தூரயியங்கி – பொழுதுபோக்கும் போராட்டங்களும்

Handheld-best-remote-control-drones-Camera

புருஷ லட்சணம்வேறு; பொறி லட்சணம் வேறு என்று வித்தியாசப்படுத்தாமல், இயந்திரங்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் பிறரின் எண்ணங்களை உணரும் குணநலனும் அமையப்பெறுவதை அறி-புனை கதைகளில் மட்டுமே படித்து வந்த காலம் போயே போயாச்சு. இன்றைய ரோபோக்கள், தரைப் பெருக்குவது, நீச்சல்குளத்தை சுத்தம் செய்வது போன்ற ஒரேயொரு வேலையை மட்டும் செய்வதற்காக தயாரிக்கப்படுவதில்லை.

உதாரணத்திற்கு வீட்டிற்கு வீடு வந்து, கதவு தட்டி வாடிக்கையாளர்களின் பொருள்களை விநியோகிக்கும் அமேசானின் தூரயியங்கியை (டிரோன்) எடுத்துக் கொள்வோம். அதைப் பாதி வழியில் திருடர்கள் வழி மறிக்கிறார்கள். அந்த தூரயியங்கியிடமிருந்து திருடுகிறார்கள். இதை அந்தத் தூரயியங்கியே தடுத்தாட் கொள்ளும் வசதியைத் தரலாமா? இன்னொருவருக்கு சொந்தமான பொருளைத் திருடு போகாமல் பாதுகாக்கலாமா? யாராவது தாக்கினால், திருப்பி அவர்களையே அடிக்கும் சக்தியை தூரயியங்கிகளுக்கு வழங்கலாமா?

தூரயியங்கிகளுக்கு இந்த தற்காப்பு சக்தி வழங்காவிட்டால், அவற்றை நடுவில் யாராவது அபகரித்து தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஆனால், அவற்றிற்கான சட்டதிட்டங்கள் இன்னும் உருவாகவில்லை. இப்போதைக்கு தூரயியங்கியை ஆளில்லா காடுகளில் மட்டுமே உபயோகிக்கிறார்கள். ஆர்க்டிக் முனையில் பனிப்பாறைகள் எவ்வாறு உருகுகின்றன என்பதை தூரயியங்கி படம்பிடித்து நமக்கு அனுப்புகிறது. துருவங்களில் தெரியும் புவிவெப்பமயமாதலை உடனடியாக அறிய முடிகிறது. ஆப்பிரிக்க, அமேசான் காடுகளில் அருகிவரும் உயிரினங்களை கண்காணிக்க தூரயியங்கியை பயன்படுத்துகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையின் ஃப்ரான்செஸ்கோ பீட்சா கடை தூரயியங்கி மூலம் பீட்சாவை தந்திருக்கிறது. டி.சி.எஸ்.ஸின் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் துப்பு துலக்க தமிழகக் காவல்துறை தூரயியங்கியைப் பயன்படுத்தியது. உரிமம் பெறாமல் கருங்கற்களை உடைப்பதையும் மணற்கொள்ளையையும் கண்காணிக்க தூரயியங்கியை மதுரை காவல்துறை பயன்படுத்துகிறது. இமானுவேல் சேகரனின் நினைவாஞ்சலி ஊர்வலத்தை தள்ளி இருந்து பதிவு செய்யவும், தேவர் குரு பூஜையில் சட்டம் ஒழுங்கைப் பேணவும் தொண்ணூறு இலட்ச ரூபாய் செலவில் மூன்று தூரயியங்கிகள் உதவியிருக்கின்றன. ராஜ் தாக்கரே ஊர்வலங்களில் தூரயியங்கி கடமையாற்றி இருக்கிறது. 2013ல் மட்டும் 1,467 ஆர்ப்பாட்டங்களிலும், 1,183 தர்ணாக்களிலும், 683 ஊர்வலங்களிலும், இன்ன பிற 6,500 இடங்களிலும் தூரயியங்கிகள் களத்தில் பறந்திருக்கின்றன.

ஆபத்தான வேலைக்குப் போகும் காவல்துறைக்கு தூரயியங்கி துணை போகலாம் என உலகெங்கும் இப்பொழுது முடிவெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். பெருந்திரளான கொந்தளிப்படந்த மக்கள் கூட்டத்தின் நடுவே கண்ணீர் புகை போடவும், மாலடோவ் குண்டு வீசுபவனை குறி பார்த்து வீழ்த்தவும் தூரயியங்கி உபயோகமாகிறது. தூரயியங்கி கொண்டு இந்த மாதிரி போராட்டங்களை கண்காணிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை சட்டத்தின் உதவியோடு காவலர்களுக்கு நெடுங்காலமாக உதவுகிறது. ஆனால், அதே தூரயியங்கியிடம் துப்பாக்கியும் பிளாஸ்டிக் தோட்டாக்களும் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவும் வசதியையும் கொடுத்தனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க ஸ்கன்க் (Skunk) நிறுவனம் இவற்றைத் தயாரிக்கிறது. ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இவை விற்கப்படுகின்றன. நாலாயிரம் துப்பாக்கி ரவைகளையோ மிளகாய்ப்பொடி பொட்டலங்களையோ ஒரே சமயத்தில் வைத்திருக்கும். ஒரு திசை வீதம் நொடிக்கொருமுறை இருபது பொட்டலங்களை குறி பார்த்து ஏவும். எனவே, ஒவ்வொரு நொடியிலும் நாலாபக்கமும் எண்பது குட்டி குண்டுகள் போடலாம். போராட்டக்காரர்களை பல்வேறு வகையினராகப் பிரித்து குறிப்பிடும் வசதியும் இவற்றில் இருக்கிறது. ‘சிவப்பு’ வகையினர் என்றால் கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்; இவருக்கு துப்பாக்கி ரவை கொண்டு தாக்குதல். ‘நீல’ வகையினர் என்றால் மூர்க்கமாக தாக்குபவர்; இவர்களுக்கு மிளகாய்த்தூள் அபிஷேகம். ‘பச்சை’ வகையினர் என்றால், வேடிக்கை பார்க்கவோ, வலைப்பதியவோ வந்து நடுவில் திருதிருவென முழிப்பவர்; இவர்களை எந்தவித உபத்திரவமும் இல்லாத பிரகாசமான ஒளிவிளக்கு கொண்டு ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இவ்வாறு இலக்கு அறிந்த தாக்குதல்களை ’பாலை ஓநாய்’ (Desert Wolf) கொண்டு நிகழ்த்தலாம். குறி தவறாது. ‘நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை!’ என கற்பூரம் அடித்து மறுத்தாலும், தான் செய்யும் ஒவ்வொரு தாக்குதலையும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றையும் விழியமாகப் பதிந்தும் வைத்துக் கொள்கிறது.

இந்த மாதிரி தூரயியங்கி கொண்டு வருமுன் காப்போனாக கிளர்ச்சிகளின் போதும் நிகழும் வன்முறையையும், அதன் பிற்பாடு நிகழும் எண்ணற்ற ஊரடைப்புகளும், பழிவாங்கல்களும், பதற்ற நிலையையும் முளையிலேயேக் கிள்ளலாம். அமைதியானப் போராட்டம் நிகழும்வரை, தூரயியங்கி வெறுமனே கண்காணித்திருக்கும். போராட்டத்தை அசம்பாவிதமாக்க ஒருசிலர் தோன்றினால், அவர்களை மட்டும் நசுக்கும். அதை வைத்து அடுத்த கட்டத்திற்குக் கிளர்ச்சியை கிண்டிவிட நினைப்போருக்கு வீடியோ ருசுவை உடனடியாகப் பகிரங்கமாகப் போட்டுக் காட்டும். உயிர்ச்சேதம் கிடையாது; ஊழல் வராது; வெளிப்படையான செயல்பாடாகவும் இருக்கும். ஆனால், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சமாதான உடன்படிக்கையைக் கையெழுத்திடவும் இன்னும் மனிதர்கள்தான் தேவைப்படுகிறார்கள்.

எல்லாவிதமான தூரயியங்கிகளிலும் பலவிதமான ஒளிப்படக் கருவிகள் இருக்கின்றன. சிலவற்றில் ஆயிரக்கணக்கில் உள்ளன. இரவில் படம் பிடிக்க உதவும் அகச்சிவப்பு (infrared) படமிகள் இருக்கும். வெப்பம் சார்ந்து (Thermographic – thermal imaging) இயங்கக் கூடிய படமிகள் இருக்கும். இந்த உணரி (sensor) கீழே இருக்கும் மனிதர்களையோ, இன்ன பிற விஷயங்களையோ துல்லியமாகக் குறிக்க உதவுகின்றன. லேசர் கொண்டு இவர்களை தொடர்ச்சியாக பின் தொடர் முடிகிறது. அந்த லேசர் எங்கே சுட்டுகிறதோ, அந்த இடத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குகின்றன. இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போல் விதவிதமாக செயல்படுகிறது.

இப்போதைக்கு தூரயியங்கி விமானங்களை தானியங்கியாக செயல்பட அமெரிக்க இராணுவம் ஒப்பவில்லை. அதை இயக்க, கண்காணிக்க, இருவர் கொண்ட அணி இயங்குகிறது. கீழே இருக்கும் பயங்கரவாதியை சுடுவதானாலும் சரி; இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்பு தூரயியங்கி ஆனாலும் சரி; அதை எப்பொழுதுமே மேற்பார்வையிட விமானிகளை வைத்திருக்கிறார்கள். இது கொந்தர்களிடமிருந்து (hackers) விமானத்தை மீட்கவும் உதவுகிறது. ‘இவன் நமது எஜமானன்; இவன் எதிரி’ என்று தூரயியங்கியை சிந்தித்து பிரித்துப் பார்க்க வைப்பதெல்லாம் நிரலியும் அதை இயக்க வைத்திருக்கும் ரகசிய கடவுச் சொற்களும்தான். அவற்றை யாராவது நடுவில் வந்து கொத்திக் கொண்டு போய்விட்டால்?

மூன்றாண்டுகள் முன்பு இந்த மாதிரி வேவு பார்த்த அமெரிக்க தூரயியங்கியை இரானியர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள். தூரயியங்கிக்கும் தான் கைப்பற்ற பட்டோம் என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை. தன்னுடைய செயல்பாடு, தன்னை இயக்கும் நிரலி, தூரயியங்கியைத் தயாரிக்கும் மூலப்பொருள் என எல்லாவற்றையும் வெகுளியாக சொல்லிவிட்டது. அந்த நிரலியையும் தொழில்நுட்பத்தையும் வைத்தே ஈரான், தன்னுடைய தூரயியங்கி நுட்பத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டது. இப்போது இந்த மாதிரி தூரயியங்கி விமானக் கடத்தல்கள நீக்குவதற்கு இரண்டு உபாயங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. எவராவது தூரயியங்கியைக் கைப்பற்றினால், அதை வெடிக்க வைத்துவிடுவது; அல்லது அதனிடம் சேமிக்கப் பெற்ற அத்தனை விஷயங்களையும் அழித்துவிடுவது.

1990கள் வரை இஸ்ரேலிடமிருந்துதான் தூரயியங்கிகளை இந்தியா வாங்கி வந்தது. ஆனால், 2000 ஆண்டில் இருந்து டி.ஆர்.டி.ஓ. (Defence Research and Development Organisation – DRDO) வழிகாட்டலில் சொந்தமாக தூரயியங்கியைத் தயாரிக்கத் துவங்கியது. காற்றினூடே செல்ல ஏதுவான வடிவமைப்பு, தொலைவுக் கணிப்பியல், மூலப்பொருள் ஆராய்ச்சி, முன்செலுத்தலில் புதிய வழிமுறை, விமானத்தை இயக்கும் நிரலி, பதிவு செய்தவற்றை இரகசியமாக பாதுகாக்கும் தகவல்மறைப்பியல், உணரிகள், பொறிகள் என ஒவ்வொரு பாகத்திலும் தனித்தன்மையும் தற்கால தொழில்நுட்பத்தையும் கொண்டு புதிய வகை தூரயியங்கியை உருவக்கி இருக்கிறார்கள்.

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன. 2008 சுனாமியின் போது தூரயியங்கி கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். மாவோயிச செயல்படுகள் அதிகம் உள்ள பிஹார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் சிறிய கிராமங்களையும் மரங்களால் மூடப்பட்ட வனங்களையும் ஊடுருவி உளவுபார்க்க தூரயியங்கியை இந்தியா செயல்படுத்துகிறது.

ஆனால், அடர்ந்த காடுகளிலும் தொடர்ந்து பெருமழை பொழியும் புயல் சமயங்களிலும் இந்தத் தூரயியங்கி பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கெனவே 1,163 கோடி ரூபாய் செலவில் ‘லஷ்யா’ என்னும் தூரயியங்கியை இந்தியா கண்டுபிடித்திருக்கிறது. சூரிய ஒளியில் பறக்கும் தூரயியங்கி மேகங்கள் மூடிய மழைக்கால தூரயியங்கி என பற்பல கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் தானியங்கியாக கிளம்பி, தான்கியங்கியாக தறை இறங்கும் நுட்பத்தை இந்தியா பெறவில்லை. இந்தியாவில் ஓய்வுபெற்ற அல்லது உடல் ஊனமுற்ற முன்னாள் விமானிகளையே இந்த தூரயியங்கியை செயல்படுத்த வைக்கிறார்கள்.

அமெரிக்கா இதற்கு நேர் எதிர். முன்னாள் விமானிகளுக்கு விமானம் ஓட்டி பழக்கம் என்பதால் அதே எண்ணத்திலேயே இந்த தூரயியங்கியையும் இயக்குகிறார்கள். அது சரிப்படவில்லை. இந்தப் புதிய வகை போர்விமானங்கள் போல் வேகமாக செயல்படுவதில்லை. எதிராளியிடமிருந்து அழித்துக்கொண்டால் போதும். தப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீடியோ விளையாட்டில், உங்கள் குறிக்கோள் என்பது அதிக அளவு மதிப்பெண் எடுப்பது என்பது போல், அதிக நேரம் விமானத்தை கண்காணிக்க வைத்தால் போதுமானது. கணினி விளையாட்டில் எத்தனை முறை உயிரிழந்தோம் என்பது முக்கியமேயல்ல என்பது போல், எவ்வளவு தூரயியங்கி இழந்தோம் என்பது பொருட்டே அல்ல.

இதனால்தான் 1970களிலும் எண்பதுகளிலும் இருபது மணி நேரத்திற்கு ஒரு முறை தூரயியங்கி வெடித்துச் சிதறியது. மில்லியன் டாலர் கணக்கில் செலவழித்தாலும் நம்பகமாக நீடித்துப் பறக்கும் தூரயியங்கிக் கிடைக்கவே இல்லை. ரிமோட் மூலமாக இயக்குதல் – ரேடியோ அலைகள் மூலம் இயக்குதல் என்பது பல பத்தாண்டுகளாக இருக்கிற தொழில் நுட்பம். ட்ரோன் வருவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே அண்ட வெளியில் பயணிக்கும் பயனீயர் விண்கலங்களை நாசா இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆளில்லாக் கலங்களை இயக்குதல் என்பதும் பல பத்தாண்டுகளாக இருக்கிறது. சிறுவர் விளையாட்டுப் பொருட்களிலும் தானியங்கி விளையாட்டுச் சாமான்களும் சரி, ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தப் படக்கூடிய சிறு கருவிகளும் இருந்திருக்கின்றன. விமானம், ஹெலிகாப்டர் போன்றன கூட சிறுவர் விளையாட்டுக் கருவிகளாகக் கொஞ்ச வருடங்களாக இருக்கின்றன. அப்படி இருக்கையில் பெரிய அளவு விமானங்களை, ஆளில்லாது தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இயக்கப்படக் கூடிய விமானங்களைத் தயாரிக்க இந்தனை காலம் ஆனது ஏன்?

இங்கேதான் ஆபிரஹாம கரீம் (Abraham Karem) வருகிறார். வெறும் பதினெட்டாயிரம் டாலர் செலவில் ஐயாயிரம் மணி நேரமாகப் பறந்தாலும் வீழாத தூரயியங்கியைக் கண்டுபிடிக்கிறார். அந்த மூல தூரயியங்கியை வைத்துதான் இன்றைய பெரும்பாலான டிரோன்கள் உருவாகின்றன.

கரிம் முதல் காரியமாக விமானத்தின் ஓட்டுங்கருவியையும் இயக்குறுப்புகளையும் பின்னுக்கு தள்ளினார். முன்புறத்தில் இருக்கும் உணரிகளுக்கும் படப்பிடிப்புக் கருவிகளுக்கும் இதனால் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் விழியங்களைப் பதிய முடிந்தது. அடுத்ததாக விமானத்தின் வால் இறக்கைகளை கீழ்நோக்கி அமைத்தார். சாதாரணமாக மேல்நோக்கியோ, பக்கவாட்டிலோ தூரயியங்கியின் வால் இருக்கும். சிறப்பாக பறப்பதற்கு இந்த வடிவமைப்பு உதவும். ஆனால், தூரயியங்கிக்கோ வேகமாக எழும்புவது என்பது இலட்சியம் அல்லா. கரடுமுரடான பிரதேசங்களில் கூட பாதுகாப்பாக தரையிறங்கி தன்னுடைய இயக்கத்தைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு, இந்த கீழ்நோக்கிய வால் வடிவமைப்பு இன்றளவும் உதவுகிறது.

கரீம் வடிவமைத்த தூரயியங்கி, ஆல்பட்ராஸ் என அழைக்கப்படுகிறது. அண்டரண்டப்பறவையைப் போலவே இந்த தூரயியங்கியும் இருந்த இடத்தில் இருந்து எழும்பி, உயரத்தில் பறக்கக் கூடியவை. வேகத்தை விட நீடித்துப் பறப்பவை. தன்னுடைய உடலைவிட இருபது மடங்கு பெரிய அகலமான இறகுகளைக் கொண்டது. இந்தத் தூரயியங்கிக்கு எஞ்சினாக டிவிஎஸ்-50 போன்ற கோ-கார்ட் (go-cart) பொறியை பயன்படுத்துகிறார். அதுவரை இராட்சத விமானத்திற்குறிய பொறியை உபயோகுத்தவர்களுக்கு இந்த வழிமுறையெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது. எனினும், முடிவுகளைப் பார்த்தால், விமானத்தைப் பார்த்து உருவாக்கிய தூரயியங்கியை விட கரீம் கண்டுபிடித்த தூரயியங்கி சிறப்பாக, நெடுநாளைக்கு, இடையூறுகளைத் தவிர்த்து செயல்பட்டது.

கரீம் கண்டுபிடித்த பறக்கும் வடிவமைப்பு, செயற்கைகோள்களின் வளர்ச்சி, இயந்திரமே சொந்தமாக முடிவெடுக்கும் சக்தி, புவிநிலை காட்டி (GPS) முன்னேற்றங்கள், தொலை தூரத்திற்கு தகவல் அனுப்பும் வசதி, அறை முழுக்க அடைத்துக் கொண்டிருக்கும் கணினி நுட்பத்திற்கு பதிலாக மடியில் வைத்துக் கொண்டு இயக்கும் புதிய தலைமுறை கணிப்பொறிகள், இலேசாக இருந்தாலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் மூலப்பொருள்களின் வருகை, விமானத்தை அனலாக் முறையில் இயங்குவதை விட்டு டிஜிட்டல் வழியில் கட்டுபடுத்தும் பொறிகள் என பல தொழில்நுட்பங்கள் ஒன்று சேர்ந்துதான் இன்றைய தூரயியங்கிக்கு வித்திட்டு இருக்கின்றன.

இன்றைய டிரோன்களைக் கொண்டு இணையம் எப்படி இண்டு இடுக்கெல்லாம் வளர்கிறது, மக்களின் வேலைவாய்ப்பு எங்கெல்லாம் நீங்கப் போகிறது, போர்கள் எவ்வாறு நிகழப் போகின்றன என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.