மூன்றாம் பகுதியின் துவக்கங்களில், ரஸ்கோல்னிகோவ் தன் சகோதரி துன்யா லூஜினை மணக்கவிருப்பதை மிகத் தீவிரமாக எதிர்க்கிறான். அடுத்து வரும் பகுதிகளில் காவல்துறை அதிகாரி போர்பிரி பெட்ரோவிச் குற்றத்தின் காரணிகள் பொருளாசையல்ல, அகச்சிக்கல்கள் என்பதை மிகச் சரியாகவே அவதானித்தவராக, ரஸ்கோல்னிகோவ் ஆறு மாதங்கள் முன்னர் எழுதியிருந்த “குற்றம் குறித்து” என்ற கட்டுரை தொடர்பாக அவனை விசாரிக்கத் துவங்குகிறார்.
இதன்பின், ரஸ்கோல்னிகோவால் அரங்கேற்றப்பட்ட குற்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்ற விசாரணைக்குத் திரும்புகிறது கதை.
பயன்முதற்கொள்கைகளிலும் (utilitarian) தர்க்கப் பயிற்சியிலும் தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் போர்பிரி அற்புதமாக உருவம் பெற்றிருக்கும் ஒரு பாத்திரம். குற்றத்தைத் துப்புத் துலக்கும் அவன் இப்போது ரஸ்கோல்னிகோவைக் கைப்பற்றத்தக்க வலையொன்றை பொறுமையாகப் பின்னத் துவங்குகிறான். இந்த அறிவுப் போராட்டத்தில் இவ்விருவரும் பயன்படுத்தும் உவமானங்களும் கூட ஒன்றுடனொன்று பொருந்துவனவாக இருக்கின்றன. போர்பிரியைச் சந்திக்கவிருப்பது குறித்த தன் நிலையை ரஸ்கோல்னிகோவ், “மெழுகின் தீபத்தை நோக்கிப் பறக்கும் விட்டில்,” என்று உருவகித்துக் கொண்டால், நான்காம் பகுதியில்,போர்பிரி “அவன் என்னை விட்டு விலகியோட மாட்டான்… மெழுகுவர்த்தியின் அருகிலுள்ள விட்டிலை நீ எப்போதேனும் பார்த்ததுண்டா?” என்று கேட்கிறான்.
இருப்பினும், பின்னொரு சமயம் ஒரு வணிகன் அவனைக் ‘கொலைகாரன்’ என்று குற்றம் சாட்டுவதும், இப்போது போர்பிரி செய்யும் விசாரணையும் கிறுகிறுக்க வைக்கும் மயக்க நிலையை நோக்கி ரஸ்கோல்னிகோவின் எண்ணங்களைச் செலுத்துகின்றன. ஒரு வழியாக அவன், இத்தனை காலம் வீண் நினைப்புகளில் எண்ணியிருந்ததற்கு மாறாக, தான் மெய்யாகவே “மாமனிதன்” அல்ல என்ற முடிவுக்கு வருகிறான். இதன் தொடர்ச்சியாகவே நெப்போலியனைக் குறித்து “அனைத்தும் அனுமதிக்கப்பட்ட எஜமானன், அவன் டூலோனை முற்றுகையிடுகிறான், பாரிஸ் நகரைக் கசாப்புக் கடையாக்குகிறான், எகிப்தில் ஒரு படையையே மறந்து போகிறான், மாஸ்கோ படையெடுப்பில் ஐந்து லட்சம் வீரர்களைக் காவு கொடுக்கிறான்… அவன் இறந்ததும் அவனுக்கு நினைவுச்சின்னங்கள் எழுப்பப்படுகின்றன என்னும்போது… எல்லாம் இவ்வாறே அனுமதிக்கப்பட்டதாகிறது. இல்லை, இப்படிப்பட்டவர்கள் ரத்தமும் சதையுமாகச் செய்யப்பட்டவர்களல்ல, வெண்கலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவர்கள்,” என்று சொல்லிக் கொள்கிறான்.
ஆனால் அவனது அகங்காரம் அதன் பொய்த்தர்க்கங்களைத் தொடர்கிறது – மூதாட்டி விவகாரம் ஒரு வித தற்காலிக நோய் நிலை…அவளைத் தாண்டிச் செல்லும் அவசரத்தில்… அவன் கொன்றது ஒரு மனித உயிரை அல்ல , ஒரு கொள்கை வெற்றிபெறும் சாத்தியத்தை….”தாண்டிச் செல்வதில்” அவன் தனிப்பட்ட முறையில் அடைந்த தோல்வி, அவனது கொள்கையைப் பொய்ப்பிப்பதில்லை. இவ்வாறு அவன் தனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் உலகளாவிய ஆனந்தம் என்ற :அழகான, மனதுக்கு உகந்த” லட்சியத்தை அவனது எண்ணங்களின் கொந்தளிப்பு ஏளனம் செய்து முடிவில் தன்னை இகழ்ந்து கொளவதில் வந்து நிற்கிறது (“நான் அழகியல் சார்பு கொண்ட உண்ணி”).
சிக்கல்கள் நிறைந்த இந்தப் பகுதி ஒரு கனவின் புதிர்த்தன்மையுடன் நிறைவடைகிறது – கனவில்அவன் மீண்டும் கொலை செய்கிறான், அவன் பலி கொண்டவளது ஆவி, அவனது கோடரியின் ஒவ்வொரு வீச்சுக்கும் கீச்சிட்டுச் சிரித்து கொலை முயற்சியை முறியடிக்கிறது.
இந்தக் கனவின் ஓசைகளற்ற பின்னதிர்வாய், பேயொன்று தோன்றியது போல், ஆர்கடி இவானோவிச் ஸ்விட்ரிகெய்லோவ் அவன்முன் தோன்றி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஸ்விட்ரிகெய்லோவ் பீட்டர்ஸ்பர்க் வந்திருப்பது ரஸ்கோல்னிகோவின் சகோதரி துன்யாவைத் தேடி. ஸ்விட்ரிகெய்லோவ் இளம் பெண்களின்பால் மோகம் கொண்ட பைரனிய உருவம் (Byronic figure), இரக்க உணர்ச்சிகளற்ற புலனின்ப விழைவாளன்.
அவன் ரஸ்கோல்னிகோவ் என்ற அகங்காரி ஸ்டீராய்டுகளால் கொழுக்கப்பட்ட கடைநிலை உருவம். விமரிசகர் ப்ளூம், ஷேக்ஸ்பியரின் கிங் லியரில் வரும் எட்மண்டுடன் இவனை ஒப்பிடுகிறார். உங்களுக்கு நினைவிருக்கலாம், எட்மண்டுதான், “இவர்களில் யாரை நான் சுகிக்கட்டும், இருவரையுமேவா, ஒருத்தியை மட்டுமா? அல்லது இருவரையுமே சுகிக்காமல் விட்டுவிடவா?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்பவன். இந்த ஒப்பீட்டை இன்னும் ஓரடி எடுத்துச் சென்று, தந்தை பெயர் தெரியாதவனாய்ப் பிறந்த எட்மண்ட் போல், தன் பிறப்புக் கணத்தில் ஸ்விட்ரிகெய்லோவ் உற்ற காயம் என்ன என்று நாம் யோசிக்க முடியும்.
கோர்மாக் மக்கார்த்தியின் கடும் அழகு கொண்ட Blood Meridian நாவலில் வரும் ஜட்ஜ் ஹோல்டனின் நோக்கமற்ற உளத்துணிவின் நிர்வாணத்தை இவனது இருண்மை நமக்கு நினைவூட்டுகிறது. ரஸ்கோல்னிகோவ் இன்னும் இப்புறத்தில்தான் இருக்கின்றான் என்றால், ஸ்விட்ரிகெய்லோவ், “தாண்டிச் சென்றவன்” என்பது தெளிவாகவே தெரிகிறது.. இவர்களிருவரும் நித்தியத்துவத்தை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டாலே போதும், ஒரு ஸ்விட்ரிகெய்லோவ்வாக மாறவிரும்புவதற்கும்கூட ரஸ்கோல்னிகோவ் இன்னும் எவ்வளவு தொலைவு சென்றாக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும்.
”கைப்பற்ற முடியாத தத்துவமென்று கால முடிவிலியை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பிரமாண்டமான ஏதோவென்று, பிரமாண்டம்! அதற்கெல்லாம் மாறாக, அதோ அங்கே ஒரு சிறிய அறை திடீரென்று தோன்றுவதாக நினைத்துக்கொள், கிராமத்தில் இருக்கும் பொதுக் குளியலறை போன்ற ஒன்று, அது சாம்பல் பூத்துக் கிடக்கிறது, அதன் மூலைகள் அனைத்திலும் சிலந்திகள், அதுதான் முடிவிலியின் முழுமையும். அப்படிப்பட்ட ஒன்றுக்காக நான் சில சமயம் ஆசைப்படுகிறேன்.”
“ஆனால் நிச்சயம், நிச்சயமாக உன்னால் அதைக் காட்டிலும் நியாயமும் ஆறுதலும் கொண்ட எதையேனும் கற்பனை செய்து கொள்ள முடியும் தானே!?” என்று அடிபட்ட உணர்வோடு ரஸ்கோல்னிகோவ் உரக்கக் கேட்கிறான்.
ஸ்விட்ரிகெய்லோவைச் சந்தித்துச் சிறிது காலம் சென்றபின் தன் குடும்பத்தை நண்பன் ரஜூமுகின் வசம் ஒப்படைத்துவிட்டு, சோன்யாவைத் தேடிச் செல்கிறான் ரஸ்கொல்னிகோவ். அவள் ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகளைத் “தாண்டிச் சென்றிருப்பதை” தனது கொலைகார மீறலோடு ஒப்பிட்டு, இரண்டுக்குமிடையே பொய்யான ஒரு சமன்பாட்டை உருவாக்கி, தன் பார்வைக்கு இணக்கமாக அவளை வளைக்கப் பார்க்கும் ஆணவ முயற்சியை அவன் இனித் துவங்குவான்.
இவ்வாறாக எப்போதும் தர்க்கத்தில் மிகை ஈடுபாடு கொண்ட அகங்காரம் அவனது இருட்செயலைத் தொடர்ந்து அலங்கரிக்கவே செய்கிறது என்றாலும், உணர்வு மேலிட்ட அவனது மறுபக்கம், சோன்யாவின் கருணைக்கு அடிபணிகிறது- முடிவில் அவன் அவளது பாதங்களை முத்தமிடுகிறான் (நான் உன்னை வணங்கவில்லை, மானுட துயரனைத்தையும் வணங்கினேன்”). இதுவே, புதிய ஏற்பாட்டின் நான்காம் வேதாகமத்தில் லாசரஸ் பகுதியை, ஒரு மெழுகின் வெளிச்சத்தில் ரஸ்கோல்னிகோவுக்காக சோன்யா வாசித்துக் காட்டும் அந்த புகழ்பெற்ற காட்சிக்கு இட்டுச் செல்கிறது.. நபகோவ் அவ்வளவு வெறுத்த , (“எந்த ஒரு மெய்க்கலைஞனும், மெய்யான ஒழுக்கவாதியும்… போலிச் சொற்பெருக்கின் பெரும் வளியில் இவ்விருவரையும் அருகருகே வைத்திருக்க முடியாது, ஒரு கொலைகாரனும் யாரும்?- தெருவில் மேயும் பாவப்பட்ட ஒரு பெண், முழுக்கவே வேறுபட்டவர்களின் சிரம் அந்தப் புனித நூலின் மேல் தாழ்ந்திருக்கிறது”) இந்தக் காட்சி தாஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வை எழுதிய ஜோசப் பிராங்க்குக்கு “ரெம்ப்ராண்ட் எட்சிங்க்கின் ஒளியற்ற பக்தி”க்குரிய எளிமை கொண்டுள்ளதாய் தோற்றம் தருகிறது
ரஸ்கோல்னிகோவ் பக்தியைத் தெளிவின்றி அணுகுகிறான்- தர்க்கமறிந்த அவநம்பிக்கை, பக்தியில் தன்னை ஆழ்த்திக் கொள்ள விரும்பும் அவனது நாட்டத்தை எப்போதும் சாரமற்றதாக்குகிறது (“புனித முட்டாள்கள்” என்று ஏளனம் செய்பவன் அவன்). தனது சகோதரி விதியிலிருந்து இறைவனின் அருளால் மீட்சி பெறுவாள் என்ற சோன்யாவின் நம்பிக்கையை “அவர்களுக்கே உரியது சொர்க்கத்தின் அரசு” என்று ஏளனம் செய்து குரூரமாய் நசிக்கும்போது அவனது நிலையற்ற அகம் நம்பிக்கை வறட்சியை நோக்கிச் சாய்கிறது. “என்னதான் செய்ய வேண்டும்? என்ற சோன்யாவின் உணர்ச்சி மேலிட்ட இறைஞ்சுதலுக்கு அவன், “உடைத்தாக வேண்டியதை உடைத்தாக வேண்டும், துயரை நாமே ஏற்றாக வேண்டும்… விடுதலையும் அதிகாரமும், அனைத்துக்கும் மேல், அதிகாரம்! நடுங்கும் உயிர்கள் அனைத்துக்கும் மேல், கரையான் புற்று முழுமைக்கும் மேல் அதிகாரம்!” என்று சொல்கிறான். லிசாவேதாவைக் கொன்றவன் யாரென்ற உண்மையை அடுத்த நாள் சொல்கிறேன் என்று உறுதிகூறி விடைபெறுகிறான் அவன்.
இந்த அத்தியாயம் முழுமையுமே கிறித்தவத் தத்துவ மரபிலுள்ள, எதிர்பார்ப்புகளற்ற அன்புக்கும் அகங்காரத்தின் காரியார்த்த அறத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமையை நாடகீயக் காட்சியாய் சித்தரிக்கிறது. நான்காம் பகுதியின் முடிவில் எதிர்பாராத ஒரு திருப்பம் நேர்கிறது, போர்பிரி ஏறத்தாழ ரஸ்கோல்னிகோவை வீழ்த்திவிடும் தருணத்தில், எங்கிருந்தோ திடீரென்று வரும் நிகோலாய், தானே இரட்டைக் கொலைகளைச் செய்தவன் என்று ஒப்புக் கொள்கிறான். ஆனால் தனது “கோழைத்தனத்தை” அருவெறுப்புடன் திரும்பிப் பார்க்கும் ரஸ்கோல்னிகோவின் “போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை”.
ஐந்தாம் பகுதியில் சோன்யாவை திருட்டு வழக்கில் சிக்க வைக்கச் செய்யும் லூஜினின் பரிதாபகரமான முயற்சி தோல்வியில் முடிந்தபின், ரஸ்கோல்னிகோவ் இந்த விவகாரத்தை ஒரு தார்மீகக் கேள்வியாய் வடிவமைத்துக் கொள்கிறான்: “லூஜின் தொடர்ந்து வாழ்ந்து அருவருக்கத்தக்க செயல்களைச் செய்ய வேண்டுமா, அல்லது காத்ரீனா இவநோவனா சாக வேண்டுமா? இருவரில் யார் சாக வேண்டும் என்பதை நீ எப்படி தீர்மானிக்க இயலும்?” சோன்யா தன் நம்பிக்கை உண்மையானது என்பதில் அசைவற்ற உறுதி பூண்டவளாய் இருக்கிறாள் என்பதால் அவள் இவனது பொறியில் சிக்குவதில்லை. “ஆனால் இறைவன் விதித்திருப்பதை நானறிய இயலாது… யார் வாழ வேண்டும், யார் வாழக்கூடாது என்று முடிவெடுக்கும் இடத்தில் யார் என்னை அமர்த்தியது?” என்று கேட்கிறாள்.
இந்த அறச்சிக்கல்கள் அனைத்தும் மேற்பூச்சு என்பதையும் கொலை செய்த நாள் முதல் தவிர்த்துக்கொண்டிருக்கும் அந்த “அத்தியாவசிய” தருணத்தைத் தள்ளிப் போடும் முயற்சிகள் மட்டுமே என்பதையும் ரஸ்கோல்னிகோவ் உணர்ந்திருக்கிறான். அப்படியே இருந்தாலும் கொலையை ஒப்புக் கொள்ளும் கணமும் அவனது சுமையை இறக்கி வைப்பதாய் இல்லை. “கோடரியைக் கட்டவிழ்த்துக் கொண்டவனாய், கிழவியின் பின் நின்றபோது, இனி ஒரு கணமும் இழப்பதற்கில்லை என்று உணர்ந்த” அந்தக் கணம் போலவே அன்று செய்த கொலையை ஒப்புக்கொள்ளும் இந்தக் கணமும் மிகக் கொடூரமானதாய் இருக்கிறது.
குற்றத்தை ஒப்புக்கொள்ளும் இந்த இறுதி கணங்களின் தடுமாற்றத்தின் இடையே, சோன்யாவின் இதயத்தை ஒரு பேரச்சம் பீடிக்கிறது, பிணம் போல் வெளிறிய அவனது முகத்தைக் காணும்போது அவள் உண்மையை ஊகித்து விடுகிறாள். நேரடியாக உண்மையைச் சொல்லப் போராடி தோற்கும் ரஸ்கோல்னிகோவ், ஒருவழியாய் வார்த்தைகளை உதிர்க்கிறான் (“இங்கே பார்”). அப்போது சோன்யாவின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் கோடரியோடு அவன் நெருங்கியபோது லிஜாவெத்தாவின் முகத்தில் வெளிப்பட்ட உணர்ச்சிகளை அவனுக்கு நினைவூட்டுகின்றன, அப்போதுஅவளது முகத்தில் ஒரு குழந்தையின் மிரட்சியைப் பார்க்கிறான். அவன் மேல் விழுந்து அவன் கழுத்தைக் கட்டி அவனை அணைத்துக் கொள்கிறாள், “யாருமில்லை, இவ்வுலகெங்கிலும். உன்னைவிட வருத்தமானவர்கள் யாரும் இப்போதில்லை,” என்று சொல்கிறாள். இதற்கு முந்தைய அத்தியாயங்கள் நெடுக கூடிக்கொண்டிருந்த இறுக்கத்தைக் கட்டவிழ்க்கும் இந்த விடுதலைத் தருணம் கிறித்தவ எளிமையாய் வெளிப்படுகிறது. “அவன் நெடுங்காலமாக அறியாதிருந்த உணர்வு அவனது ஆன்மாவை நிறைத்து அக்கணமே அதை மென்மையாக்கிற்று. அவன் அதை எதிர்க்கவில்லை, கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் இரண்டு உருண்டு அவன் இமைகளில் தொக்கி நின்றன”.
கலவியின் உச்சம் போலவே தளைகள் அவிழும் இக்கணமும் தக்கவைத்துக் கொள்ள இயலாத ஒன்றாக அமைகிறது. ரஸ்கோல்னிகோவின் தர்க்கிக்கும் அகங்காரம் இப்போது மேலோங்கத் துவங்குகிறது. தானும் அவனுடன் இணைந்து கடும் தண்டனை அனுபவிக்கத் தயாராக இருப்பதாய் சோன்யா உறுதி கூறும்போது, ரஸ்கோல்னிகோவின் சுற்றிச் சுழலும் விளக்கங்கள் இறுதியாய், இத்தனை நாட்களாய்விசாரணை அதிகாரி தேடிக் கொண்டிருந்த அவனது உந்துவிசையின் மையத்தை ஒரு வழியாய் வந்தடைகின்றன. “நான் துணிந்து ஒரு செயலைச் செய்ய விரும்பினேன்… கொன்றேன்… துணியத்தான் நினைத்தேன், சோன்யா, அதுதான் காரணமெல்லாம்”என்று கூறுகிறான். இப்போது முடிவாய் இதுவரை நடித்ததுபோல், “மானுடநல விரும்பியாய்” அல்லாது, சுயவிழைவில், “சும்மா”“தனக்காக மட்டுமே” “போலித் தருக்கங்களற்று கொல்வதை” விரும்பியவனாக தன்னை உணர்ந்து கொள்கிறான்.
உண்மை வெளிப்படும் தருணத்தைச் சிந்தனையைக் கொண்டே அடையும் அதே கணத்தில், சோன்யாவுடனான அவனது உரையாடலின் வாதையைக் கொண்டு உண்மை உள்ளக்கொந்தளிப்புடன் அடையப்படுகிறது என்ற உள்வெளி இயக்கத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் இக்காட்சியை தாஸ்தவெஸ்கியின் புதின ஜீனியஸின் அளவையாகவே நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
கொலையின் நோக்கத்தை உணர்வது ஒரு விஷயம், ஆனால் அந்த உணர்தலின் தார்மீக பின்விளைவுகளை ஏற்றுக் கொள்வதுவேறு விஷயம், அது ரஸ்கோல்னிகோவுக்கு சாத்தியப்படுவதில்லை. அவனது அகங்காரம் சோன்யாவின் அறிவுரையை ஏற்க மறுக்கிறது, “நாற்சந்தியில் நில், தலை வணங்கு, நீ களங்கப்படுத்திய மண்ணை முத்தமிடு, அதன்பின் நான்கு திசைகளிலுமுள்ள உலகனைத்தையும் தாழ்ந்து வணங்கு, அனைவரும் கேட்க, “நான் கொலை செய்தேன்,” என்று உரக்கச் சொல்” என்கிறாள் அவள்.
ஐந்தாம் பகுதி ஸ்விட்ரிகெய்லோவின் கள்ளச் சிரிப்புடன் முடிவுக்கு வருகிறது. அண்டை வீட்டுக்காரனாக, ரஸ்கோல்னிகோவின் ஒப்புதல் வாக்குமூலம் அனைத்தையும் தான் ஒட்டுக் கேட்டு விட்டதைஸ்விட்ரிகெய்லோவ் வெளிப்படுத்துகிறான்.
oOo
குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து தாஸ்தயெவ்ஸ்கி எழுதி வைத்துக் கொண்ட குறிப்புகளில் பின்வரும் வரையறுத்தல் இருக்கிறது: ஸ்விட்ரிகெய்லோவ் – மிகத் தீவிர நம்பிக்கை வறட்சி, சோன்யா- எட்ட முடியாத நம்பிக்கை, ரஸ்கோல்னிகோவ்- இருவரையும் பேரவாவுடன் பற்றிக் கொள்கிறான்.
இதுவரை கடந்த கால நினைவுகளைப் பின்னோக்கி விவரித்த நாவல் இனி எதிர்காலத்தை நோக்குகிறது, தான் ஒரு கொலைகாரன் என்பதையறிந்த இவ்விரு துருவங்களுக்கிடையேயும் ரஸ்கோல்னிகோவ் ஊசலாடிக் கொண்டிருக்கிறான். சோன்யா அவன் மனம் வருந்தித் திருந்த வேண்டுமென்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள், அவன் தனக்கு அளிக்கப்படும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிறாள். அவன் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி போர்பிரி தன் வலையைத் தொடர்ந்து பின்னுகிறான். இருந்தும் ரஸ்கோல்னிகோவ் நம்பிக்கை வறட்சியைக் கைவிடுவதாயில்லை, அது அவனுக்கு தப்பிச் செல்லும் வழியளிக்கிறது (“தூ, அதைக் காறித் துப்புகிறேன்,” என்கிறான், குற்றத்தை ஒப்புக்கொள்வதைதான் அது என்று அவன் இங்கு சொல்கிறான்).
“நான் ஓடிப் போய்விட்டால் என்ன செய்வாய்?” என்ற ரஸ்கோல்னிகோவின் கேள்வி, மிகச் சிறந்த பதிலைத் தருவிக்கிறது. “மாட்டாய்…” என்கிறான் போர்பிரி, “ஓடிப் போனாலும் நீ தானாகவே திரும்பி வருவாய். நாங்களில்லாமல் உன்னால் இருக்க முடியாது.” அதன்பின், நம்ப முடியாத எதையாவது செய்து, “வேறு மாதிரி” விஷயத்தை முடித்துக் கொள்வதாய் ரஸ்கோல்னிகோவ் தீர்மானிப்பதானால், “விளக்கமான, வெளிப்படையான ஒரு குறிப்பை…” விட்டுச் செல்லச் சொல்கிறான் போர்பிரி, “அதில் கல்லையும் குறிப்பிடுங்களய்யா… இதைவிட அது கௌவரமாக இருக்கும்.”
நீ பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் சொல்லிச் செல், என்று கூறும் போர்பிரி, ரஸ்கோல்னிகோவ் நுண்மையாக்கம் செய்யும் அறத்தின் தூல இயல்பை மீட்டுக் கொடுக்கிறான்- பக்கா பயன்முதல்வாதியான (utilitarian) போர்பிரிஅரூபக் கருத்துக்களைக் கொண்டு ரஸ்கோல்னிகோவ் தன்னை உன்னதப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளைஅவன் இழைத்த குற்றத்தின் லாப நட்ட தடயங்களை நினைவுறுத்தித் தரைதட்டச் செய்கிறான்.
சுதந்திரம் எப்போதும் பறிபோகலாம் என்ற அச்சுறுத்தலில் ரஸ்கோல்னிகோவ், தன் இயல்பு நிலையான நம்பிக்கை வறட்சிக்கே திரும்பி ஸ்விர்டிகிலோவிடம் விரைகிறான் (“அவனுக்கு ஏதோ ஒரு ரகசிய சக்தி இருக்கிறது”).. அவனோ, ரஸ்கோல்னிகோவின் சகோதரி துன்யா மீது தான் கொண்டிருக்கும் அளப்பரியா ஒருதலைக்காதலைப் பற்றி பேசுகிறான் (“அன்புக்குரிய உன் சகோதரியின் கண்கள் சில சமயம் எப்படி ஜொலிக்கின்றன தெரியுமா… அவளது உடையின் சலசலப்பு என்னால் தாள முடியாததாக இருக்கிறது…”). ஆனால் அவன் பதினாறு வயதுகூட நிறைவடையாத ஒரு பெண்ணைத் தான் மணக்கவிருப்பதையும் அம்பலப்படுத்துகிறான் (“அவளை என் கால்களில் உட்கார வைத்துக் கொள்கிறேன், கீழே இறங்க விடுவதில்லை”). தன்னுணர்வு சற்றுமில்லாத ரஸ்கோல்னிகோவ் (“எங்கள் தீச்செயல்கள் அடிப்படையில் ஒத்த இயல்பு கொண்டவையல்ல”), தார்மீக கோபத்துடன் பேசுகிறான், உடனே ஸ்விர்ட்கிலோவால் மறுக்கப்படுகிறான்: “ஆனால் ஒழுக்கத்தைப் பற்றி இவ்வளவு பேச நீ யார்” போதும் நிறுத்திக் கொள் செல்லம், நான் பாபம் செய்தவன், ஹஹஹா)
இதையடுத்து விரைவில், ஸ்விட்ரிகெய்லோவின் அடுக்ககத்தில் துன்யாவுக்கும் ஸ்விட்ரிகெய்லோவுக்குமிடையே நிகழும் அசாதாரணக் காட்சியின் தரிசனம் நமக்கு அளிக்கப்படுகிறது. ரஸ்கோல்னிகோவ் செய்த கொலை குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் கடிதத்தைத் துன்யா திருப்பித் தருகிறாள். அவன் இந்தக் கடிதத்தைப் பிணையாய் கொண்டு அவளை மிரட்டி, தன் மௌனத்தின் பரிசாக அவள்\ கரம் பற்ற முயற்சி செய்கிறான். தான் இங்குச் சிறைப்படுத்தப்படக்கூடும் என்று உணர்ந்தவளாய், ஸ்விட்ரிகெய்லோவ் அவளைப் பலவந்தப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து அவள் ரிவால்வரை எடுத்துச் சுடுகிறாள்- இரு தோட்டாக்கள் குறிதவறித் தெறிக்கின்றன. ஸ்விட்ரிகெய்லோவ் அடுத்த தோட்டாவுக்குக் காத்திருக்கையில், (“உன்னிடம் இன்னொரு தோட்டா இருக்கிறது, அதைச் சரியாகச் சுடு, நான் காத்திருக்கிறேன்”), துன்யா துப்பாக்கியைத் தூக்கி எறிகிறாள். இதையடுத்து நடக்கும் உரையாடல் ஸ்விட்ரிகெய்லோவின் தலைவிதியை இறுதியாகத் தீர்மானித்து விடுகிறது:
“அப்படியானால் நீ என்னை விரும்பவில்லையா?” என்று அவன் மெல்லக் கேட்டான்.
இல்லை என்று தலையசைத்தாள் துன்யா.
“அப்படியானால்… நீ.. இனி எப்போதும்…” என்று அவன் விரக்தியில் கிசுகிசுத்தான்.
“கிடையாது,” என்று கிசுகிசுத்தாள் துன்யா.
ஸ்விட்ரிகெய்லோவின் ஆன்மா பயங்கரமான ஒரு ஊமைப் போராட்டக் கணத்தை எதிர்கொள்கிறது, சொல்லவொண்ணா உணர்வுகளோடு அவளைப் பார்க்கிறான் அவன். திடீரென்று பின்வாங்கி, ஜன்னலுக்குச் செல்கிறான், அதன் முன் நின்றுகொண்டு துன்யாவிடம் சாவியை வீசுகிறான். துன்யா கால்வாயை நோக்கித் தப்பியோடுகிறாள். அவன் ரிவால்வரை எடுத்து தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டு, தொப்பியணிந்து வெளியேறுகிறான். பால் போன்ற பனிமூட்டத்தில் அவன் லிட்டில் நேவாவை நோக்கிச் செல்கிறான். அக்கில்லஸ் ஹெல்மெட் அணிந்த ஒரு போர்வீரன் அவனை வழிமறிக்கிறான். தான் அமெரிக்கா செல்வதாகச் சொல்லி, துப்பாக்கியின் குதிரையை அழுத்துகிறான் ஸ்விட்ரிகெய்லோவ்.
எழுத்தாளர் ஜான் பெய்லி, நெருக்கத்தில் கண்டதுபோல் நம்ப வைக்கும் தன்மை கொண்டதாய் இந்நிகழ்ச்சி இருப்பதாகக் கருதுகிறார்- வினோதமான நகைச்சுவைத்தன்மை இதற்கு இருப்பதால் இதிலுள்ள நெகிழ்ச்சி குறைவதில்லை. அவர் பார்வையில், துன்யாவை ஸ்விட்ரிகெய்லோவ் ஒரு தாஸ்தவெஸ்கிய பாத்திரமாகப் புரிந்து கொள்வதில் பிழை செய்கிறான், அவள் அவனைச் சுடத் தவறியதன் பொருள், அவனிருக்கும் உலகின் தர்க்கத்துக்கு அவள் கீழ்ப்படிகிறாள் என்று பொருள்படுத்திக் கொள்கிறான். ஆனால் அவனது துரதிருஷ்டவசம், துன்யா காத்திரமானவள், தால்ஸ்தாயின் நடாஷா போன்ற மெய்ம்மை கொண்டவள். இவ்விருவருக்குமிடையேயுள்ள வேறுபாடு வெளிப்படும் கணம்தான், அவன் இறுதி வெறுமையையும் அபத்தத்தையும் உணரும் கணமாகிறது.
ஒரு வகையில் பார்த்தால், ஆம், ஸ்விட்ரிகெய்லோவ் அதைவிடவும் இருண்மையானவன்தான். அவனது சாத்தானிய இயல்பு மனிதர்களை பலவந்தப்படுத்தியல்ல, அவர்களது ஒழுக்கக் குறைகளைக் கொண்டு அடிமைப்படுத்த விழைகிறது. அதனால்தான் அவன் துன்யாவிடம், மூன்றாம் முறை தவறிவிடாதவாறு தோட்டாவைச் சரியாகப் பொருத்தச் சொல்கிறான். அது துன்யாவுக்கு எளிய விடுதலை அளித்திருக்கும், ஓரே தோட்டாவில் தன்னையும் தன் சகோதரனையும் விரட்டிக் கொண்டிருக்கும் இந்த அரக்கனை நிரந்தரமாக ஒழித்துவிடலாம்.
உண்மையில், குற்றமும் தண்டனையும் நாவலின் கலைப் பந்தயம் இதுதான்- ஹரோல்ட் ப்ளூம் சொன்னதுபோல், நாம் பெண்களையும் தந்தையைப் போன்ற அரசர்களையும் கொலை செய்யாமல் இருக்கலாம், ஆனால் நம்மில் ஒரு பாதி ரஸ்கோல்னிகோவாகவும் மாக்பெத்தாகவும் இருப்பதால், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நாம் அதையும் செய்யலாம். ஸ்விட்ரிகெய்லோவ் மெய்யான எதிர்மறைத்தன்மை கொண்டிருப்பதால், தாஸ்தயெவ்ஸ்கி திட்டமிட்டதைக் காட்டிலும் அவன் தனக்கென்று பெரும் பங்கை எடுத்துக் கொண்டு தாஸ்தயெவ்ஸ்கியின் கருத்தியல் கோட்பாடுகளை மீறிவிடுகிறான். ப்ளூமின் சொற்களில் சொல்வதானால், அவன் “புத்தகத்தைத் தாண்டி வெளியே ஓடுகிறான்”- அவனுக்குரிய பாதாளத்தை நோக்கி.
இதையடுத்து வரும் பகுதி, சோன்யாவின் ஆளுமையின் அளப்பரிய தாக்கத்தில் ரஸ்கோல்னிகோவ் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாய் மண்ணை வணங்கி முத்தமிடுவதில் முடிகிறது. ஆனால், இப்போதும்கூட, அவன் உண்மையை முழுமையாக ஒப்புக்கொள்ளும் நோக்கத்தில் காவல் நிலையம் செல்கையில் அவனது தர்க்கிக்கும் அகங்காரம் மீண்டும் கனன்று எரிகிறது (“இப்போதும் அவர்களிடம் சொல்வது சாத்தியப்படலாம்”). ஸ்விட்ரிகெய்லோவ் தன்னைச் சுட்டுக் கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டதும், ரஸ்கோல்னிகோவ் ஏதோவொன்று தன் மீது விழுந்து நசுக்கிவிட்டதாக உணர்கிறான். தனக்கு எதிரான ஓரே புற சாட்சியம் இறந்துவிட்டதில் ஒரு விடுவிப்பை உணர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து, வெளியேறுகிறான்- அவனுக்குத் தலை சுற்றுகிறது, “வலிமிகுந்த, வதைபட்ட, விரக்தி நிறைந்த” சோன்யா அவனுக்காக முற்றத்தில் காத்திருப்பதைக் காண்கிறான். அவன் சிறிது நேரம் நிற்கிறான், பின்னர் புன்னகைத்துவிட்டு, மீண்டும் காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறுகிறான் – அதிகாரியின் விதவையாகிய மூதாட்டியையும் அவளது சகோதரி லிஜாவெத்தாவையும் ஒரு கோடரியால் கொன்று திருடியது, தான்தான் என்று வாக்குமூலம் அளிக்கிறான். அங்கிருப்பவர்கள் நாலாதிசையிலிருந்தும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள், அவன் தன் வாக்குமூலத்தைத் திரும்பச் சொல்லி நாவலை முடிவுக்குக் கொண்டு வருகிறான்.
அகம், புறத்தினின்று துண்டிக்கப்பட்ட, தனித்தன்மை கொண்ட ஒன்றா? புறநிகழ்வுகளால் பாதிக்கப்படாமல், தன்னிச்சையுடன் செயல்படும் சுதந்திரம் அகத்துக்கு உண்டா? ரஸ்கோல்னிகோவின் அகம், புறத்தினின்று விடுபட்ட ஒன்றாகவல்ல, எப்போதும் அதனின்று பிளவுபட்ட ஒன்றாகவே இருக்கிறது- புறநிகழ்வுகளை அவ்வாறே ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, அவற்றை தன் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்ளும் அளவே அவன் சுதந்திரம் இருக்கிறது. குற்றத்தின் கடைசி சாட்சியமான ஸ்விட்ரிகெய்லோவ் இறந்துவிட்ட செய்தி குற்றத்தைக் கடந்து செல்லும் வாய்ப்பை அவனுக்கு அளிக்கிறது – ஆனால் திரும்பிச் செல்லும்போது முழுமையான அன்பின் வடிவான சோன்யாவின் உருவில் குற்றத்தை அதன் குற்றமற்ற தன்மையில் எதிர்கொண்டு, தன் மீட்சியாய் பற்றிக் கொள்கிறான். அவனுக்கு எதிராய் சாட்சி சொல்லப்போவதில்லை என்றாலும், சோன்யா அவனது குற்றத்தின் சாட்சிதான், அவனது குற்றம் ஸ்விட்ரிகைலோவின் மறைவோடு புதைக்கப்படுவதில்லை. அதனோடு அவன் வாழ்ந்தாக வேண்டும்.
ரஸ்கோல்னிகோவ் தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதில் விடுதலையடைகிறான் என்பதாக நாவல் முடிகிறது என்று நாம் நினைக்க விரும்புகிறோம். இனி அவனைக் குற்றவுணர்வு துன்புறுத்தாது என்பதாக பரவலான வாசகர்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், தன் கதைக்கு சுபமான முடிவைக் கொடுத்தாலும் ரஸ்கோல்னிகோவ் பிளவுண்டவன், அவனது பிளவுண்ட அகம் புறவுலக நிர்பந்தங்களிலிருந்து விடுபட்டு, தன் சுதந்திரத்தை நிறுவிக் கொள்ளத் தவிக்கிறது என்பதுதான் நாவலின் கருப்பொருளே என்பதை தாஸ்தவெஸ்கி மறப்பதில்லை.
இந்தக் கேள்விகள் எதையும் நாம் கேட்டுக் கொள்வதில்லை. வாசகர்களாகவேனும் நாம் தாஸ்தயெவ்ஸ்கி நாவலை இவ்விடத்தில் முடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு மரபுப்படி இணைத்துள்ள பின்குறிப்பில் ஐநூறு பக்கங்களை வாசித்து வாசகன் இதுவரை கண்டடைந்திருப்பதை அவர் சந்தேகத்துக்குட்படுத்துகிறார். பின்னுரை ரஸ்கோல்னிகோவைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச் செல்கிறது, அங்கு அவன் அதன் வாழ்வில் ஆழ்ந்திருக்கிறான், அனைவரிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்டான். சோன்யா அவனைப் பார்க்க வருகையில் அவன் முரட்டுத்தனமாகவும் அவளைக் கேவலப்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்கிறான், இறுக்கமடைந்த அவனது மனசாட்சி, இப்போதும் அவனது கடந்த கால வாழ்வில் எதைக் கண்டும் எந்த ஒரு பயங்கரமான குற்றவுணர்வும் கொள்வதில்லை, என்ன ஒன்று, யாரும் செய்திருக்கக்கூடிய பிழையை அவனும் செய்ய நேர்ந்திருக்கலாம். அர்த்தமற்ற ஆணையின் காரணமாக, பயனற்ற தியாகம் செய்ய வேண்டியிருந்தது குறித்து அவன் வருந்துகிறான், அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
இவ்வாறாக தாஸ்தயெவ்ஸ்கி ஒரு உறைநிலையை அடைகிறார், அவரது கோட்பாட்டுக்கு மாறாக கதையின் பிரதான பாத்திரம், நம்பிக்கையின்மையின் தரைதட்டி மாற விரும்பாது நிற்கிறது. எனவேதான் ஒட்டவைத்ததைப் போல் தனித்து நிற்கும்ஆபிரகாமிய காலத்தையும் அதன் மந்தைகளையும் திரும்பக் கொணரும் நாடோடி கூடாரங்களின் பசைபூசப்பட்டச் சித்திரம்… எனவேதான் கண்ணீராலும் கம்பலையாலும் பசைபூசப்பட்டு மலரும் புத்துயிர்ப்பு…
ஆமாம், இந்தப் பின்னுரை சிக்கலானது. இப்போது சைபீரியாவில் இருக்கும்போதும் கூட’அசாதாரண’ மனிதர்கள் தம்மை அற விழுமியங்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களாகக் கருதி அதிகாரங்களைக் குவித்துக்கொண்டு, தம் சரிவாதிகார ஆற்றலால் மானுடம் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிவர்களாக இருக்க முடியும் என்ற சித்தாந்தத்திலிருக்கும் தீய கூறுகளை அவனால் அடையாளம் காண முடிவதில்லை. அவனது சித்தாந்தம் பொய்க்கவில்லை என்றும், அவன் சில நுண்விபரங்களில் தவறிவிட்டதாலேயே சட்டத்தால் தண்டிக்கப்படுகிறான் என்றும் சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.
ரஸ்கோல்னிகோவ் நாவலில் அடைந்திருக்கும் முட்டுச்சந்திலிருந்து அவனை மீட்பதற்காகத் தான் தாஸ்தவெஸ்கி பின்னுரையில் அவனது கனவை ஒரு சிந்தனைச் சோதனையாய்ப் படைக்கிறார்.. இந்த கனவில் உலகம் முழுவதும்கொள்ளை நோயால் தாக்குண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தன் அகந்தை மட்டுமே மெய்மையை அறியக் கூடும் ஆற்றல் பெற்றிருக்கிறது என்ற நம்பிக்கையில் சுயம்புவாக நடந்து கொள்கிறான். இதனால் சமூகக் கட்டுக்கோப்பு முழுமையாய் குலைகிறது.
ரஸ்கோல்னிகோவ் செயல்பட விரும்புவதுபோல் எல்லாரும் தாம் கண்ட உண்மையின் வெளிச்சத்தில் இயங்கும்போது சமூக ஒழுங்கு சிதையுமெனில், அவனது சித்தாந்தத்தின் இடம் என்ன? அடிப்படைச் சித்தாந்தங்கள் தகர்ந்தழிந்த ரஸ்கோல்னிகோவிற்கான வழி தான் என்ன ? இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் தாஸ்தயெவ்ஸ்கி ஆபிரகாமும் மந்தைகளுமாகிய வேறொரு தரிசனத்தை அளிக்கிறார்- ரஸ்கோல்னிகோவின் புத்துயிர்ப்புக்கான வித்தை இந்தக் காட்சி கொண்டுள்ளது போன்ற சுட்டல் இது, அவன் சோன்யாவைப் நோக்கிச் செல்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்கிறது..
ரஸ்கோல்னிகோவின் தன்வயப்படுத்தக் கூடிய உளவியலமைப்புக்கோ ஸ்விட்ரிகைலோவின் பைசாச வகைமைக்கோ இந்தப் பின்னிணைப்பு பொருத்தமானது அல்ல என்பதை தாஸ்தயெவ்ஸ்கியும் அறிந்திருந்தார் என்ற காரணத்தால்தான், ‘மனிதனின் புத்துயிர்ப்பும்’ ‘இதுவரை அறியப்படாத யதார்த்தத்தை அவன் பழகிக் கொள்ளுதலும்: பற்றிய விவரணை வேறொரு கலைத்தன்மை’கொண்ட தரிசனத்தையும் வேறொரு நாவலையும்கோருகிறது என்றும் கூறுகிறார். தன் வாழ்வின் மிச்ச நாட்களை அப்படிப்பட்ட ஒரு கலை முயற்சியில் அவர் தீவிரமாகத் தொடர்ந்தார், தோற்றுப் போனார்.
சில சமயம், நான் இப்போது கூறியது ஓர்அழகியல் சார்ந்த எதிர்வினையோ என்று சந்தேகிக்கிறேன். நம்மில் உள்ளார்ந்த ஏதோவொன்று தாஸ்தவெஸ்கியின் எதிர்மறைப் பாத்திரங்கள் நம்பத்தகுந்த உளவமைப்பு கொண்டிருப்பதாகக் காண்கிறது. சோன்யாவைவிட ரஸ்கோல்னிகோவே மெய்த்தன்மை கொண்ட பாத்திரமாகச் சித்திரிக்கப் பட்டிருக்கிறான். அனைத்தையும் நிராகரிக்கும் கோட்பாடுகளைத் தன் கிறித்தவ தரிசனத்தைக் கொண்டு எதிர்த்த தாஸ்தயெவ்ஸ்கி இறுதியில் நம் நிராசைகூடிய தரிசனங்களை மெய்ப்பிக்கிறார் என்பதில் ஒரு முரண்நகை உள்ளது.
ஆனால் நான் என் நண்பன் ஷெனாயை நினைத்துப் பார்க்கிறேன், இந்தப் புத்தகத்தை பதினெட்டு முறை வாசிக்கச் செய்த அந்த மகோன்னத தரிசனம் என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். ஒரு சோன்யாவையோ, ஃபாதர் ஜோஸிமாவையோ தழுவும் துணிச்சலுள்ள, அழகியல் சார்பற்ற வாசிப்பு முறைமைகள் இருக்கலாம் என்று நம்புவதாகப் பாவனை செய்வது நன்றாக இருக்கிறது.
தாஸ்தயெவ்ஸ்கியின் இறுதி ஊர்வலம் ஒரு மைல் நீண்ட வரிசையாக இருந்தது, அங்கு குழுமியிருந்த நாற்பதாயிரம் பேரும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் – முறையிடத் தவித்துக் கொண்டிருந்த ரஷ்ய ஆன்மாவின் குரலாய் அவர் இருந்தார் என்று அவர்கள் நம்பினர். அந்த ஒரு உயரிய இடத்திலிருந்துதான், தாஸ்தயெவ்ஸ்கி அழகியல் சார்ந்த நம் நுண்விமரிசனங்களைப் பார்த்து உலர்சிரிப்பு சிரிக்கிறார், மீண்டுமொரு முறை முயற்சித்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறார்.
Sources
- Crime and Punishment, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky
- Dostoevsky: A Writer in His Time by Joseph Frank