[stextbox id=”info” caption=”சீனாவின் சதிவலை”]
சீனா ஒரு ஆவணத்தில் தன் கோட்டைக்குள் பெரும் ஆயுதம் ஒன்று இருப்பதை ஒத்துக் கொண்டிருக்கிறதாம். இது அன்றைய பிரும்மாஸ்திரம் போன்றது, பேரழிப்பைக் கொணர்ந்து எதிரிகளை ஸ்தம்பிக்க வைப்பது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கியப் போராயுதமாகி விட்ட சைபர் தாக்குதல்தான் இது. உலக வலை என்பதில்லாமல் உலக வணிகம் மட்டுமல்ல, எல்லா வகைத் தொடர்புகளுமே இனிக் கடினம்தான். தவிர்க்கவியலாமல் பயன்படுத்தப்படும் இந்த வசதி வழியே பிற நாடுகள் மீது பெரும் தாக்குதல் நடத்தப் போதுமான சைபர் போராளி அணிகளைத் தான் திரட்டி வைத்திருப்பதாகவும், அவை ஏற்கனவே தொடர்ந்து பல நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் சீனா ஒத்துக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று சொல்கிறது.
http://www.thedailybeast.com/articles/2015/03/18/china-reveals-its-cyber-war-secrets.html
இதில் இரு நாடுகளின் அரசுகளுமே உலக மகாப் பொய்யர்கள். அந் நாடுகளின் பெரும் வணிக/ தொழில் நிறுவனங்களுமே உலகளவில் ஆக்கிரமிப்பாளர்கள். இந் நாட்டு ராணுவங்களோ பெரும் நாச சக்திகளைக் கொண்டவை. இவற்றை ஆள்வாரோ பிற நாடுகளையும் மக்களையும் அழிப்பது குறித்துக் கிஞ்சித்தும் கவலையோ, குற்ற உணர்வோ இல்லாத பயங்கர சக்திகள். இவற்றை ஆளும் முக்கியக் கருத்தியல்களுமே அந்தந்த நாட்டு மக்களை ‘தேசியம்’ என்ற ஒரு உணர்ச்சியின் வலையில் சிக்க வைத்துக் குருடர்களாக்கி, உலகின் பிற நாட்டு மக்களைப் பலியாடுகளாகக் கருதுவது தவறில்லை என்றும் எண்ண வைத்திருப்பவை. இதில் அபத்தம் என்னவென்றால் இந்த இரு கருத்தியல்களுடைய மோசமான வடிவுகளே இரண்டு நாடுகளிலும் அதிகாரத்தில் உள்ளன. அவற்றின் அசல் வடிவில் இரு கருத்தியல்களுக்கும் தேசியம் என்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருக்கக் கூடாது. அவை தேசியத்துக்கு எதிரிகள். ஆனால் இரு நாடுகளிலும் ஆட்சியில் உள்ளவர்கள் உலக மகா அழுகுணி ஆட்டக்காரர்கள், தேசியத்தைப் பயன்படுத்தியே தம் அதிகாரத்தை நிலை நிறுத்தி இருப்பவர்கள். இவர்களை எந்த நாட்டினராவது தம் நட்பு சக்தி என்று ஏமாந்தால் தம் தேவை தீர்ந்ததும், அந் நாட்டினரைத் தரையோடு தேய்த்துப் புழுதியாக்கி விடக் கூடிய அளவு ஆபத்தானவர்கள்.
ஆனால் சீனா இந்த எதிர் அணி சொல்வது போல இந்தியாவைப் பலியாடாகத்தான் கருதுகிறது என்பதில் நாம் ஐயம் கொள்ளவும் வேண்டுமா என்ன? இந்தியாதான் பலியாடாக இருப்பதைத் தவிர வேறு நிலை தனக்குச் சாத்தியம் என்று நினைத்திருக்கிறதா என்ன? அப்படி நினைத்தால் இந்தியாவைச் சும்மா விட்டு வைத்திருப்பார்களா இங்கு பல பத்தாண்டுகளாகப் பம்மி இருக்கும் இந்திய இடது சாரிகளும், செகுலரிய வியாதிகளும், செமிதிய மதவெறிக் கும்பல்களும், குறுந்தேசிய பாசிஸ்டுகளும்? கூட்டமாகச் சேர்ந்து நாட்டை அன்னியருக்கு அடகு வைக்கத்தான் எத்தனை அவதிப்படும் கூட்டங்கள் இவை? இந்தியா உண்மையில் சுதந்திர நாடாக ஆக முயன்றால் விட்டு வைப்பார்களா?
http://www.thedailybeast.com/articles/2015/03/18/china-reveals-its-cyber-war-secrets.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”பணமுதலைகளின் வழிகள் பல”]
அமெரிக்கா பற்றி இன்னொரு செய்தி. பத்தாண்டுகள் முன்பு வரை அமெரிக்காவுக்குப் போவது என்பது இந்திய வெள்ளைச் சட்டைக்காரர்கள் நடுவே உற்சாக பானம் போல இருந்தது. அது நடக்காத வரை தாம் பொருட்படுத்தப்படக் கூடிய மனிதனாக உயர முடியாது என்று நினைக்குமளவு கூட இந்த மோகம், பித்து இருந்திருக்கிறது. ஆனால் 2007-8 இல் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சரிவை அடைந்த காலம் தொட்டு, இந்திய இளைஞர்கள் நடுவே அமெரிக்கக் கனவு அத்தனை பெரிதாக இல்லை. சமீபத்து வலது சாரி அரசியலின் எழுச்சியில் அமெரிக்கா இன்னமுமே அதல பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோ, வளர்ப்பதோ இயலாத காரியம் என்று ஒரு கட்டுரையாளர் அபிப்பிராயப்படுகிறார். அவரே அமெரிக்கர்தான். இது ஏதோ இடதுசாரியினரின் காழ்ப்பில் சொல்லப்படும் கருத்தல்ல. காரணங்கள் என்னவென்று சொல்கிறாரென்று கவனித்தால் மத்திய, உழைப்பாளி வர்க்கத்தினரின் வாழ்க்கை அங்கு எப்படிச் சீரழிக்கப்படுகிறது, எப்படி நாட்டின் ஜனத்தொகையில் ஒரு சதவீதமே இருக்கும், கொழுப்பெடுத்த பணமுதலைகள், மீதி 99% அமெரிக்க சாமானிய மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியலாம். அக்கட்டுரை இங்கே.
http://www.salon.com/2015/03/17/9_reasons_america_is_a_lousy_place_to_raise_kids_partner/
[/stextbox]
[stextbox id=”info” caption=”பிறந்த நாள்களும் குடும்பங்களும் நினைவலைகளும்”]
இது இரண்டு எழுத்தாளர்கள் பற்றியது. ஆனால் முக்கியமாகப் பார்த்தால், ஒருவரைப் பற்றியதுதான். கெண்ட் ரஸ்ஸல் என்ற உரைப் புத்தகங்கள் எழுதிப் பெயர் பெற்றவராகி வரும் ஒருவரைப் பற்றியது. அவருடைய சகோதரியும் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அமெரிக்கப் பரிசுகளில் முக்கியமான ஒன்றான ‘மகார்தர் மேதை‘ப் பரிசு பெற்ற புனைவாளர். ஸ்வாம்ப்லாண்டியா என்ற மிகக் கவனிக்கப்பட்ட ஒரு நாவலை எழுதியவர் அந்தப் பெண்.
ரஸ்ஸல் தான் எழுதிய புத்தகத்தின் திருத்தம் முடிந்த, ஆனால் இன்னும் இறுதி வடிவு பெறாத பக்கங்களை அப்பாவிடம் கொடுக்கிறார். அவர் அதைப் படித்தால் அது கிருஸ்த்மஸ் கொண்டாட்டத்தைக் கெடுக்கும், படிக்க மாட்டேன் என்கிறார். இவருக்கும் அப்பாவுக்கும் இடையே முட்டிக் கொள்ளும் உறவுதான் இருக்கிறதாகத் தெரிகிறது. கெண்ட் தன் புத்தகத்துக்கு வைத்த தலைப்பு, ‘ஒரு மோழையான மகனை வளர்த்ததற்கு நான் வருந்துகிறேன்‘; இந்தப் புத்தகத்தை அப்பாவிடம் கொடுத்தால் அவர் எப்படி அதைப் படிப்பார்? [புத்தகத்தின் இங்கிலிஷ் தலைப்பு இது: I Am Sorry to Think I Have Raised a Timid Son]
இந்தப் புத்தகத்தில் கெண்ட் என்ன எழுதி இருக்கிறார்? ஓர் எடுத்துக் காட்டு:
But all the way through the book Russell complicates this portrait, revealing the father-son relationship as one that isn’t merely adversarial. They are, he concludes, made of the same Russell-ian stuff, prone to the same faults and strengths of character, and invariably tied up in each other’s fates. “For better or worse, I am what I am because of that man,” Russell says. “It’s like a nuclear submarine that’s powered by a cracked reactor: it still gets you there but it’s slowly poisoning you at the same time.”
மீதத்தை இங்கே படிக்கலாம். முக்கால் பக்கம்தான் இருக்கும், படியுங்களேன்.
http://lareviewofbooks.org/review/drink-four-kent-russell
[/stextbox]
[stextbox id=”info” caption=”போரும் வல்லுறவும்”]
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ருஷியப் படைவீரர்கள் நூற்றாயிரக்கணக்கான பெண்களை ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள். இந்த நடத்தையை சோவியத் அரசின் ஒரு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கண்டித்தார். அதற்குப் பதிலடியாக அன்றைய தலைவரான ஸ்டாலின், “உனக்குப் போர் வீரனின் மனம் புரியவே புரியாதா? அவன் அவனுடைய தாய் மண்ணை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தூரம் தள்ளி இருக்கிறான். நெருப்பிலும் இரத்தகளறியிலும் மரணத்திலும் புரண்டு வருகிறான். வரும் வழியில் பெண்களோடு சல்லாபிக்கும் சப்பை சங்கதி இது! இந்தக் கொண்டாட்டத்தை உணராவிட்டால் நீ கம்யூனிஸ்ட்டே அல்ல!” 1945-’46ல் இந்த வல்லுறவின் விளைவாக இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட (ருஷியக்) குழந்தைகள் ஜெர்மனியில் பிறந்து இருக்கிறார்கள்.
என்ன ஒரு தகவல் உள்ள கட்டுரை இது! வரலாறு என்பதை ஏன் படிக்கிறோம் என்று கேட்கத் தோன்றுகிறது. அதில் எங்கும் ரத்தக் களறியும், கடும் வன்முறையும், நெஞ்சில் ஈரமே இல்லாத, கருணையே இல்லாத மானுட நடத்தையும்தான் தென்படுகின்றன என்று சில நிமிடங்கள் தோன்றும். அது முற்றிலும் பிரமை அல்ல. ஆனால் அது ஒன்றே முழு உண்மையும் இல்லைதான்.
[stextbox id=”info” caption=”காவல்துறை – உங்கள் நண்பன்?”]
காவல் துறையினரால் கொல்லப்பட்டவர்களை அமெரிக்கா கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. போலீஸ் கொலைகள் மூடுபனியாக இருப்பதை மாற்றுவதும் எளிதாக இல்லை. இந்தக் கேவலத்தை தன் நாட்டில் வைத்துக் கொண்டு, இந்தியாவுக்கு வந்தவர், மதச் சகிப்புத்தன்மையை இந்தியா வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று போதனை செய்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. என்னவொரு பொய்மை, அபத்தம், அசட்டுத்தனம், ஏகாதிபத்தியத்தின் கூஜாவைத் தூக்கும் புத்தி. இதோ அமெரிக்க அரசின் அற்பமான செயல் திறன் பற்றிய ஒரு கட்டுரை. இதில் கருப்பர்களை அமெரிக்காவின் 50 மானிலங்கள் எப்படிக் காக்கை குருவி போல சுட்டுத் தள்ளிக் கொண்டு அந்தக் கணக்கைக் கூட காட்டாமல் தப்பிக்கின்றன என்பதை ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை எழுதுகிறது. அந்த நாட்டின் ஒளிபரப்பு அமைப்பும் இந்தியாவைக் கேவலப்படுத்த என்ன வாய்ப்பு என்று தேடும் ஒன்றுதான். பிரிட்டனின் அற்பத்தனங்களைப் பற்றி வேறேதோ நாடுதான் எழுதவோ, தொலைக்காட்சிப் படமாக எடுக்கவோ வேண்டி இருக்கும்,
http://www.theguardian.com/us-news/2015/mar/18/police-killings-government-data-count
[/stextbox]