுரை.
ஒரு நடுநிலையான கட்டுரை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிறது கட்டுரை. இந்த பேசு பொருள் அரிதானது. பேசிய விதமும் அரிதானது.
இது போன்ற விஷயங்கள் அறிய அரிதானவை. இத்தனை நாளா எங்கப்பா இருந்தீங்க மொமண்ட் ! 🙂
தொடர்ந்து எழுதுங்கள் லக்ஷ்மணப் பெருமாள்.
– ஆனந்த் கணேஷ்
o0o
ஷியாவா? ஸுன்னியா??
ஜெயகுமார். நல்ல முயற்சி. வ்யாசத்தில் நீங்கள் சொல்ல வரும் விஷயம் சில இடங்களில் தெளிவாக இல்லை. நாலாவது கலீஃபாவான அலி அவர்களுக்கும் பைகம்பர் முஹம்மது அவர்களுடைய மகளான ஃபாத்திமாவுக்கும் பிறந்தவர் ஹுஸைன். அலிக்குப் பிறகு யார் தலைமையேற்கவேண்டும் என்பதில் பிளவு.
கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் கொல்லப்பட்டார். முஹம்மது நபி அவர்கள் தனக்குப் பின் அலியின் வம்சத்தவர்கள் இஸ்லாமியர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டதாக ஷியாக்கள் சொல்லுகிறார்கள். முஹம்மதுநபிக்கு பின் வந்த இமாம்கள் அனைவரும் வணங்கத்தக்கவர்கள் என்பதும் இவர்களது தரப்பு.
வ்யாசம் முழுதும் சன்னி என்று எழுதியிருக்கிறீர்கள். சரியான உச்சரிப்பு சுன்னி.
உங்களுடைய வ்யாசம் ஷியாக்கள் மற்றும் சுன்னி முஸ்லீம்களிடையே உள்ள சச்சரவை மட்டிலும் பேச விழைகிறது.
பரேல்வி சுன்னி இஸ்லாம் மற்றும் தேவ் பந்தி சுன்னி இஸ்லாம் இடையேயும் மிகப்பெரும் பிளவு உண்டு. முன்னது ஸூஃபி இஸ்லாம் என்ற வழிமுறையைப் பின்பற்றி அவுலியாக்களை வணங்குகிறது. முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை ஏற்றுக்கொள்ளாத தேவ்பந்தி சுன்னி முஸல்மாணியர் பரேல்விகளின் நபி பிறந்த நாள் கொண்டாட்ட ஊர்வலங்களில் குண்டு வெடிக்கச்செய்து கொத்துக் கொத்தாக பரேல்வி சுன்னி முஸல்மாணியரைக் கொலை செய்திருக்கிறது.
ஆக ப்ரச்சினை ஷியா மற்றும் சுன்னி முஸல்மாணியருக்கு இடையே மட்டிலுமல்ல. மாறாக சுன்னிகளிலும் கூட பரேல்வி சுன்னி மற்றும் தேவ்பந்தி சுன்னி இஸ்லாமியிருக்கு இடையேயும் கடும் பிளவும் சச்சரவும் இருக்கின்றது.
http://herald.dawn.com/news/1153276
பாக்கி ஸ்தானத்து டான் பத்திரிக்கையில் வெளிவந்த மேற்கண்ட வ்யாசம் தங்களது முயற்சிக்கு மேலும் தகவல்களைத் தரும்.
– க்ருஷ்ணகுமார்
o0o
தான்ஸானியாவின் தேர்தல்
இத்தகைய அரிய, அன்னிய நாட்டுச் செய்திகளை நல்ல தமிழில் அளித்தமைக்காக உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
– அ. இலட்சுமணலால்
o0o