[stextbox id=”info” caption=”மூளைச் சலவை: புத்தக எரிப்பு”]
சவுதி அரேபியாவில் கருத்து வேறுபாடு கொண்ட ப்ளாகருக்கு 1000 கசையடி வழங்கிய ‘நீதி’ முறையைப் பார்த்தோம். அது ஏதோ வஹ்ஹாபியத்தின் வழக்கமான பயங்கரம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் வஹ்ஹாபியத்தின் இன்னொரு குரூர முகமான, செயல் திட்டமான ஐஸிஸ் எனப்படும் பயங்கரம் பல்லாயிரக்கணக்கான மேற்காசிய மக்களைக் கொன்றது, பல பத்திரிகையாளர்களைக் கொன்றது, பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களைச் சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றது, தலையை வெட்டிக் கொன்றது எல்லாம் போக, மிச்ச நேரத்தில் பொழுது போவதற்காகச் செய்யும் இன்னொரு அருமையான நடவடிக்கை. புத்தகங்களை அழிப்பது, புதைப்பது.
என்னவொரு அருமையான நடவடிக்கை. இதைத்தான் சீனாவுக்குச் சென்றாவது கற்போம் என்று ஒரு மூதாதை சொன்னாரென்று பெருமையாகத் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர் அந்த இசத்தின் ஆதரவாளர்கள். கருத்து சுதந்திரத்துக்காகவும் கொடி பிடித்துத் தெருவில் செல்கிறவர்கள் இவர்களே.
அவர்கள் எம் மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என்று பசப்பல் பிரச்சாரம் செய்தாலும், தொடர்ந்து இங்கிருந்து ‘போராளிகள்’ ஐசிஸ் இயக்கத்தில் சேர ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகத்தையே சுடுகாடாக ஆக்குவதற்கு அத்தனை அவசரம். கோபானி நகரத்தை எப்படி உருக்குலைத்திருக்கிறார்கள் இந்தப் பயங்கரக் கோமாளிகள் என்று படங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியும் இங்கு என்ன சொல்கிறோம் என்பது.
ஆனால் அந்தக் கருப்புக் கொடியைத் தம் தந்தை நாட்டுக் கொடி என்று தழுவும் இந்திய மூடர்களுக்கு இந்தக் கண்டனம் புரிய வாய்ப்பிருக்கிறதோ?
[stextbox id=”info” caption=”விபத்தா? கொலையா?”]
வெட்கக் கேடு அமெரிக்காவில் தினம் நடக்கிறது. இந்த லட்சணத்தில் அதன் அதிபர் இந்தியாவுக்கு ஜன நாயகம் என்பது என்ன என்று பாடம் படித்துக் கொடுக்க முயல்கிறார். கடந்த வருடத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நபர்களை அமெரிக்க காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சமீபத்தில் பல மாதங்களில் பல மா நிலங்களில் கருப்பின இளைஞர்கள், வளர்ந்தவர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோரை, ஆயுதமேந்தாதவர் என்று தெரிந்தும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
அனேகமாக அனைத்துக் காவல் படையினரும் ஒரு கொலைக்கும் எந்தத் தண்டனையும் பெறவில்லை. சமீபத்தில் ஒரு ஏழு வயதுச் சிறுமி, தூங்கிக் கொண்டிருந்தவளைப் போலிஸ்காரர் சுட்டுக் கொன்றிருக்கிறார், ஒரு தண்டனையும் இல்லை என்பதோடு அவர் மீது எந்த வழக்கும் போடப் போவதில்லை என்று அரசு வழக்கறிஞர் தீர்மானித்திருக்கிறார்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”கேளிக்கையா x இனவெறியா”]
வெள்ளையர் நாகரீகம் ஏதோ மிக்க உயரத்தில் இருப்பதாக நம் நாட்டு இங்கிலிஷ் பாஷையை மட்டும் பேசும் உயர்குடி மக்களிடம் ஒரு சிந்தனை உண்டு. இவர்கள் பன்னாட்டரங்கில் இந்து ஃபாசிஸம், இந்து தேசியம் என்னும் அடக்கு முறை என்று தொடர்ந்து கட்டுரைகள் எழுதி, தாம் எழுதிய கட்டுரைகளுக்குத் தாமே பாஷ்யங்கள் எழுதிக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் தொண்டரடிப்பொடிகள் பற்பல இந்திய மொழிகளில் ‘உயரிலக்கிய’ இதழ்களில் அதே கருத்துகளை வேறு விதமாகக் கக்கிக் கொண்டிருப்பார்கள். அதாவது செமிதிய மதங்கள்- பாலைவனத்துக் கள்ளிகளும், ஜெர்மன்/ரஷ்ய/சீனக் கருத்துப் பாலைகளில் தாடிக்கார யூதரிடம் இருந்து உருவாகி பற்பல வன்முறையாளர்களால் உருக்கி உருக்கி வார்க்கப்பட்ட ஒரு இரும்பு சுத்தியல் மதமும் – மனித நாகரீகத்தின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி, இந்து நாகரீகமும் சிந்தனையும் கொடுங்கோல் அடக்குமுறைகள், பிற்போக்குவாதிகளின் அழியப் போகும் மரண ஓலம் என்று கட்டுரைகளை எழுதி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே இன்னொரு செமிதிய மதத்தின் பயங்கர முகம் கந்தலாகக் கிழிக்கப்பட்டு தொங்க விடப்படுகிற கட்டுரை ஒன்றைப் பார்க்கலாம். உலகுக்கு ஜனநாயகம் என்பதே தங்கள் கொடை என்று இந்த நாட்டின் அதிபர் பல நாடுகளுக்குச் சென்று பறை சாற்றி வந்திருக்கிறார். உள்நாட்டில் அவர் மீது அவரது இனத்தைச் சொல்லிச் சொல்லி வெள்ளையருக்கு வெறியை ஏற்றி நாடாளுமன்றத்தின் அனைத்து அவைகளிலும், நாட்டின் உச்ச நீதிமன்றத்திலும் இனவெறியரே பெரும்பான்மையாக ஆகி இருப்பது இந்த கருப்பின அதிபருக்கும் தெரியும், ஆனால் என்ன செய்வது, நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும். எனவே தம் நாடு ஜனநாயக ஜோதி என்று இந்தியாவுக்குப் பாடம் நடத்தி விட்டுப் போயிருக்கிறார். அவர் இங்கு பாடம் நடத்தும் அதே வேளையில் எதிர்க்கட்சியின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தம் இனவெறியின் எந்தக் கோரைப் பல்லையும் மறைக்க இனியென்ன தேவை என்ற மிதப்பில் கருப்பினத்து மக்கள் மீது இழிவைச் சுமத்திப் பேசி வருகிறார். அந்த மிதப்பை எவாஞ்சலியம் என்ற செமிதிய மதப்பிரிவின் உள்ளார்ந்த கருத்தியல் என்று இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது. இனவெறியில் ஊறி வளர்ந்தது எவாஞ்சலியக் கிருஸ்தவம் என்று வாதிடுகிறது இந்தக் கட்டுரை.
http://goo.gl/8PHc6N
[/stextbox]
[stextbox id=”info” caption=”பேரழிவு ஆயுதங்களும் ஈராக் இரகசியங்களும்”]
முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்றொரு சொல்லாக்கத்தைக் கேட்டிருப்பீர்கள். இது சத்த ஒழுங்குக்காக உருவாக்கப்பட்ட சொற்றொடர் என்றாலும் முத்தண்ணா என்பது இப்போது ஒரு வித பீதியால் தொடர்ந்து செலுத்தப்பட்டு அனைத்தையும் பத்திரப்படுத்தும் நபரைக் குறிக்கச் சுட்டப்படுகிறது என்பது நமக்குத் தெரியும். இந்த முத்தண்ணாவுக்கு சமீபத்தில் சிறிது பிராபல்யம் கிட்டி இருக்கிறது. ஆனால் இது அந்தச் சொல்லுக்கு மட்டுமே, ஆளுக்கு அல்ல. முத்தண்ணா என்பது ஒரு இடத்தின் பெயர். அங்குதான் சத்தாம் ஹுசைனின் ரசாயன போர்த்தளவாடங்கள் தயாரிக்கப்பட்டன என்று அமெரிக்கர்கள் சொல்கிறார்கள். அங்கு இன்னும் பல ஆயுதங்கள், கருவிகள் கிடப்பதாகவும், அவற்றைச் சமீபத்தில் ஐசிஸ் எனப்படும் இஸ்லாமிசப் பயங்கரர்கள் கைப்பற்றியதாகவும் அமெரிக்கர்கள் சொல்கின்றனர். அப்படிக் கைப்பற்றி பழைய தளவாடங்கள, மேலும் ஆயுதங்களை ஒரு நபர் ஒருங்குபடுத்திக் கொண்டிருந்ததாகவும் அந்த நபரைச் சமீபத்தில் அமெரிக்கர்கள் கொன்றதாகவும் அமெரிக்க ஊடகத்தளம் ஒன்று சொல்கிறது. அது குறித்த செய்தி இதோ.
இதில் முத்தண்ணா என்ற இடத்திலிருந்து ரசாயனப் போராயுதங்களைச் சேகரித்தவர் முன் ஜாக்கிரதைக்காரரா, அல்லது அவரைக் கொன்ற அமெரிக்கர்களா என்பது மட்டும் புதிராக உள்ளது. கொலைக்களமாக மொத்த மேற்காசியாவும் ஆகி இருக்கையில், அதே போல இந்தியாவையும் ஆக்கி விடத் துடிக்கும் எத்தனை ஆயிரம் பேர்களோ இங்கு அரசியலிலும், சமூக அமைப்புகளிலும் உலவிக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே பொது எதிரி- இந்து சமுதாயம். என்னவொரு கருத்துக் குருடர்கள் இவர்கள்!
[/stextbox]
[stextbox id=”info” caption=”வயலா? வாய்க்காலா? வாங்கிப் போடு!”]
உலகில் உண்டாகும் உணவில் ஐந்தில் ஒரு பங்கை சீன மக்கள் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால், சீனாவிடம் உலகின் மொத்த வயல்வெளிகளில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருக்கிறது. இந்த இடைவெளியை எவ்வாறு சரிசமன் செய்வது? உலகெங்கும் சென்று நிலங்கள் வாங்குகிறார்கள். சவூதி அரேபியாவிடமும் இதே நிலைதான். எண்ணெய் வளம் இருக்கிறது. ஆனால், நீர்வளம் இல்லை. இவர்களைப் போன்றோர் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் அளவு கொண்ட வயல்வெளிகளை உலகெங்கும் வாங்கித் தள்ளி இருக்கிறார்கள். மொத்தமாக விளைந்த நெற்குன்றுகளை வாங்காமல், ஏன் இப்படி நிலங்களில் முதலீடு செய்கிறார்கள்? ஆப்பிரிக்காவிலும் இந்தோனேஷியாவிலும் விளையும் பயிர்கள் உள்ளூர் பசியைத் தீர்க்குமா அல்லது அயல்நாட்டுக்கு காணமல் போகுமா என்பதை இந்த இரண்டு கட்டுரைகள் அலசுகின்றன.
http://www.vox.com/2014/11/20/7254883/farmland-trade-land-grab
http://voices.nationalgeographic.com/2013/09/25/countries-like-china-want-foreign-farm-land/
[/stextbox]
[stextbox id=”info” caption=”வாழ்வின் பொருள் என்ன?”]
”மனித இருப்பின் அர்த்தம்” என்னும் தலைப்பில் எட்வர்டு ஓ வில்ஸன் புத்தகம் எழுதி இருக்கிறார். இது வரை இருபது நூல்கள் எழுதியிருக்கிறார்; இரு முறை புலிட்ஸர் பரிசு பெற்றிருக்கிறார். பொதுச்சேவைக்கும் அறிவியல் துறையில் பங்களிப்பிற்கும் பற்பல விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார். தன் ஆராய்ச்சியின் தீவிரத்தன்மையைச் சொல்லும் கரடுமுரடான புத்தகமாக இல்லாமல், எளிமையாக, சாதாரணர்களைச் சென்றடையும் வகையில் “The Meaning of Human Existence,” நூலை வழங்கியிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மூவரில் இருவர், கடவுளன்றி மனிதன் உருவாகவில்லை என்பதில் திடமான நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். இதுவரை நாம் கண்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்களையும் விஞ்ஞான வளர்ச்சியையும் தவிடுபொடியாக்கும் இந்த மாயை நீங்க இந்தப் புத்தகம் எழுதியிருக்கிறார். அவருடைய பேட்டியில் இருந்து, ஒரேயொரு மேற்கோள் இங்கே:
”நாம் எங்கிருந்து வந்தோம்? நான் என்பது எது? நாம் எங்கே போகிறோம்? – தத்துவவியலும் இறைநம்பிக்கையும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடை கொடுக்க முயல்கின்றன. மற்ற இனக்குழுக்களை விட, தான் சார்ந்த மதத்தின் விடையே சிறப்பானது என்பதை நிறுவ, அதிசக்தியாளர்களை ஒவ்வொரு மதமும் முன்னிறுத்துகிறது. அமெரிக்கத் தேர்தலில் வெல்ல வேண்டுமானால், தனக்கு தெய்வ விசுவாசம் இருப்பதாக பறைசாற்ற வேண்டும். அந்த நம்பிக்கை எவ்வளவு வினோதமாக இருந்தாலும், ஏதாவது ஒரு மதத்தை சொல்லியே ஆக வேண்டும். இதன் மூலம் ‘நான் இன்ன பழங்குடியைச் சார்ந்தவர்’ என்பதை அறிவிக்கிறார்கள். அந்தப் பழங்குடி எத்தனை தாராளமாக இருந்தாலும், மற்றவர்களோடு அன்போடுப் பழகினாலும், தன்னைத் தவிர மற்ற பழங்குடிகளை மட்டமாகவேப் பார்க்கின்றன. நம்முடைய குருட்டுப்பக்தி நம்மை பாதாளத்தில் தள்ளுகிறது.”
[/stextbox]