[stextbox id=”info” caption=”ஆப்பிள் ஆப்பு போச்சு… ஃபேஸ்புக் வந்துச்சு! டும்! டும்!! டும்!!”]
சில வருடம் முன்பு வரை ஃபேஸ்புக் என்பது நண்பர்கள் கூடும் இடமாக இருந்தது. சில மாதங்கள் முன்பு ஃபேஸ்புக் மெஸெஞ்சர் வந்த பிறகு, தோழமைகளுடன் தொடர்ச்சியாக, இடைவிடாது அரட்டை அடிக்கும் தளமாகவும் ஆனது. கூடிய சீக்கிரம் அதே மெஸஞ்சர் மூலம் விமானப் பயணத்தை பதிவு செய்யலாம், வாடகைக் காரை அழைக்கலாம், கணக்கு வழக்குகளை சரி பார்க்கலாம் என சகல உபயோகத்திற்கும் வாயிலாக அமையப்போகிறது.
இருபதாண்டுகள் முன்பு வரை எதுவாக இருந்தாலும் தொலைபேசி வழியாகவே சாத்தியப்பட்டது. அதன் பிறகு இணையம் மூலமாக, எந்தக் கணினியில் இருந்து வேண்டுமானாலும், இது போன்ற காரியங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது எல்லோருடைய கைபேசியிலும் நூற்றுக்கணக்கான Apps எனப்படும் செயலிகள், இதே விஷயத்தை எளிதாக முடித்துக் கொடுக்கின்றன. ஆனால், வெகு விரைவில் ஆப்பிள் ஐபோன் முதல் ஆண்டிராய்ட் கருவிகள் வரை, எதை எடுத்தாலும் ஃபேஸ்புக் மூலமாகவே பாட்டுக் கேட்பது முதல் பங்கு வர்த்தகம் வரை செய்ய முடியும்.
இணையம் எளிதாகக் கிடைக்காத ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலும், ஃபேஸ்புக் மட்டும் இலவசமாக நுகர்வோர்களைச் சென்றடைகிறது, உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் சிறப்பு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு இருப்பதால், மற்ற வலைத்தளங்களைச் சென்று பார்க்க வேண்டுமானால், கட்டணம் வேண்டும். ஆனால், ஃபேஸ்புக் அல்லது ஃபேஸ்புக்கின் மெஸஞ்சர் மூலம் வலையகங்களையும் செய்திகளையும் விழியங்களையும் பார்ப்பதற்கு எவ்வித பணமும் செல்வழியாது.
இந்த மாதிரி அதிக பயனர்கள் பெறுவதாலும், நிறைய பேர் பேசும் கூடமாக இருப்பதாலும், ஃபேஸ்புக்கிற்கு என்ன இலாபம்? இந்த கட்டுரை மூன்று ஆதாயங்களை முன்வைக்கிறது.
1. வங்கி போன்ற பணவிவகாரங்களில் பங்கு பெறுவதன் மூலம், அந்த பரிவர்த்தனத்தில் தரகுக் கட்டணம் பெற இயலும்.
2. தங்கள் செயலிகளுக்கு சிறு கட்டணம் வசூலிப்பதன் மூலம், பல ட்ரில்லியன் பயனர்களிடமிருந்து பில்லியன்களை புரட்ட முடியும்.
3. வாடகைக் கார் என்றால் ஓலா (Ola)வா அல்லது ஊபர் (Uber)ஆ, என – எந்தச் சேவைக்கு, எவரை முன்னிறுத்துகிறோம் என்று வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவதன் மூலம், மேலும் இலாபம் வரும்.
அது தவிர ஸ்தாபனங்களில் இந்தச் சேவை எவ்வாறு ஊடுருவுகிறது என்பதையும் ஐ.பி.எம்., சிஸ்கோ போன்ற பழம்பெரும் கணி தாதாக்கள் எவ்வாறு இந்தப் போட்டியில் களம் குதித்திருக்கிறார்கள் என்பதையும் எகனாமிஸ்ட் கட்டுரையில் அறியலாம்:
[stextbox id=”info” caption=”விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும்”]
வலைப்பதிவுகள் நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருக்கின்றன. தங்களுடைய ரசிகர்களுடன் நேரடியாக அளவளாவ, ட்விட்டர் இருக்கிறது. ரசிகர்களை ஒருங்கிணைக்க, விவாதத்தை திசைத் திருப்ப ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கலாம். இவையெல்லாம் இருந்தாலும் பழைய ஊடகங்களான தொலைக்காட்சி, நாளிதழ், மாதாந்தரி போன்றவற்றின் பிடியில் இருந்து பிரபலங்கள் மீளவில்லை. பிரத்தியேகமான நேர்காணல்கள், உள் விவகாரங்கள், இரகசியத் தகவல்கள், போன்றவற்றை முதன் முதலில் தங்களின் மீடியா நண்பர்களுக்குத் தந்து விட்டு, அவர்கள் ஆசியுடனேயே தன்னுடைய சொந்த வலைப்பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.
இதற்கு மூன்று காரணங்கள்
1. தங்கள் வலைப்பக்கத்தையும், டிவிட்டர் கணக்கையும் தன்னுடைய ரசிகர்கள் மட்டுமே தொடர்வார்கள். தினசரியின் வலையகத்தை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள்.
2. நேரடியாகப் பேசுவது என்பது நேர்மையாக இருக்கும். இருந்தாலும், தான் சொல்ல விரும்புவதை, கச்சிதமாகவும் தெளிவாகவும் வலியுறுத்தலான எழுத்தாகவும் ஆக்க, பதிப்பாசிரியர்கள் உதவுகிறார்கள்.
3. நாளைய மட்டில், தன்னுடைய புகழ் மங்கினால், அதை நிலைநிறுத்த, இந்த டிவி/ அச்சு ஊடகங்களின் உதவி தேவை. அதற்காக, அவர்களுக்கு இப்பொழுது தீனி போட்டால், இன்னொரு நாளில் நமக்கு கை கொடுப்பார்கள்.
இப்பொழுது இந்த இடைமுகமாக இருக்கும் ஊடகங்களை உடைக்க முன்னாள் நியு யார்க் பேஸ்பால் வீரர் டெரக் ஜீட்டர் (Derek Jeter) தன்னுடைய புதிய நிறுவனமான ப்ளேயர்ஸ் டிரிப்யூன் (Players’ Tribune) துவங்கி இருக்கிறார். இந்தத் தளத்தில் விளையாட்டு வீரர்கள் தங்கள் எண்ணத்தை பகிரங்கமாக, பாவனையற்ற, எடிட் செய்யப்படாத மொழியில் உடனுக்குடன் பகிரலாம்.
ரெட் சாக்ஸ் விளையாட்டு வீரரான டேவிட் ஆர்டிஸ் (David Ortiz) என்பவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தகவல்கள் கசிந்தன. இந்த விஷயத்தில் தன் பக்கத்து நியாயத்தை, பெரிய பேட்டியாக பாஸ்டன் க்ளோப் பத்திரிகைக்கு டேவிட் ஆர்டிஸ் கொடுத்து இருந்தார். ஆனால், பாஸ்டன் க்ளோப் பத்திரிகையோ இருபக்கத்து நியாயத்தையும் வெளியிடுவோம் எனச் சொல்லி இருந்தது. அதாவது டேவிட் ஆர்ட்டிஸ் வழங்கிய பேட்டி ஒரு புறம் என்றால்; அதன் மறுபுறம் எப்படி சோதனை செய்தார்கள், எவ்வளவு தடவை ஊக்கமருந்து சோதனையில் அவர் பிடிபட்டார், எவ்வாறு அந்தச் சோதனையில் இருந்து தப்பிக்கலாம் என்னும் வழிமுறை போன்ற ஆதாரங்களையும் தகவல்களையும், அதே நாளிதழின் முகப்பில் வெளியிடுவோம் என்றார்கள்.
இது டேவிட் ஆர்ட்டிஸுக்கு ரசிக்கவில்லை. ப்ளேயர்ஸ் டிரிப்யூன் பக்கம் சென்றார். தன் பக்க கதையைச் சொல்லி விட்டார். டேவிட் ஆர்ட்டிஸ் உடைய பதிவு வெளியானவுடன் அவசர அவசரமாக, பாஸ்டன் குளோபும் அவருடைய பேட்டியை தன் தளத்தில் வெளீயிட்டு, பார்வையாளர்களை அழைத்தது. இந்த விஷயத்தை முன்வைத்து, நாணயத்தின் இரு பக்கமும் அறிவதை வாசகர் விரும்புகிறாரா அல்லது அவ்வாறு நடுநிலையாக எழுதும் நிலையில் பத்திரிகைகள் இருக்கின்றனவா என்பதை இந்தப் பதிவு ஆராய்கிறது
http://www.nytimes.com/2015/03/29/sports/athletes-finding-their-voice-in-derek-jeters-digital-venture.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”புதிய அலைகள் – பெண்களுக்காக”]
‘புதிய அலைகள்’ எனும் பெயரில் பெண்கள் அமைப்பு மூலம் உத்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் பத்திரிகையாளர் ஷ்ரத்தா பாஸ்கர். பாலியல் கொடுமைகள் மட்டுமல்லாது ஜாதிப்பிரச்சனையும் சேர்ந்திருப்பதால் ஷ்ரத்தாவின் அமைப்புக்கு அளவுக்கு அதிகமான மிரட்டல்கள் வருவதுண்டு. ‘பெரும்பாலும் தலித் பெண்களும், முஸ்லிம்களும் இந்த பிரச்சனையில் பலி ஆகிறார்கள். மேல்ஜாதி இந்து பெண்கள் யாரும் இதில் கொடுமையை அனுபவிப்பதில்லை’ எனச் சொல்லும் அவர் தனிமனுஷியாக உத்திர பிரதேசத்தின் கிராமங்களுக்குள் பயணம் செய்து பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். அவரது சிரமங்களை இக்கட்டுரையில் படிக்கலாம்:
http://www.theguardian.com/lifeandstyle/2015/mar/30/female-reporter-rural-india-khabar-lahariya-feminist-newspaper
[/stextbox]