கருவிகளின் இணையம் – அலுவலகங்களில் கருவிகள்

பெரும்பாலும் அலுவலகங்களில்தான், கணினி வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள் – இதனால், கருவிகளின் இணையம் அலுவலகங்களில் தானே முதலில் தொடங்க வேண்டும்? கேள்வி என்னவோ நியாயமானதுதான். ஆனால், அலுவலகங்கள், கட்டிடங்களில் இவ்வகைக் கருவிகளின் தாக்கம் என்னவோ மிகக் குறைவுதான். இத்தனைக்கும், உலகையே மாற்றி அமைக்கத் துடிக்கும் நிறுவனங்களின் அலுவலகங்கள் என்னவோ மிகவும் பின்தங்கித்தான் இருக்கின்றன.
அலுவலகக் கட்டிடங்களின் சக்தி தேவைகளைக் குறைத்து, அதன் செயல்திறனை உயர்த்த, பல வழிகளை, LEED (Leadership in Energy and Environmental Design) என்ற அமைப்பு, முன் வைத்து, அப்படிக் கட்டப்படும் கட்டிடங்களுக்குச், சில ஆண்டுகளாக, சான்றிதழும் வழங்கி வருகிறார்கள். இதில் முக்கியமான அளவுகளாக, இந்த அமைப்புப் பார்ப்பது:

  1. மின்சார சக்தியை வீணாக்காமல் பயன்படுத்துகிறார்களா?
  2. கட்டிடத்தை குளிர்விக்கவும், சூடாக்கவும் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்?
  3. தண்ணீரை எவ்வாறு சேமித்து பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, மழை நீரை மறுபயன்படுத்துகிறார்களா?
  4. அலுவலகப் பாதுகாப்பு அமைப்பு ,எவ்வாறு உள்ளது?
  5. மறுபயன்பாட்டுப் பொருள்களைப் (recycling) பயன்படுத்துகிறார்களா?
  6. எப்படிக் கழிவை (மக்கும், மக்காத) நகர அமைப்புகளோடு சேர்ந்து கையாளுகிறார்கள்?
  7. இதைத் தவிர கட்டிடப் பொருட்கள் சம்பந்தப்பட்ட சில தேவைகளும் உண்டு

IOT part5-pic1

சில, புதிய அலுவலகக் கட்டிடங்கள் இவ்வகைச் சான்றிதழ் பெறுவதில் பெருமை கொள்கிறார்கள். இந்தச் சான்றிதழ் பெறுவதற்காகச், சில கருவிகளை கட்டிடத்தில் நிறுவ வேண்டிய கட்டாயம், உருவாகிறது. சில கட்டிடங்கள், இவ்வகைச் சான்றிதழை, அதிக வாடகை வசூலிக்கும் ஒரு வழியாகப் பார்க்கிறார்கள். சில மேற்கத்திய நகரங்களில், இவ்வகைச் சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்குச் சில வரிச் சலுகைகளும் உண்டு.
நாம் நினைப்பதை விட, பல பெரிய அலுவலகங்களில் ஏராளமான பொருட்கள் விரயமாக்கப் படுகிறது. விரயத்தை குறைப்பதும் ஒரு முக்கியமான வேலை. எத்தகைய விரயம்?

  • காகித விரயம் (பல அச்சு எந்திரங்களை பயன்படுத்தும் பெரிய அலுவலகங்களில் இது ஒரு பெரிய பிரச்னை). இதில் பொட்டலக் காகிதமும் (packaging materials), சம்பந்தப்பட்ட பொருட்களின் விரயம்
  • தொடர்ந்து எரிவதால், பல மின் குமிழ்கள் விரயம் செய்யும் மின்சாரம்
  • தொடர்ந்து வேலை செய்வதால், கணினிகள் விரயம் செய்யும் மின்சாரம்
  • யாரும் இல்லாத அலுவலகங்களில் அநாவசிய குளிர்சாதன விரயம். குளிர் நாடுகளில், வெப்ப சக்தி விரயம்
  • தண்ணிர் விரயம். பல மாடி, பல துறைகள் கொண்ட பெரிய அலுவலகங்களில் இது மிக அதிகம்
  • உணவுப் பொருட்கள் விரயம்

இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.

IOT part5-pic2

இத்தனை விரயத்தையும் குறைக்க, பல வழிகளை கருவிகள்/உணர்விகள் இன்றே செய்து காட்ட வல்லவை. ஆனால் இந்தத் துறையில், இதை ஒரு தார்மீகப் பொறுப்பாக, பல அலுவலகத் தலைவர்கள் எண்ணுவதில்லை. இன்றும் மேற்குலகில் கட்டப்படும் பல புதிய கட்டடங்கள் இத்தகைய குறிக்கோளுக்காக எதையும் செய்வதில்லை. இந்த அணுகுமுறையில், கட்டிடம் கட்டும் செலவு சற்று கூடுதலாகும். ஆனால், கட்டிடப் பராமரிப்புச் செலவு மிகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெரிய கட்டிடம் கட்ட 2 முதல் 3 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், கட்டப்படும் கட்டிடம், குறைந்தது 60 முதல் 100 வருடம் வரைப் பயன்படும். பராமரிப்புச் செலவு 60 முதல் 100 வருடங்களுக்கு குறைப்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு தொலை நோக்கு.
கருவிகள்/உணர்விகள் எந்த வகையில் உதவும்?

  1. ஆள் நடமாட்டமில்லாத அறையில் தானாக விளக்குகள் அணைந்து விட வேண்டும். இதற்கு தேவை ஒரு சிறிய இயக்க உணர்வி (motion sensor). பத்து ஆண்டுகளாக இவ்வகை உணர்விகள் கிடைக்கின்றன
  2. மாலை அலுவலகர்கள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றவுடன், விளக்குகள் தானே அணைந்து விட வேண்டும், காலையில் அவர்கள் அலுவலகத்திற்குள் வரும் பொழுது தானே எரிய வேண்டும்
  3. வெய்யில் காலத்தில், அதிக மனிதர்கள் கூடியுள்ள அறைகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த அறையின் வெப்பநிலை உடனே குறைக்கப்பட வேண்டும்
  4. குளியலறைகளில், தண்ணீர் கைகளை கழுவியவுடன் தானே நின்று விட வேண்டும் (மேற்குலகில் இந்த வசதி எல்லா பொது இடங்களிலும் உண்டு). இதற்குத் தேவை, ஒளி உணர்வி (photo electric sensor) தாங்கிய குழாய்கள்
  5. இன்று இயக்க உணர்விகளைத் தாண்டி, பல்புகளிலேயே உணர்விகள் வந்துவிட்டன. இவை கட்டிடக் கட்டுப்பாட்டுக் கணினியுடன் தொடர்பில் இருக்கும். எங்கே நடமாட்டம் உண்டு என்பதை கணினிக்கு உடனே தெரியப்படுத்தும்
  6. குளியலறையில் உள்ள ஒளி உணர்விகள், அதற்கு வெளியிலும் பல வேலைகளைச் செய்ய வல்லது. இவை சற்று உயர்த்தர உணர்விகள். மறு பயன்பாடுத் தொட்டிகள், அச்சடிக்கும் எந்திரங்களின் டிரேக்களில் இவற்றை நிறுவிவிட்டால், எப்பொழுது நிரம்பி வழிகிறது தொட்டி, அல்லது காலியாகிறது டிரே என்று கணினிக்கு செய்தி அனுப்ப வல்லவை இந்த வகை உணர்விகள்

மேலே உள்ள விடியோ யான்ஸி என்ற நிறுவனம் தன்னுடைய உணர்விகள் அலுவலகங்களில் எவ்வாறு உதவுகிறது என்று காட்டுகிறது.
இன்னொரு சிறிய நிறுவனம், வியாபாரக் கட்டிடங்களின் செயல்திற்னை உயர்த்துவதற்காக, பல புதிய உணர்விகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. கட்டிடங்களின், வெளிச்சம், வெப்பம், குளிர் என்று பல உணர்விகள் எவ்வாறு கட்டிடங்களுக்கு ப்யனளிக்கும் என்ற என்லைடன் (Enlighten) நிறுவன விடியோ:

Enlighted: Lighting Is Only the Beginning from Enlighted, Inc. on Vimeo.

கட்டிடங்கள் விஷயத்தில் இன்னும் இரு முக்கிய பிரச்னைகள் – பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம். வாகன நிறுத்துமிடத்தை சமாளிப்பது வியாபாரக் கட்டிடங்களில், பெரிய விஷயம். நகரத்தில் மையப் பகுதிகளில் இருக்கும் இக்கட்டிடங்களில், இடத்தின் மதிப்பு ஏராளம். இருக்கும் இடத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது அவசியம். அடுக்கு மாடி வியாபாரக் கட்டிடங்களில், பல கீழ் தளங்கள் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப் படுகிறது. எத்தனை கார்கள் நிறுத்தப் பட்டிருக்கின்றன, எத்தனை காலி இடங்கள் உள்ளன என்பதை உணர்விகள் கொண்டு எளிதாக கணித்து விடலாம். இன்று, பல கட்டிடங்களில், எத்தனை காலி நிறுத்துமிடங்கள் உள்ளன என்று பெரிதாக வெளியே காட்சியளிப்பில் காட்டுகிறார்கள். இவ்வகை உணர்விகள் இரு வகைப் பட்டவை. முதல் வகை, கட்டிடத்தின் உள்ளே/வெளியே செல்லும் பகுதியில் மட்டும் இருக்கும். மொத்தம் எத்தனை வாகனங்கள் நிறுத்த முடியும் என்பது தெரிந்த விஷயம். உதாரணத்திற்கு, 500 வாகனங்கள் ஒரு கட்டிடத்தில் நிறுத்த முடியும் என்று வைத்துக் கொள்வோம். 15 வாகனங்கள் உள்ளே போனால், 485 காலி இடங்கள் இருக்கும், 4 வாகனங்கள் வெளியே சென்றால், 489 காலி இடங்கள் இருக்கும், எந்த தளத்தில் இந்த காலி இடங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் ஒரு உணர்வி இருந்தால், எந்த தளம், எந்த நிறுத்துமிடம் காலியாக இருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியும்.

IOT part5-pic3

பாதுகாப்புக்கு இன்று விடியோ காமிராக்கள், ஏறக்குறைய அனைத்து வணிகக் கட்டிடங்களிலும் வந்து விட்டன. இத்துடன், சின்ன செயலிகள் தாங்கிய கார்டுகள், விழி வருடிகள் என்று டிஜிட்டல் முறைகள் வந்துவிட்டன. இந்த உணர்விகள், கட்டிடத்தில் யார், எந்த நேரத்தில், எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்று எளிதாகச் செல்லிவிட முடியும்.
இந்தக் கட்டிட விஷயத்தில், பழைய வியாபாரக் கட்டிடங்களும் ஓரளவு பயன்பெற வாய்ப்புண்டு. குறிப்பாக, உணர்வி தாங்கிய மின் குமிழ்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும். கணினியோடு தொடர்பு இருந்தால், இந்தக் கருவிகளால் மேலும் பயன் பெற வாய்ப்புண்டு. அப்படித் தொடர்பு இல்லாவிட்டாலும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தானால் அணைந்து கொள்ளும் திறமை கொண்டது. இந்தத் துறை, மற்ற கருவி இணையத் துறைகளை விட மெதுவாகவே முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம். வியாபாரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள், பர்மிட்டுகள் தேவை. மேலும், பழைய கட்டிடங்களில் வாடகை பெரிதாக கிடைக்கும் என்பதால், இவற்றின் சொந்தக்காரர்கள் உடனே மாற மாட்டார்கள். ஓரளவிற்கு, இது சட்டத்தால் மாற்ற முடியும். இதை நாம் மேலும், கட்டுமான கருவி இணையம் பகுதியில் பார்ப்போம்.

IOT part5-pic4

கட்டிடங்களில் இன்றைய கருவி இணைய துறையில் அதிகம் பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம், Zigbee என்ற நுட்பம். மிகக் குறைந்த மின்சாரமே தேவையான உணர்விகள் இதில் அடக்கம். மின்விளக்கு, வெப்பம், நகர்வு, மற்றும் சில உணர்விகள் இதில் அடக்கம். LEED இயக்கத்திற்கு மேலும் உதவ, Zigbee Green என்ற மிகக் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் நியமம் ஒன்று உருவாகியுள்ளது. சில உணர்விகள் மின்கலம் இல்லாமலே வேலை செய்யும் திறம் படைத்தவை. உதாரணத்திற்கு, ஒரு குப்பைக் கூடை நிரம்பி விட்டால், எச்சரிக்கும் உணர்வி காகிதங்களின் அசைவையே சக்தியாக பயன்படுத்திக் கொள்ளலாம்!

மேலே உள்ள விடியோ, இவ்வகை உணர்விகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அழகாக விளக்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.