முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். தமிழின் முக்கியமான பெண் எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன்.
இம்மாதம் 20ம் தேதி மறைந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் 1925ல் பிறந்தவர். தமிழில் சமூகப் பிரக்ஞையை முன்வைத்து எழுதப்பட்ட பல நாவல்களை எழுதிப் புகழ் பெற்றவர் ராஜம் கிருஷ்ணன்.
லட்சியங்களோடு வாழ்ந்த மனிதரான ராஜம் கிருஷ்ணன், பலருக்கும் உதவியவராகவும், தன்னலத்தை ஒதுக்கிப் பொதுநலம் பேணியவராகவும் தெரிய வந்த ராஜம் கிருஷ்ணன், தன் முதுமைப் பிராயத்தில், றவினர்களால் ஒதுக்கப்பட்டு, பொருள் வளங்களையும் இழந்தவராக ஆனாராம். அவரது முதுமை துன்பப் பருவமாக இருந்தாலும், எழுத்தாளர்களின் சமூகம் உதவிக்கு வந்து அவருக்கு ஓரளவு பாதுகாப்பைக் கொடுத்தது என்பது தமிழுலகில் இன்னும் மனித நேயம் வற்றிவிடவில்லை என்று காட்டுகிறது.
இம்மாதம் 20ம் தேதி மறைந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் 1925ல் பிறந்தவர். பல காலமாகத் தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்தவர். கலைமகள், ஆனந்த விகடன் நாவல் போட்டிகள், சோவியத்லாந்து-நேரு, இலக்கிய சிந்தனை, பாரதீய பாஷாபரிஷத், தமிழ் நாடு அரசு , சாஸ்வதி பரிசுகளையும், சாகித்ய அகாதமி, திரு.வி.க., தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் முதலிய விருதுகளையும் பெற்றவர். அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும், உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத்தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.
இவரது இந்திய சமுதாயத்தில் பெண்மை என்கிற நூல் 12 அத்தியாயங்களில் இந்திய சமுதாயத்தில் பெண்மையின் வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியை ஆராயும் நூல். அந்நுலில் இடம் பெற்றுள்ள சில விளக்கச் சித்திரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
சொல்வனம் பதிப்புக் குழு, தமிழுக்குத் தன எழுத்தாலும், லட்சியங்களாலும் வளம் சேர்ந்து மறைந்த ராஜம் கிருஷ்ணனுக்குத் தன் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.