மலேசியாவிலும் சவுதி மன்னரின் ஆட்சி?
மலேசியாவின் பிரதம மந்திரியான நஜிப் ரஜாக் என்பவருக்கு திடீரென்று 680 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது. எப்படி இவ்வளவு பணம் 2013ல் இவருடைய கணக்கில் தோன்றியது என்று மலேசிய சட்டத்தலைமை அலுவலர் விசாரிக்க ஆரம்பித்தார். அவ்வளவும் சவுதி மன்னர்களின் நன்கொடை என்று வழக்கைச் சென்ற வாரம் மூடிவிட்டார்கள் [NYT / Thomas Fuller]
இதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? சவூதி அரசர்கள் தானம் வழங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதானே! இதன் பின்னணியில் 1எம்.டி.பி. (1Malaysia Development Bhd.) மீதான விசாரணையையும் தெரிந்துகொள்ள வேண்டும். 1எம் டி பி என்பது அரசின் கட்டுப்பாடில் இயங்கும் முதலீட்டு நிதியம். அதன் ஆலோசனைக் குழுவில் நஜிப் இருக்கிறார் [ செய்தி: CNBC]
இந்த விவகாரம் குறித்து இதர செய்தி நிறுவனங்கள் கொடுத்த தகவல்களை இப்படித் தொகுக்கலாம்.
1எம்.டி.பி. கணக்கில் இருந்து நஜிப் ரஜக்கின் தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் கைமாற்றப்பட்டிருப்பதை ஏழு மாதம் முன்பே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆதாரங்களுடன் துப்புதுலக்கி செய்தியறிக்கை வெளியிட்டது [WSJ / Yantoultra Ngui and Tom Wright]
இந்த வால்ஸ்ட்ரீட் ஜர்னல் துப்பு வந்தவுடன் விசாரணையில் ஒத்துழைக்குமாறு மலேசியாவின் துணை பிரதம மந்திரி கோருகிறார். அதன் தொடர்ச்சியாக நஜிப் சில நாள்களிலேயே அந்தத் துணை பிரதம மந்திரிக்குப் பதவியை விட்டு கல்தா கொடுக்கிறார். புதியதாக இன்னொரு விசாரணைக்குழு தலைவரை நியமிக்கிறார். நஜிப் நியமித்த சட்டத்தலைமை அலுவலர் – பதில்நன்றியாக, நஜிபை நிரபராதி என்று சான்றிதழ் வழங்கிவிட்டார். [NYT / Austin Ramzy]
மலேசியத் தேர்தலுக்கு முன் இவ்வளவு பணமும் சவுதி அரேபியாவின் அரசகுடும்பத்தின் தனிப்பட்ட சொத்துக்களில் இருந்து பரிமாற்றம் ஆகியிருப்பதாக ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. மலேசியத் தேர்தலில் ஜெயித்தபிறகு, கிட்டத்தட்ட மொத்த பணத்தையும் நஜிப் திரும்பவும் கொடுத்துவிட்டார். அறுபது மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே இடறுகிறது. [WSJ / Yantoultra Ngui and Tom Wright]
வாக்காளப் பெருமக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்கிறது கார்டியன் [The Guardian / Simon Tisdall]
ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்கிறது: ஏன் இத்தனை கோடானுகோடிகளை சவுதி மன்னர்கள் வாரியிறைக்க வேண்டும்? முஸ்லீம் பிரதர்ஹுட் தோற்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செலவழிக்கிறார்களாம். [BBC / Frank Gardner]
அப்படியானால் வரவும் செலவும் போக பாக்கி கேள்வி: பிரதம மந்திரி நஜிப் ஏன் பதினான்கு மில்லியன் டாலரை தன்னுடைய சொந்தக் கணக்கில் மாற்றிக் கொண்டிருக்கிறார்? எஸ்.ஆர்.சி. நிறுவனமும் 1MDB ஆளுகையின் கீழேதான் வருகிறது. [Bloomberg / Manirajan Ramasamy ]
~oOo~
தென் துருவம் முதல் வட துருவம் வரை ஒரே கொடி!
அடுத்த இரு சுட்டிகளும், உலக மக்களுக்கு மிகவும் தேவையான அமைதியையும், சமாதானத்தையும் எப்பாடு பட்டும் கொண்டு வந்தே தீருவோம், இதற்காக உலக மக்கள் அனைவரையும் கொல்ல நேர்ந்தாலும் சரி, விடமாட்டோம் என்று தம் உண்மையான மார்க்கப் பற்றால் பெரும் போர்களில் இறங்கி இருக்கும் அதிசய மனிதர்களைப் பற்றியவை. தம் தனி வாழ்வில் பெரும் தியாகங்கள் செய்து போர்களை நிகழ்த்தும் இந்த மனிதர்கள் பற்றி பல செய்தித்தாள்/ தொலைக்காட்சிகளில் தினே தினம் செய்திகள் பரபரப்பாக வருகின்றன. ஆனால் அப்படிப் பரபரப்பாக வருவதற்காகத்தான் இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று தப்பாக நினைக்க வேண்டாம். பரபரப்பு என்பது அவசியம் என்பதை இவர்கள் மேற்கிடமிருந்துதான் கற்றிருக்கிறார்கள். மேலை நாகரீகம், அரசுகள், தொழிலமைப்புகள், கல்வி அமைப்புகள், அறிவியல் போன்ற அனைத்தையும் அழிப்பதற்காக இப்படி பெரும் சினம் கொண்டு எழும் இவர்கள் ஏழாம் நூற்றாண்டில் மக்கள் எப்படி பாலைவனங்களில் ஒட்டகம் மேய்த்தபடி வாழ்க்கை நடத்தி மிக்க மன நிறைவுடன் வாழ்ந்து, அனைத்தும் வல்ல பேராளனைச் சென்றடைவதையே தம் முழு நேர ஊழியமாக, செயலாகக் கருதி இருந்தனரோ அதே போன்ற வாழ்க்கை, அதே போன்ற புனிதமான, துல்லியமான, ஒற்றை நோக்குடைய வாழ்க்கை உலக மக்களுக்கெல்லாம் வாய்க்க வேண்டும் என்ற தாராள சிந்தனையோடு இப்படி ஒரு போரை நடத்துகிறார்கள்.
இந்தப் பேரமைதி கிட்டுவதற்கு, உலகமே பாலைவனமாகவும், அதற்குப் பிறகு மொத்தமும் இடுகாடாகவும் மாறுவதுதான் ஒரே வழி என்பதை எல்லாருக்கும் முன்னரே அறிந்து விட்ட அவாங்கார்ட் (Avant-garde) , அதாவது முன்னணியினர் இவர்கள். உலக ’அமைதி’ என்பது அவர்களின் அடிப்படை மார்க்கப் பற்று சொல்லிக் கொடுத்த ஒரு இலக்கு. அதன்மீது எத்தனை பற்றுதல் இருந்தால் இப்படித் தினம் காலை ஒரு பத்திருபது பேரைப் பலி கொடுப்பார்கள்? அத்தனை மக்களையும் காவு கொடுத்தால்தான் பேரமைதி கிட்டும் என்றால் அதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். தம் காதுகளுக்கு நிசப்தம் கிட்ட வேண்டும் என்பது இவர்களது அடங்காத பேரவா என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பது தெளிவாகவில்லை இன்னும்.
இந்த மார்க்கத்தின் ஊற்றுக்கண்ணாக சில நாடுகளும் சில ஆளும் குழுக்களும் உண்டு. சௌதிகள் எனப்படும் குழுவினரின் நடுவிருந்தே இந்த அமைதி மீது தீவிரப் பற்றாளர்கள் துவங்கி விரிவடைந்தனர் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்த சௌதியோடு மேலை ’ஜனநாயக’ நாடுகளோ பல பத்தாண்டுகளாக ஒட்டி உறவாடி எண்ணெய், ரசாயனங்கள், உரங்கள் போன்றனவற்றுக்கு மலிவான மூலாதாரத்தை நாடி இருக்கின்றனர். பதிலுக்கு சௌதியின் அரச குலத்தினரின் பிரும்மாண்டமான நிதிக் குவையில் ஒரு பகுதி, ஆ.. ஆ… கணிசமான பகுதி மேலை வங்கிகள், நிலங்கள், கட்டடங்கள், பங்குச் சந்தை, இன்னும் என்னென்னவோ வித முதலீடுகளில் பதுங்கி இருக்கிறது. ஆனால் மேற்கின் ஊடகங்களோ தாம் ஏதோ இந்த அமைதி மார்க்கத்துக்கு எதிராக ஜனநாயகத்தைக் காக்க நிற்பதாக நாடகம் நடத்துவதில் வல்லவர்கள். இதோ இன்னொரு சான்று. பாப் இசை கேட்டதற்காக ஒரு ஈராக்கிய இளைஞனை மோஸுல் நகரில் ஐஸிஸ் என்ற கொலையாளிகளின்/ தற்கொலைப் படைகளின் ஒரு அமைப்பு இரு தினங்கள் முன்பு தலையை வெட்டி சுவன மறுப்போடு மேலுலகம் அனுப்பி இருக்கிறது. அதை பிரிட்டிஷ் பத்திரிகைகள் வெளியிடும் விதம் இப்படி-
http://www.mirror.co.uk/news/world-news/boy-aged-15-executed-isis-7394148
http://www.independent.co.uk/news/world/middle-east/isis-beheads-teenage-boys-for-listening-to-pop-music-and-missing-friday-prayers-a6881306.html
பிரிட்டிஷ் அரசுதான் நாடகம் ஆடுகிறது, ஊடகங்கள் துணை போகின்றன என்று நினைத்தால், மேற்படி செய்தியின் கீழே வாசகர் மறுவினைகளைப் பார்க்கலாம். அவை அந்த மக்களும் தம் அரசைப் போலவே கடுமையாகக் குழம்பி இருக்கிறார்கள் என்பதைச் சுட்டும். அமைதியை யாராவது எதிர்ப்பார்களா? என்ன பித்தர்கள் இவர்கள்? இந்திய அறிவு ஜீவிகளைக் கேளுங்கள், அவர்கள் எல்லாரும் இந்து மதத்தையும், இந்துக்களையும்தான் உடனே ஃபாசிஸ சக்திகள் என்று முத்திரை குத்துவார்கள். அந்த மதத்தின் எதுவும் காட்டுமிராண்டித்தனம். ஆனால் ஐஸிஸ் போன்ற அமைதி மார்க்கத்தினரின் வழி அதி அற்புத முற்போக்கு என்று சொல்வதில் அவர்களுக்குச் சிறிதும் தயக்கமே இராது. ஜவஹர்லால் நேரு பல்கலையின் அதி புத்திசாலி மாணவர் குழுக்களைப் பாருங்கள். எப்படி இந்தியாவை உடைத்து, காஷ்மீரைப் பாகிஸ்தானிடம் கொடுத்து, இந்தியாவுக்குள் சீனாவின் ஆட்சியை (மாவோயிச ஆட்சி) வரவேற்று உலக அமைதிக்கு வழியை நாளையே காணத் துடித்துப் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். அதல்லவா தீர்க்க தரிசனம்.
அட, இசை என்றால் இத்தனை வெறுப்பா என்று கேட்டு விடாதீர்கள். அந்தந்த நிலங்களிலிருந்து ஆட்களைத் திரட்டி தற்கொலைப் படைஞராக மாற்ற என்னென்ன உத்திகளெல்லாம் தேவையோ அதையெல்லாம் மேற்கொள்வார்கள்.
http://www.theguardian.com/music/2014/nov/09/nasheed-how-isis-got-its-anthem
ஆனால் அந்த நிலத்தைக் கைப்பற்றிய பின்னர்? வேறென்ன, பாடினால் தலையை வெட்டு, இசை கேட்டால் துப்பாக்கியால் சுடு என்ற அமைதியான வழி முறைகள் இருக்கவே இருக்கின்றன. தமிழகத்து இசைப் புயல்களெல்லாம் அவர்களது அபிமான மார்க்கம் உலக ஆட்சியைப் பிடித்த பின்னர் என்ன செய்வார்களென்று யோசித்தீர்களோ? அவர்கள் அதற்குள் செவ்வாய், வியாழன் என்று வேற்று கிரகங்களுக்குக் குடி பெயர்ந்திருப்பார்கள். இப்போதைக்கு வீட்டில் பச்சைக் கொடி பறப்பது அவர்களுக்குப் பிடித்தமான செயல். அதே மார்க்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பதும் அவர்கள் கடமை. செய்கிறார்கள். கடமையைச் செய்வது ஒரு குற்றமா? உங்களுக்குக் கடமை என்பது அத்தனை முக்கியமில்லை என்றால் எல்லாரும் அப்படி வெத்தாக இருப்பார்களா?
[முன்பு மார்க்சிய லெனினியர்கள்தான் இப்படி அவாங்கார்டாக எல்லாம் வளைய வருவார்கள். அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் அவர்களால் காலை எழுந்து பல் கூட விளக்க முடியாத அளவுக்கு அப்படி இருப்பதன் மீது அத்தனை பற்றுதல். வளைய வருபவர்களில் யார் முன்னணி என்று எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டீர்களா என்ன? நீங்கள் நிச்சயம் இந்து ஃபாசிஸ்டாகவோ, முதலாளியப் பிற்போக்காளராகவோதான் இருக்க முடியும். மற்றெல்லா இந்தியருக்கும் மாவொயிஸ்டுகள் என்று சொன்னாலே பாசம் பீறிட்டு வரும். அவர்கள் இப்படி எல்லாம் கேனத்தனமாகக் கேள்விகள் கேட்க மாட்டார்கள்.
இப்போது அந்த முன்னணித்தனம் அவர்களுக்கு சாத்தியப்படவில்லை. அவர்கள் செல்ஃபோன் டவர்களை நொறுக்குவது, பள்ளிக்கூடங்களுக்கு குண்டு வைப்பது, ரயில்களைக் கவிழ்ப்பது என்பன போன்ற புனிதமான புரட்சிச் செயல்களில் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். மிஞ்சிய நேரத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாதவ்பூர் பல்கலை போன்ற வளாகங்களில் இந்தியாவை உடைப்போம், ஒழிக இந்தியா என்று கோஷம் போடவே அவர்களுக்கு நேரம் போதவில்லையாம். அப்புறம் சில பெரும் தமிழ் வியாபாரக் குப்பைப் பத்திரிகைகளில் முதலாளியப் பிற்போக்குத்தனத்தை, இந்து ஃபாசிஸத்தை எல்லாம் எதிர்த்து ஆவேசமாக ஒன்றரைப் பக்க சிதறல் தேங்காய்க் கட்டுரைகள் எழுதும் பெரும் கடமை வேறு அவர்களுக்குச் சமீப காலமாக வந்திருக்கிறது. இத்தனை பொறுப்பின்மையான நிலையிலிருக்கும் அவர்கள், ஒரு நாளில் 48 மணி நேரமும் புரட்சி வேகத்தோடே நிற்பதால், உட்கார முடியாத மூட்டு வியாதி வந்து தவிக்கிறார்கள். எனவே, அந்த முன்னணித்தனத்தை இஸ்லாமிஸ்டுகளுக்கு உலகக் குத்தகை விட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ]
இது எப்படித் தெரிகிறது என்றால், சில உலகப் பத்திரிகைகளை நோட்டம் விட்டால் உடனே புலப்படுவது இதுதான்.
இங்கே ஜெர்மன் பத்திரிகை டெர் ஷீபிய்கல் சொல்வதைப் பார்த்தால் இஸ்லாமிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்த உடன் துருக்கியில் செய்ததெல்லாம் குர்துக்களை எப்படிக் கொல்வது என்று யோசித்து உடனே அதைச் செயல்படுத்த முற்பட்டது. இதில் முழு மூச்சாக முனைந்ததால், இப்போது தென்கிழக்கு துருக்கியில் கடும் போர் போன்ற நிலை நிலவுகிறது. டெர் ஷ்பீகல் ஒரு பிற்போக்கு ஜெர்மன் மேலாதிக்க நாஜியிச ஆதரவுப் பத்திரிகை என்று தில்லி ஜ.நே.பல்கலை அறிவாள மாணவர்கள் உடனே சொல்லி விடுவார்கள். அதற்காகப் பயந்து இதைப் படிக்காமல் இருக்க வேண்டாம். தமிழகப் பேருந்துகளில் தினம் பார்த்திருப்பீர்களே, ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்….’ என்று ஒரு குறள், உலகப் பொது மறை என்று சொல்கிறதே, அதுதான், அதன் வழி ஒழுகி இந்தப் பத்திரிகைகளைப் பார்க்கலாம் தவறில்லை. அமைதி மார்க்கம் ஆட்சியைப் பிடித்த பின் திருக்குறளை உலகப் பொது மறை என்று சொன்னால் தலையை வெட்டினாலும் வெட்டுவார்கள். ஷிர்க்கைத் தவிர்க்கச் சொல்லி கசையடி விழும். அதுவரை ஷிர்க் பரவாயில்லை. திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்லித் திரியலாம். என்ன ஒரு பத்தாண்டுகள் உங்கள் சுதந்திரத் திரியலுக்குப் பாக்கி இருக்கும். பிறகு நீங்கள் ஒன்று திம்மி, இல்லையேல் அடிமை. நீங்கள் முற்போக்காளராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இரண்டு நிலையுமே ரொம்பப் பிடித்த நிலைகள்தான், பிரச்சினை இராது.
http://www.spiegel.de/international/world/escalating-turkish-civil-war-sees-young-fighters-on-front-a-1076663.html
இப்போது எர்த்வானின் துருக்கிய அரசு தன் மறைமுகமான ஐஸிஸ் ஆதரவு நிலை வெளிப்பட்டு விட்டதைக் குறித்து அத்தனை கவலைப்படவில்லை. அது பாட்டிலும் ஒரு பக்கம் ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்திக் கொண்டும், இன்னொரு பக்கம் குர்துக்களைக் கொன்று குவித்துக் கொண்டும், அமைதி மார்க்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது. குர்துக்களுக்கோ மிக எளிய இந்த வழி புரியவில்லை. தாம் துருக்கியருக்கு அடிமை ஊழியம் செய்ய வேண்டி இருக்கும் உலக உம்மாவில் சேராமல், குர்துக்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்கிறார்கள். அதே போலக் காஷ்மீரத்துக்குத் தனி நாடு கேட்கும் ஜ.நே.பல்கலை முற்போக்குகளுக்கும் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை. உலக உம்மா, அதாங்க ஐஸிஸ் ஒன்றுதான் உலக அமைதிக்கு வழி என்பது முன்னாள் காலிஃபாக்களின் பேரரசாக இருந்த துருக்கிக்கே தெரிந்திருக்கிற போது, இவர்கள் இறைநம்பிக்கை இல்லாத மூடர்கள், கம்யூனிஸ்டுகளும், மார்க்சிய லெனினியர்களும் காஷ்மீருக்குத் தனி நாடு வேண்டும் என்பது என்னவொரு பேதமை? ஐஸிஸோடு அல்லவா சேர்க்கச் சொல்லிப் போராட வேண்டும். அல்லது இவர்களும் ஐஸிஸாளிகளாக மாறி இருக்க வேண்டும் இல்லையா? இல்லையாம்.
இந்திய சட்ட அமைப்பை இவர்கள் மதிக்கிறார்களாம். ஆவேசத்தோடு பேருரை எல்லாம் நிகழ்த்துகிறார்கள். ஒன்று உலக அமைதியை மதித்து ஐஸிஸின் ஏக அதிபத்தியத்தை நாட வேண்டும், இல்லை எதிராக நின்று தலையை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இதென்ன தத்தளிப்பு முற்போக்கு? பின் எப்படி அவாங்கார்ட் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்வது? ஐஸிஸ் அல்லவா உண்மையான அவாங்கார்ட்? உலக ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போர் நடத்தும் ஒரே அமைப்பு அதுதானே? மாலெ ஆகட்டும், மாவோயிசமாகட்டும் உலகச் சந்தைக்கு கொத்தடிமையாக உழைக்க முடிவு செய்து 30 ஆண்டுகளுக்கு மேலாயிற்றே. பின் என்ன அவாங்கார்ட்?
அடுத்த செய்தியைப் பாருங்கள். அமைதிப் பூங்காவாக, இல்லை அமைதிக் காடாகத் திகழ்ந்த இந்தோநேசியாவுக்கும் தொல்லை கொடுக்க இந்த மேலை ஊடகங்கள் சதி செய்கின்றது தெரிய வரும். கார்டியன் என்ற ‘முற்போக்கு’ முகமூடி போட்ட மேலை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிப் பத்திரிகை… மன்னியுங்கள் ஜ.நே.பல்கலை மாணவர்கள் பற்றிப் பேசத் துவங்கியதும், அவர்கள் பேசுவது போலவே பேச வந்து விடுகிறது… கார்டியன் என்கிற ‘நடுநிலை’ப் பத்திரிகை சொல்கிறது இதை.
http://www.theguardian.com/world/2016/feb/11/indonesia-homegrown-jihadis-lethal-cocktail-terror-isis-jakarta
டபுள் கேம் என்று தமிழகத்தில் சுத்தத் தமிழில் சொல்வார்கள் இல்லையா, அதுதான் இந்த கார்டியன் செய்வது. இந்தப் பக்கம் மேற்கின் முதலியத்தை எதிர்ப்பது போல பாவலா செய்து கொண்டு அந்தப் பக்கம் ஐஸிஸுக்கு எதிரான செய்திகளை எல்லாம் வெளியிடுவது. இதற்கெல்லாம் தமிழகத்து முமுகக்காரர்கள் ஏமாந்து விடுவார்களா என்ன? அவர்களுக்கு அமைதி மார்க்கம் என்பது உண்மையில் பாலைவன அமைதி என்று தெரியும். உலகையே பாலைவனமாக்கியே தீர்வார்கள், அதுவரை ஒரு கணமும் துயிலாது உழைப்பார்கள். கார்டியன் சொல்வது இது, இந்தோநேசிய ஜிஹாதிகள், இந்த நேற்று முளைத்த காளான் ஐஸிஸ் எல்லாம் ஒரு பயங்கர அமைப்பா, சே, மீசை முளைக்காத பயல்கள் என்கிறார்கள் என்று கதை விடுகிறது. ஐஸிஸில் எல்லாரும் மீசையும் தாடியும் கருகருவென்று (சில யூரோப்பியருக்கு பழுப்பாக, மஞ்சளாக இருக்கும், ஒத்துக் கொள்ளலாம், அதனால் என்ன அதுவும் மீசை தாடிதானே?) இருப்பதை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தோநேசியருக்குத்தான் அதிகம் முடி வளராத முகம். அவர்கள் உண்மையான அமைதி மார்க்கப் படைகளை இப்படி இகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இதை ஒன்றை வைத்தே, கார்டியன் பொய் சொல்கிறது என்று நாம் தெள்ளெனத் தெரிந்து கொள்வோமில்லையா?
அதே போல எத்தனை எதிர்ப்பிரச்சாரம் பாருங்கள். இந்தச் சுட்டிகளையும் படித்து இந்தப் பொய்யர்களின் உண்மை முகத்தைக் கிழித்துக் காட்ட முமுக பிரச்சார போஸ்டர்களையும் பாருங்கள். [கோவில்களுக்கருகே பார்த்திருப்பீர்களே ஷிர்க்கை எதிர்ப்போம் என்று பெரும் பானர்கள் வைத்திருந்தார்களே? அது என்ன என்று நினைத்தீர்கள்? கோவிலகளில் நடப்பதெல்லாம் ஷிர்க் என்று உங்களுக்கு அன்பாகப் பாடம் நடத்தி இருக்கிறார்கள். அமைதி மார்க்கம் ஆட்சிக்கு வந்தபின் அன்பு சற்று தீவிரமாகி ஈராக்கிய இளைஞனுக்கு மேலுலகப் பாதை காட்டப்பட்ட அதே வழி உங்களுக்கும் கிட்டும். அதற்குள் ஷிர்க்கை நிறுத்தப் பழகுங்கள். ]
அதற்கு முன் இந்தச் சுட்டுகளையும் படிக்கலாம்.
http://scroll.in/article/803087/the-ugly-truth-behind-a-heartwarming-story-of-muslims-performing-a-kashmiri-pandits-last-rites
http://www.spiegel.de/international/germany/sexism-and-islam-debated-in-germany-after-cologne-attacks-a-1073751.html
இத்தலி எப்படி இரானியர்களுக்கு அடி பணிந்தது பாருங்கள்! ஈரானிய அதிபருக்கு இந்த நிர்வாணச் சிலை எல்லாம் பார்க்கப் பிடிக்குமா என்ன? எத்தனை புனிதர் அவர்? நம் ஊர் புரட்சிகள், திராவிடக் கொழுந்துகள் எப்படி ஆண் நிர்வாணம் என்பதைச் சிறிதும் ஏற்காமல் எதிர்த்துக் கொடி பிடித்தனரோ, அதே போன்ற புனித நோக்கு கொண்டவர்கள் ஈரானிய ஷியாக்களின் அதிபரும், கூட வருவோரும். அதனால் பெரும் கலைச் செல்வங்கள் எனக் கருதப்படும் இதாலிய சிற்பங்களை எல்லாம் நிர்வாணமாகத் தெரியாமல் துணி கட்டி மறைத்ததாம் இத்தலி நாடு. என்ன ஒரு சுயநம்பிக்கை, என்ன ஒரு திம்மித்தனம். இதைத்தான் இத்தாலியரான சோனியா காந்தியின் குடும்பத்தினர் இந்தியருக்கும், இந்துக்களுக்கும் பரிந்துரைக்கிறார். அதை எதற்காக மக்கள் மறுக்க வேண்டும்?
http://www.huffingtonpost.com/entry/italy-nude-statues-hassan-rouhani_us_56a7aa87e4b01a3ed123ee90?section=india
ஆனானப்பட்ட ஜெர்மனி, இத்தலி போன்ற உலக ஏகாதிபத்தியத்துக்கு அருகிலான நாடுகளே அமைதி மார்க்கத்தின் படை வலுவைக் கண்டு ஆடிப்போய் நிற்கின்றன என்பது மேற்படி செய்திகளில் தெரிகிறது இல்லையா? அதுதான் எதிர்காலம்.
~oOo~
பள்ளிக்கூடம் போகலாமா
சரி மேலே சொன்னதெல்லாம் கிண்டல் என்று நினைத்து ஒதுக்க நினைத்தீர்களே ஆனால் உங்களுக்கு எதார்த்தம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. உலக அதிபத்தியத்தின் ஏக போக உரிமையாளர் தாம் என்று கொக்கரித்துக் கொண்டு அமைதி மார்க்கத்தினருக்கே அமைதி என்பது என்ன என்று சொல்லிக் கொடுக்க அந்த நிலப்பகுதிகளைப் படையெடுத்துக் கைப்பற்ற முயன்று தோல்வி அடைந்த அமெரிக்காவின் நிலைமை இன்று என்ன என்று பார்த்தீர்களா? ஒரு காலத்தில் உலகத் தொழிற்சாலைகளின் கேந்திரம் என்று கருதப்பட்ட டெட்ராய்ட் மாநகரம் இன்று வெறும் துருப்பிடித்த நகரம், சிதிலமான நகரம். அங்கு பள்ளிக் கூடங்களை நடத்தக் கூட நிதி இல்லை. நகரம் திவாலாகிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதை இந்தச் செய்தி சொல்கிறது பாருங்கள். இந்தியாவில் குக்கிராமங்களில் கூட ஏதோ ஒரு தகரக் கொட்டகையிலாவது பள்ளிக் கூடம் என்ற பெயரில் வாத்தியார்/ வாத்தியாரிணிகள் இல்லாமல் கூட குழந்தைகள் வந்து அமர்ந்து விட்டுத் திரும்புகிறார்கள். இதற்காகத் துப்பாக்கியால் மிரட்டி ஆசிரியர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூட உத்தரப் பிரதேசத்து அதிகாரிகள் முனைகிறார்களாமே, நியுயார்க் டைம்ஸ் சொல்கிறது பாருங்கள். நம் அரசுக்குக் கல்வி மீது அத்தனை தாகம்.
http://www.nytimes.com/2016/02/20/world/asia/india-primary-school-system-uttar-pradesh.html?hpw&rref=world&action=click&pgtype=Homepage&module=well-region®ion=bottom-well&WT.nav=bottom-well
நம் அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதுதான் இந்திய முற்போக்குகளின் ஒரே அரசியல் நிலைபாடு. அது நமக்குத் தெரியும் இல்லையா? அதனால்தான் மாலெக்கள் பள்ளிகளுக்குக் குண்டு வைத்துத் தகர்ப்பதைத் தம் முதற்கடமையாக நினைத்து மத்திய இந்தியாவில் பள்ளிகள் நடத்த விடாமல் செய்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைப் பள்ளிகளில் கூரையாவது நிச்சயம் இருக்கும். கழிப்பறை, விளையாட்டுத்தடல் போன்றனவற்றை அடுத்த நூறாண்டுகளுக்குள் கொணர்ந்து விடலாம் என்று இந்திய மாநில அரசுகள் யோசித்துக் கொண்டிருக்கின்றனவாம். அமைதி மார்க்கம் பதவியைப் பிடித்ததும் பிரச்சினை தீர்ந்து விடும். பெண்கள் பள்ளிகளெல்லாம் காலியாகி விடும், பெண்களுக்குத்தான் சமையலறை போதுமே. படிப்பு எதற்கு? அத்தனையும் ஆண் பையன்களுக்குக் கிட்டும். அவர்களும் ஏழு எட்டு வகுப்புக்கு மேல் படிக்கப் போவதில்லை. தற்கொலைப் படைக்கு ஆள் தேடுவோர் அழைத்துப் போய் விடுவார்கள். அமைதி மார்க்கத்தின் ஆட்சியில் கல்விக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதி மிகக் குறைவாகத்தான் இருக்கும். ஒரு பிரச்சினை தீர்ந்து விடும். எத்தனை நிம்மதி பாருங்கள்.
http://www.huffingtonpost.com/entry/isis-child-soldiers_us_56c779b9e4b0ec6725e28d90
ஆனால் டெட்ராய்ட் நகரில் பள்ளிகள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அதுவோ வெறும் சிற்றூர் இல்லை. மாநகரம்.
http://www.huffingtonpost.com/entry/detroit-abandoned-schools_us_56a9db68e4b00164892265aa?section=india
இதனால் அமெரிக்காவில் என்ன பள்ளிக்கூடமா இல்லை, நாடெங்கிலும் எத்தனை ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன என்பீர்கள். ஆமாம் இருக்கின்றன, ஆனால் கருப்பின மக்களுக்கு மட்டும் பள்ளிக்கூடங்கள் அமையாது. அதென்னவோ தலைஎழுத்து என்று ஜகா வாங்க நினைத்தால் தவறு. சமீபத்தில் வெள்ளை இனத்தவருக்கும் கடும் பிரச்சினைகள் எழத் துவங்கி இருக்கின்றன. இந்தச் செய்தியைப் பாருங்கள். பள்ளிக் கூடம் இல்லாதது என்பது ஒரு பிரச்சினையா, இதல்லவா பிரச்சினை என்பீர்கள்.
http://www.nytimes.com/2016/02/05/us/many-flint-residents-are-desperate-to-leave-but-see-no-escape.html?hpw&rref=us&action=click&p
ஆமாம் அதே டெட்ராய்ட் மாநகரத்தின் தொழிற்பட்டறையாகத் திகழ்ந்த ஃப்ளிண்ட் என்கிற ஊரில் மக்களின் குடிநீரில் காரீயச் சத்து கலந்த நீரைக் குடிநீராகக் கொடுத்துக் கொண்டு மகிழ்ந்திருக்கிறது அந்த மாநிலத்துக் குடியரசுக் கட்சி நிர்வாகம். அதனாலென்ன அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சம் புத்தி மட்டாக இருந்தால் அது ஒரு பிரச்சினையா என்கிறார் அந்த மாநிலத்து ஆளுநர். இருக்கிற புத்தியை வைத்துக் கொண்டும் அவர்கள் கிருஸ்தவர்களாகவா இருக்கிறார்கள்? தறுதலைகள் என்று கோபப்படுகிறது குடியரசுக் கட்சி. இதற்கெல்லாமும் அமைதி மார்க்கம்தான் ஒரே வழி என்பது இன்னும் அமெரிக்கக் கட்சிகளுக்குப் புலப்படவில்லை. ஷரியா தம் நிலத்தில் சட்டமாக வரக்கூடாது என்று வெத்தாக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன பல குடியரசுக் கட்சி மாநில நிர்வாகங்கள். அமைதி மார்க்கப் படைகள் அமெரிக்காவைக் கைப்பற்றும்போது குடியரசுக் கட்சியின் தீர்மானத்தை மதித்து ஷரியாவை அங்கு அமலாக்காமல் விட்டு விடுவார்களா என்ன? காரீயத்தைக் குடித்து புத்தி மழுங்கித்தான் போயிருக்கிறது குடியரசுக் கட்சி ஆட்களுக்கு. ஷரியா ஆண்டால் பெண்கள் வீட்டுக்குள் இருப்பார்கள். பள்ளிக்கூடமெல்லாம் கட்ட வேண்டாம். ஆண்களும் வியாபாரம் செய்தால் போதும் என்று அடக்கத்தோடு வாழ்வார்கள். கல்விக்குச் செலவாகாது.
தவிர, மக்களுக்குக் குடிநீர் கொடுப்பது அரசின் வேலையா? அரசு என்பது கஜானாவைப் பூட்டி வைத்துக் கொள்ளத்தான் என்பது அமெரிக்கக் குடியரசின் ஒரே கொள்கை. எந்தக் காரணம் கொண்டும் ஏழை பாழைகளுக்கு வாழ்க்கை என்பது கிட்டவே கூடாத கனவாக இருந்தால்தான் அடிமாட்டு விலைக்கு, ஒரு உரிமைப் போராட்டமும் நடத்தாமல் கொத்தடிமையாக இருக்க மக்கள் பணிந்து வருவார்கள். இல்லாவிடில் பாருங்கள், திமிராக காலை எட்டிலிருந்து மாலை ஐந்து வரைதான் வேலை செய்வோம் என்று கொடி பிடிப்பார்கள். வேலைக்காரர்களுக்கு என்ன அத்தனை திமிர் என்கிறது அமெரிக்கக் குடியரசுக் கட்சி. அவர்களுக்கு ஆதர்சம் 15 ஆம் நூற்றாண்டின் முடியாட்சிகள். அல்லது இன்னும் பின்னே போய் கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களின் அடிமை முறைகள். இவர்களுக்கும் இன்னும் ஐஸிஸின் கசையடி, தலைவெட்டி, அமைதி மார்க்கம் பிடிபடவில்லை. அதன் மேன்மைகள் புரிந்தால் உடனே மதம் மாறி அமைதியாகி விடுவார்கள். யாராவது அரபி மொழியை அமெரிக்கக் குடியரசுக் கட்சியினருக்குப் போதிக்க வகுப்புகள் நடத்த வேண்டும். அப்போது தானாகவே அமைதி மார்க்கத்தின் போர் முழக்கப் பாட்டுகள் எல்லாம் புரிந்து கட்சி மாறி வருவார்கள் அமெரிக்கர்கள்.
ஐஸிஸ்காரர்கள் இதைக் கவனிப்பார்களா? குடியரசுக் கட்சியினர் நடுவே அரபி மொழியைப் பரப்பி, அவர்களை அமைதி மார்க்கத்துக்குக் கொணர்வதும் ஒரு வகைப் போர்தான், அங்கு கொஞ்சம் கவனத்தைச் செலுத்தலாம். எப்போது பார்த்தாலும் அரபு இளைஞர்களின் தலைகளை வெட்டுவதையும், யாஸிதி குழுப் பெண்களை ஏலம் விட்டு வன்புணர்வு கொள்வதையுமே செய்து கொண்டிராமல், வேறு ’அன்பான’ வேலைகளையும் செய்யலாம் இல்லையா?