[stextbox id=”info” caption=”நீங்களும் மருத்துவராகலாம்”]
இப்படி ஒரு பக்கம் நியுயார்க் டைம்ஸில் வரத் துவங்கி இருக்கிறது. பொதுவாக நம்மிடம் தம் உடல் நிலை பற்றி நண்பர்களோ உறவினரோ குறை சொல்லத் துவங்கினால் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதால் வெளி விட்டு விடுவது நம்மில் பலரின் வழக்கம். ஆனால் நியுயார்க் டைம்ஸ் வேறு ஒரு அணுகலை எதிர்பார்க்கிறது. பலரின் காதல் விவகாரம், குடும்பச் சண்டைகள் பற்றிய வம்புகளை மனிதர் ஆர்வத்தோடு கேட்பாரில்லையா? அது போல நமக்கு யாரென்று தெரியாதவர்களின் உடல் நலக் குறைவுகள் பற்றிய தகவல்களைக் கொடுத்து, இவற்றை வைத்துக் கொண்டு இந்த நபருக்கு என்ன உபாதை என்று உங்களால் கணிக்க முடியுமா என்று வாசகர்களை மருத்துவராக இருந்து யோசிக்கச் சொல்கிறது பத்திரிகை.
இது எத்தனை தூரம் வெற்றி பெறும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கீழே கொடுத்த சுட்டியில் வரும் ஒரு நபரின் உடல் நலப் பிரச்சினை சற்று விசித்திரமானதுதான். இந்த மனிதருக்கு, இளைஞருக்கு, சில மாதங்கள் முன்பு திடீரென்று காது வலிக்கத் துவங்கியது, கண்களின் அளவும் மாறி இருந்ததாகத் தோன்றியதாம். முதலில் பார்த்த மருத்துவர் காதுக்குள் ஏதாவது கிருமி இருக்கும் என்று ஆண்டி பயாடிக் மருந்து கொடுக்கிறார். அப்போது சரியாகி விடுகிறது. அடுத்த முறை அதே வலி, ஆனால் தலைக்குள் கத்தி செருகிய மாதிரி வலிக்கிறது. கண் பாப்பாவும் ஒரு கண்ணிலிருந்து இன்னொன்று உரு அளவு மாறித் தெரிகிறது. ஆனால் அவருக்குப் பார்வையில் ஏதும் குறைபாடு இல்லை. மருத்துவச் சோதனையில் காதில் ஏதும் பிரச்சினை இருப்பதாகவும் தெரியவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும்? ஊகிக்க முடியுமா என்கிறது பத்திரிகை. நமக்கு உதவ, மருத்துவர் எழுதிய குறிப்பையும் கொடுக்கிறது.
நம் வாசகர்களில் யாரும் கண்டு பிடிப்பார்களா?
http://well.blogs.nytimes.com/2015/08/06/think-like-a-doctor-a-knife-in-the-ear/
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஓட்டுனரின்றி இயங்கும் நான்கு சக்கர வண்டிகள்”]
தானியங்கிக் கார்களைச் சோதிக்க பல மாநிலங்கள் போலி நகரங்களை உருவாக்குகின்றனவாம். போலி என்பதை விட மாதிரி-நகரங்கள் என்று சொல்லலாம். ஆனால் அவை நிச்சயம் முன்மாதிரி நகரங்கள் இல்லை. மக்கள் இல்லாத வெறும் சாலைகள், சினிமா செட் போல முன்புறம் மட்டும் கடை கண்ணிகள் போலத் தோற்றமளிக்கும் ஆனால் பின் புறம் எதுவும் இராத சாலைகள். இவற்றில் ஓட்டுபவர் இல்லாத கார்களைப் பல வகை சாலை நிலைகளில் ஓட்டிச் சோதிக்கலாம் என்பது கருத்து. இது போதாது, மானிலங்களில் கார்கள், தவிர இதர வாகனங்களை விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும், குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை இந்த மாதிரிக் கார்கள், இதர போக்குவரத்து சாதனங்களுக்கு விதிக்க வேண்டும் என்று இந்த வகை வாகனங்களைத் தயாரிக்க முற்பட்டிருக்கும் நிறுவனங்கள் கோரிக்கைகளை விடுத்திருக்கின்றனவாம். தவிர, அவை பலவேறு சலுகைகளையும் கேட்கின்றனவாம். ஒரு சலுகையை இந்தியர்கள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றனர். கார்களிலும், வாகனங்களிலும் முன்னிருக்கைகளிலோ, முன்பக்கத்தில் காற்றுத் தடையாக இருக்கும் பெரும் கண்ணாடியிலோ விளம்பரங்கள், சினிமா, டெலிவிஷன் போன்ற கேளிக்கை சாதனங்களின் நிகழ்ச்சிகள் காட்டப்படக் கூடாது, முழுக்கண்ணாடித் திரையும் தெளிவாக, சாலையைச் சற்றும் மறைக்காததாகவும், ஓட்டுபவரைச் சிறிதும் கவனம் தப்பத் தூண்டாததாகவும் இருக்க வேண்டும் எனபது தற்போதைய சட்டதிட்டங்களின் நிலை.
இதை மாற்றி, தானியங்கிக் கார்களில் கணினி காரை இயக்கினாலும், திடீரென்று நிலைமை மாறினால் காரைச் செலுத்துவதைத் தான் மேற்கொள்ளும் நிலையில் ஒரு மனிதர் இருக்க வேண்டும் என்ற விதி இப்போது இருப்பதால், அந்த மனிதர் சலிப்பினால் உறங்கி விடாமலோ, அல்லது மதி மயங்கிய நிலையில் போகாமலோ இருக்க வைக்கச் சிறந்த வழி அவருக்கு ஏதாவது கேளிக்கையைக் கொடுப்பதுதான், அதற்கு சின்னத் திரையில் சினிமா அல்லது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைக் கொடுப்பது அவசியம் என்றும் இந்த நிறுவனங்கள் சொல்கின்றன. இதை அமெரிக்காவில் பல மாநிலங்கள் யோசித்து வருகின்றன.
சும்மா இருப்பதும் கடினம், வேலை செய்வதும் கடினம், பின் மனிதருக்கு என்னதான் வேண்டும்?
http://www.nytimes.com/2015/08/07/automobiles/self-driving-cars-ignite-gold-rush-among-states.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”சிலிகான் பள்ளத்தாக்கின் மாக்கியவெல்லிகள்”]
ஸிலிகான் பள்ளத்தாக்கு உலகத்தின் போக்கை வெகுவாக மாற்றி அமைத்து இருபது, முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன. உலகம் வெறி கொண்ட சூறாவளி போல எங்கோ தலைதெறிக்க ஓடுகிறது போல ஒரு பிம்பம் நம் மனதில் தோன்றினால் நாம் வயது அதிகமானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். தலை தெறிக்க ஓடினால்தான் ‘முன்னேற’ முடியும் என்று ஸிலிகானின் பக்தர்கள் பூரணமாக நம்புகிறார்கள். அந்த பக்தர்கள் நடுவே ஒரு புதுக் கூட்டம் எழத் துவங்கி இருக்கிறது. இந்தக் கூட்டம் என்ன வகைத்தது என்று இந்தக் கட்டுரை நுணுகி ஆராய்கிறது. படித்துப் பார்த்து …..ஹ்ம்… ஆமாம், அச்சப்படுங்கள்.
இத்தனைக்கும் இந்தப் புதுக் கூட்டம் 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் உலகெங்கும் ஆர்ப்பரித்த எத்தனையோ இனவெறியர்கள், கொலைவெறியர்கள், புரட்சி என்ற பெயரில் ரத்த தாகம் கொண்டு திரிந்த மோசடிக்காரர்கள் ஆகியோரின் அபிமானக் கருத்தியலாளர்களைப் போன்றுதான் இருக்கிறது. அதே பொய்மைகள், அதே வெறி, அதே சர்வ நிச்சயம் கொண்ட தன் மையப் பார்வை.
http://thebaffler.com/blog/mouthbreathing-machiavellis
[/stextbox]
[stextbox id=”info” caption=”பதவிக்காக”]
துருக்கி என்கிற இஸ்லாமிய நாடு செகுலரிய ஒப்பனையைக் களைந்து சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. அதற்கு முன்பு ராணுவ ஆட்சியும், அதற்கு முன்பு இருந்த மேற்கின் வழிமுறைகளைப் பின்பற்றி மறைமுக இஸ்லாமிய ஆட்சி நடத்திய மேல்தட்டினரும் ரகசியத்தில் இஸ்லாமியத்தைத்தான் கடைப்பிடித்தனர். அந்த ரகசியத்தை ஏற்க முடியாத மக்கள், படிப்படியாக இஸ்லாமியத்தை முற்படுத்தி இன்று முழு இஸ்லாமியம் ஆட்சி செய்கிறது. எர்டோகனின் கடும் இஸ்லாமியம், ஐஸிஸ் என்கிற உலகப் பயங்கரத்தை எதிர்ப்பது போல பாவலா காட்டினாலும், ஐஸில் பயங்கரர் கூட்டத்தில் போய்ச் சேர விரும்புவோர் எல்லாரும் துருக்கியின் எல்லைப்பகுதிகள் வழியேதான் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை போட்டுக் கொண்ட துருக்கி ஐஸிஸை எதிர்த்துத் தன் படைகளை அனுப்புவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தன் விமானப் படை மூலம் பல எல்லைப் புற நகர்களை சிரியாவின் நிலப்பரப்பில் தாக்கி இருக்கிறது. அந்த எல்லைப் புற நகர்களில் ஐஸிஸ் இல்லை, மாறாக ஐஸிஸை எதிர்த்துப் போரிடுவதில் இதுவரை தொடர்ந்து வெற்றி கண்ட ஒரே குழுவினரான குர்துக்களின் போர் அணிகளே உள்ளன. துருக்கி குர்துக்களை அழிக்கப் பல பத்தாண்டுகளாகக் கடும் முயற்சி செய்துவருகிறது. அமைதி மார்க்கத்தின் வழிகளைத் துருக்கி பயன்படுத்துவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
ஐஸிஸ் மேலை நாடுகளின் கைப்பாவை என்று வாதிடும் இந்திய இஸ்லாமிசத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் புது அணுகல்கள் தலைவலியைத் தரும் என்பதில் நாம் ஐயம் கொள்ளத் தேவை இல்லை. எத்தனை முறைதான் அந்தர் பல்டி அடித்து அமைதி மார்க்கத்துக்குச் சப்பைக்கட்டு கட்டுவது? இப்போது துருக்கியை காலிஃபேட்டின் தலைமையகம் என்று சொல்வதா வேண்டாமா? குர்துக்களை அழிப்பதை, அவர்களும் இஸ்லாமியர் என்ற போதும், ஏற்பதா வேண்டாமா? ஐஸிஸ் இப்போது மேலையினரின் கைப்பாவையா இல்லையா? இந்தியாவிலிருந்து பதுங்கிச் சென்று ஐஸிஸில் சேரும் இஸ்லாமிச அடிவருடிகளை இப்போது இஸ்லாம் என்ற கூடாரத்துக்குள் சேர்ப்பதா வேண்டாமா?
இந்த ஐஸிஸ் எப்போது இந்துக்களை அழித்து இந்தியாவை இஸ்லாமின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என்று கவலைப்படுவதா இல்லை ஐஸிஸை எதிர்ப்பதா?
எத்தனை எத்தனை கவலைகள் இந்த பழமைவாதிகளுக்கு?