அஞ்சலி
எம் ராஜா
ரதபதாதி சேனைகள்
விரைந்து கடக்கும்
நாற்சந்தி தெருமுனையில்
மின்சாரக் கம்பிகளைத்
தொட்டுரசும் துளிரிலை
கிளைகளுக் கடியில்
கூரியர் கவரோடு
ஜெல்பேனா வாங்கும்
கடை வாசலில்
ஒய்யாரமாய் நின்றுகொண்டு
அலைபேசியில் அரற்றியபடி
உதடுகளூதும் புகையை
கலைக்கிற காற்று
கொண்டு கூட்டும்
புழுதி படிய
தெருப்பெயர் தாங்கும்
வழிகாட்டிப் பலகையருகே
விரிகுடை நிழலில்
துடைத்து அடுக்கிய
பளப்பளா பழங்கள்
விற்கும் வண்டியொட்டி
ஈக்கள் மொய்க்க
படுத்துக் கிடக்கும்
நாயைக் கண்டு
பிளாஸ்டிக் பெட்டிமீது
குந்தி இருக்கும்
குண்டுப் பெண்மணி
கல் பொறுக்க
முன்னால் குனிகையில்
அவள் முதுகுக்குப்
பின்னால் ஒருவேளை
பார்வை போனால்
சிவப்பு வர்ணம்பூசி
தோள்தொட நிற்கும்
எங்களூர்த் தபால்பெட்டி
எவர் பார்வைக்கும்
எளிதில் தட்டுப்படும்.
oOo
தங்கமீனின் உளவியல்
வேணு தயாநிதி
பொன்னிறம் மின்னும்
தூரிகையை துவழவிட்டு
எப்போதும் உலவிக்கொண்டிருக்கும்
தன் ஜோடியுடன்
எங்கள் வீட்டு தங்கமீன். ஒருநாள்
தொட்டியைவிட்டு தெறித்து
போரிடுவது போல்
துடித்துக்கொண்டிருந்தது
தரை விரிப்பில்.
தொட்டியை பெரிதாக்கி
அதற்கெனெ
இன்னும் இருஜோடி தங்கமீன்கள்
சிறிய பெரிய வண்ணமீன்கள்
தாவரங்கள் குமிழிகள் உணவுகள்
என்னென்னவோ வாங்கினோம்.
தொட்டியை அளப்பதுபோல்
அளைந்து கொண்டிருந்த தங்கமீன்
தன் வளையைவிட்டு வருவதே இல்லை.
இரையை எறிந்ததும்
பாய்ந்து வரும் புதியமீன்கள்.
தாமதித்து வரும் தங்கமீன்
ஒரு பொருக்கைமட்டும் பொறுக்கிவிட்டு
ஓடி ஒளிந்துவிடும்.
கோடை மறைந்து
குளிர்ந்துவிட்ட காலை ஒன்றில்
குழந்தைகள் ஆர்ப்பரிக்க
அதிசயமாய் அவதரித்த தங்கமீன்
ஏதோ சொல்லவருவது போல்
அசைத்துக்கொண்டிருந்தது
வாயை மட்டும்.
தங்கமீனின் எண்ணங்கள்
நாம் எண்ணிவிட இயலாதவை.
தங்கமீன்
என்ன சொல்லுமென
யாருக்குத் தெரியும்?