வாழ்க்கையை மீட்டெடுக்கும் கற்பனை

1939ஆம் ஆண்டு. ஆறு வருடங்கள் கழித்து முடியப் போகும் வெறியாட்டத்தை ஹிட்லர் துவக்கியிருந்த நேரம். உலகம் அவனுடைய எண்ணங்களின் தீவிரத்தையும், அது உண்டாக்கப்போகும் பேரழிவையும் முழுதும் புரிந்து கொள்ளாமலும், அல்லது புரிந்தும் அதை ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்கள் என ஒதுக்கியிருந்த காலம். (Auschwitz முதலிய நாஜி வதைமுகாம்களைக் கைப்பற்றும்வரை அதை உலகம் முழுமையாக உணரவில்லை.)

அமெரிக்கா 30களின் பொருளாதார பின்னடைவிலிருந்து இன்னும் முழுதும் மீளாத காலம். தனித்திருத்தல் (isolationism) கொள்கையை இன்னும் பின்பற்றுவதால் போரில் நேச நாடுகள் அணியில் இதுவரை அமெரிக்கா சேரவில்லை. அதிநாயகர்கள் (superheroes), அமெரிக்க வானில் பறக்கத் தொடங்கியிருக்கும், ‘காமிக்ஸ்’ என்னும் ழானர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் காலம்.

இந்தக் காலகட்டத்தில் காமிக்ஸில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள ‘Sammy Klayman’ (க்ளே) என்னும் 19 வயது அமெரிக்க இளைஞன், 17 வயதான தன் ஒன்று விட்ட சகோதரன் ‘Josef (Joe) Kavalier’ ‘ஜோவை’ முதல் முறையாகச் சந்திப்பதோடு ‘மைகல் ஷேபன்’ (Micheal Chabon) எழுதிய ‘The Amazing Adventures of Kavalier & Clay’ நாவல் ஆரம்பிக்கிறது.

The Amazing Adventures of Kavalier & Clay - Micheal Chabon

ஜோ ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட Prague நகரத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறான். ஹூடினி (Houdini) போல் புகழ் பெற்ற ‘Escape Artist’ஆக பயிற்சி எடுத்துள்ள அவன், ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ள ஓவியனும்கூட. தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதே ஜோவின் லட்சியமாக உள்ளது. இந்த இருவரின் சந்திப்பு, அவர்கள் கூட்டாக காமிக்ஸ் துறையில் அடையப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் இடுகிறது. அவர்கள் உருவாக்கும் காமிக்ஸ் நாயகர்கள்/ கதைகளுக்கு சவால் விடும் அற்புத சாகசங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. இங்கு சாகசம், போன்ற வார்த்தைகள் பக்கத்திற்கு பக்கம் சண்டைகள், பரபரப்பு போன்றவற்றைக் குறிக்கவில்லை. ஷேபன்(Chabon) ஒரு இடத்தில் .

“… cabinet of mysteries that was the life of an ordinary man”

என்று சொல்வது போல், சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழ்நிலையில் சிக்கி, பல நம்ப இயலாத, அதிநாயகர்கள் கதைகளில் எதிர்கொள்வதற்கு சற்றும் சளைக்காத சம்பவங்களைச் சந்திப்பதை விவரிக்கும் நாவல் இது. குண்டுகள் வெடிப்பது, பறப்பது என்றெல்லாம் இல்லாமலும் எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையும் அவனளவில் சாகசம்தான், இல்லையா?.

இருவரையும் சந்திக்கவைத்து விட்டு, கதையை நிதானமாக புனைகிறார் ஷேபன். அவர்களுக்கு மட்டுமல்ல, துணை பாத்திரங்களுக்கும் தனித்தன்மை கொடுக்கிறார். இவை அனைத்தும் இணைந்து இந்த நாவலின் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன.

ஷேபன் காலத்தில் பின்னோக்கி சென்று, Prague ஜெர்மனியின் பிடியில் அகப்பட்ட ஆரம்ப காலத்தை பற்றிய சித்திரத்தை அளிக்கிறார். Pragueஇல் உள்ள யூதர்கள் மீது அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டு விட்டாலும்,அவர்கள் அது எந்தளவிற்கு போகும் என்பதை இன்னும் உணரவில்லை. ஆடு, மாடுகள் போல் யூதர்கள் அடைக்கப்பட்டு, வதைமுகாம்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் பயணிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, தங்கள் உடைமைகள், இருப்பிடம், கௌரவம் இவற்றை இழக்கத் தொடங்கி உள்ள காலம் அது. அவர்கள் தாய்நாடு அடையாளம் தெரியாத அந்நிய தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்களான ஜோவின் பெற்றோர் வேலைகளை இழந்து விட்டார்கள். ஜோவை எப்படியாவது அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று முயல்கிறார்கள்.

ஒரு இனம் தங்கள் மீது பெரும் இடி விழப் போவதை அச்சத்துடன் எதிர்பார்த்திருக்கும் காலத்தைக் காட்டும் அதேநேரத்தில் நம்பிக்கை முற்றிலும் இழக்காத காலமும்கூட அது என்று சொல்கிறார். நாஜி பிரசாரத்தை நம்பி (அல்லது வேறு வழியில்லாத நிலையில் நம்ப விரும்பி), உடைமைகள் இழந்தாலும் இதை விட மோசமாக எதுவும் நடக்காது என்று தங்களையே தேற்றிக்கொள்கிற காலம். ‘Kornblum’ என்ற தன்னுடைய மாஜிக் ஆசிரியர் உதவியுடன் ஜோ தப்புகிறான். அவன் தப்பும் விதம் எந்த ஒரு அதிநாயக சாகசத்திற்கும் சளைத்ததல்ல, ஆனால் நம்மால் அதை ரசிக்க முடியாது.

காமிக்ஸில் ஆர்வமிருந்தாலும் க்ளே அதை கலையாகப் பார்க்கிறான் என்று சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகி வரும் துறை என்பதே அவனை அதன்பால் அதிகம் ஈர்க்கிறது. அவன் சிறந்த ஓவியனும் கிடையாது, ஜோவோ நல்ல ஓவியன் என்றாலும் காமிக்ஸ் பற்றி எதுவும் தெரிந்திராதவன், அவனுக்கு தன் குடும்பத்தை அமெரிக்கா அழைத்து வர பணம் தேவை. ஆக இருவரும் காமிக்ஸை கலையாக அணுகாமல் அவரவர் தேவைக்குப் பொருந்திவரும் துறையாகவே கருதி அதில் நுழைகிறார்கள். காமிக்ஸ் படைப்புக்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது அவர்களை அந்தக் காலத்திய மற்ற காமிக்ஸ் படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது.

ஒரு படைப்பில் அதை உருவாக்கிய கலைஞன் எங்கு, எந்தளவுக்கு உள்ளான், அவனுடைய அனுபவங்கள் அந்தப் படைப்பை உருவாக்குவதில் என்ன பங்கு வகிக்கின்றன போன்ற விஷயங்களை ஷேபன் நுட்பமாக காட்டுகிறார் . அவர்கள் உருவாக்கும் அதிநாயகனின் பெயர் ‘Escapist’ (தப்பிப்பவன்), அவனின் முக்கிய எதிரி ‘ஹிட்லர்’. அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை முக்கிய எதிரியாக உருவகிப்பதும் ஜோவே. ஆனால் அப்படிச் செய்தால் அது ஏற்படுத்தக் கூடிய சலசலப்பை, அதன் மூலம் இந்தத் துறையில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியை முதலில் கணிப்பவன் க்ளேதான். காமிக்ஸில் அதிக நம்பிக்கை இல்லாத, அவர்கள் வேலை செய்யும் பத்திரிகை முதலாளிகளையும் ஒப்புக் கொள்ளச் செய்பவனும் அவனே.

க்ளே போலியோவால் பாதிக்கப்பட்டவன், Escapistஉம் அப்படியே. escape artistஆக பயிற்சி பெற்ற ஜோ போல், Escapistஇன் பலமும் அதுவே. பெற்றோரை காப்பாற்ற வேண்டுமென்ற ஜோவின் லட்சியத்தின் வெளிப்பாடாக, Escapistஇன் நோக்கம், எங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தாலும், அவர்களை விடுவித்து அங்கிருந்து தப்பிக்க வைப்பது. இந்த ஒற்றுமைகள் நேரடியாகக் குறிப்பிடப்படாமல் கதையின் போக்கில், வாசகன் புரிந்து கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ளன. அதுவரை போரில் கலந்து கொள்ளாத அமெரிக்காவில், இவர்கள் படைப்புக்கள் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. ஹிட்லர் எதிரியாக இருப்பதால் உண்டாகும் பரபரப்பால் அவர்களின் படைப்புக்களுக்கு கிடைக்கும் ஆரம்ப கால வெற்றி, அவற்றின் தரத்தால் தொடர்கிறது.

தன் நாவலின் பிரபஞ்சத்திற்குள், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் நுண்மைகூடிய, மிக விரிவான தனி உலகை சித்தரிக்கும் ஷேபன் அதே நேரம், சற்று விலகியும் நின்று வாசகனின் கற்பனைக்கு சில விஷயங்களை .விட்டு விடுகிறார். ரோஸா சாக்ஸ் என்ற பெண்ணிடம் காதல் கொள்கிறான் ஜோ. பணம், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன்/ காதலி என இருந்தாலும் ஜோ மன உளைச்சலில் உள்ளான். தன் குடும்பம் தவிக்கையில் தான் மட்டும் தப்பி விட்டோமே என்ற குற்ற உணர்வு (survivor guilt) அவனை வாட்டுகிறது. தான் சந்தோஷமாக இருப்பது குறித்து வருந்துகிறான். ஹிட்லரை கதைகளில் வெல்வது, ஜோவை ஆற்றுப்படுத்தினாலும், அந்தக் கலையும் ஒரு கட்டத்திற்கு மேல் அவனைக் கைவிடுகிறது. நிஜத்தில் ஹிட்லர் பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்றி, மேலும் மேலும் வெற்றிகள் பெற, தன் கலையின் பால் ஏமாற்றம் அடைகிறான் ஜோ.

ஜோவை விட க்ளே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவனாக (ambiguous) இருக்கிறான். அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதாக இல்லை. அவனை செலுத்துவது எது, கலையா, பணமா, புகழா அல்லது வேறேதோ ஒன்றா? நாவல் செல்லச் செல்ல ஓரளவுக்கு தெளிவான சித்திரம் தெரிகிறது. க்ளே இரு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்க்கும் இடமும், அப்போது அவனின் மனநிலையும், ஜோ-ரோஸா உறவைப் பற்றி எண்ணும்போது why he isn’t jealous of Rosa (அவன் ஜோவை அல்லாமல் ரோஸாவை இங்கு சுட்டுகிறான் என்பதுதான் இங்கு முக்கியம்) என்று அவன் யோசிப்பதும் அவனுடைய பாலியல் விழைவை ஷேபன் மென்மையாக குறிப்புணர்த்தும் இடங்கள்.

நாவலின் மற்ற துணை பாத்திரங்களுக்கும் அவர்களுக்குரிய தனித்தன்மையை ஷேபன் தருகிறார். எதிலும் குறை கண்டுபிடிக்கும் அவர்கள் பத்திரிகை ஆசிரியர் ‘George Deasey’ (இவரின் சுட்டெரிக்கும் நக்கலை யாரும் ரசிக்கலாம், அதன் இலக்கு நாமாக இல்லாத பட்சத்தில்), ‘modest but genuine conscience’ (ஷேபனின் வார்த்தைகளில்) உடைய அவர்கள் வேலை செய்யும் பத்திரிக்கையின் அதிபர் ‘Sheldon Anapol’ (ஷேபனின் கூற்றுக்கேற்ப, சட்டப்படி நியாயமான, ஆனால் அறமற்ற வகையில் நம் நாயகர்களின் லாபத்தை பெரிதும் கையகப்படுத்திக் கொள்கிறார்), க்ளேவின் பெற்றோர் என அவர்களின் உலகம் முழுமையாக, நாவலை ஒட்டி உள்ளது. நாவலில் பெரிதும் துணை பாத்திரமாக வரும் ரோஸா இறுதிப் பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறார். அவநம்பிக்கைவாதியாக (cynic) ‘George ‘ மாற காரணம் என்ன, அவர் அடைந்த தோல்விகளா, வயலின் கலைஞனாக இருந்த ‘Sheldon’ ஏன் முழு முதலாளித்துவ (சக கலைஞர்களின் நியாயமான லாபத்தை அபகரிக்கும்) பாதையை தேர்வு செய்தார் என இவர்களைப் பற்றி தனி நாவலே எழுதக்கூடிய அளவிற்கு சில விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் ஷேபன்.

நம் நாயகர்களின் கதைகளோடு, அவர்கள் உருவாக்கும் அதிநாயகர்களின் கதைகளும் வருகின்றன. தொழில்முறை எழுத்தாளர்களல்லாத, ஏதோ ஒரு வேகத்தில் உந்தப்பட்ட இளம் வயதுடையவர்கள் உருவாக்கும் படைப்புகள் என்பதால் ஒரு rawnessஓடு இந்தக் கதைகள் இருப்பது இயல்பாகவே உள்ளது.

Michael-Chabon-Pulitzer_Author_Prize

ஷேபனும் காமிக்ஸ் ஆர்வலரே. காமிக்ஸை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துபவர். மன சஞ்சலமான ஒரு நேரத்தில், ஜோ ஆர்ச்சி (‘Archie’) காமிக் இதழ் ஒன்றைப் படித்தது குறித்து .

The escape from reality was, he felt—especially right after the war—a worthy challenge… The pain of his loss—though he would never have spoken of it in those terms—was always with him in those days, a cold smooth ball lodged in his chest, just behind his sternum.

For that half hour spent in the dappled shade of the Douglas firs, reading Betty and Veronica, the icy ball had melted away without him even noticing. That was the magic—not the apparent magic of a silk-hatted card-palmer, or the bold, brute trickery of the escape artist,but the genuine magic of art. It was a mark of how fucked-up and broken was the world—the reality—that had swallowed his home and his family that such a feat of escape, by no means easy to pull off, should remain so universally despised.

என்று எழுதுகிறார்.

ஆர்ச்சி காமிக்ஸ் மற்றும் கலை பற்றி ஒரு சேர பேச முடியுமா என்று நாம் நினைக்கலாம். அமெரிக்க pop-cultureஇல் அதற்குரிய இடம் நாம் அறிந்ததே. இங்கு காமிக்ஸ் ஜோவிற்கு கிளர்ச்சியையோ, போலியான மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை. வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவனுக்கு சிறிது நேரம் மன அமைதியைக் கொடுக்கிறது எனும்போது அதை ஏன் பழிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஜோ பணத்திற்காக முதலில் இந்தத் துறையில் ஈடுபட்டாலும் பிறகு அதை கலையாகக் காண்கிறான். அவன் ‘Escape Artist’ஆக பயின்றதும், காமிக்ஸில் செய்வதும் தொடர்புடையவைதான். பௌதீக உலகம் நம் மீது திணிக்கும் கட்டுப்பாடுகளை உடைத்து எல்லைகளில்லாத, எந்தத் தளைகளும் இல்லாத உலகத்தை நோக்கிததான் இரண்டும் நம்மைக் கொண்டுசெல்கின்றன. ஜோ சொல்வது போல்

“…the expression of an yearning that a few magic words and an artful hand might produce something – exempt from the crushing strictures, from the ills cruelties, and inevitable failures of the greater creation”

இந்த ஏக்கம் (yearning) தான் ஜோவை காமிக்ஸ் உலகிற்குள் இன்னும் ஆழமாக இழுத்துக் கொண்டு, அவனுடைய மனநிலை முற்றிலும் கெடாமல் பார்த்துக் கொள்கிறது எனும் போது மட்டையடியாக காமிக்ஸ், கலை அல்ல என்று சொல்ல முடியுமா? ‘long underwear’ (ஷேபனின் வார்த்தைகளில்) அணிந்திராத, எப்போதும் தீவிரமாக உலா வரும் பாத்திரங்கள் இருப்பதாலேயே ஒரு சராசரி ‘பொது இலக்கியப்’ படைப்பு காமிக்ஸை விடச் சிறந்தது என்று கொள்ள முடியுமா? எல்லா கலைகளையும் போல் இதிலும் சிறந்த, மோசமான, சுமாரான படைப்புக்கள் உள்ளன அல்லவா?

ஆனால் க்ளே முன்பே சொன்னது போல காமிக்ஸை மலிவான கலையாகத்தான் பார்க்கிறான். அவன் தாய்கூட இதை அப்படித்தான் பார்க்கிறார், காமிக்ஸ் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பணம், புகழ் அவரின் எண்ணத்தை மாற்றுவதில்லை, காமிக்ஸ் என்பது எப்போது வேண்டுமானாலும் வழக்கொழிந்து போகும் என்பதே அவர் தரப்பு. க்ளே ஒரு (அவனால் முடிக்க முடியாத) ‘நாவல்’எழுத முயல்வதுகூட ஒரு ‘இலக்கிய’ அங்கீகாரம் வேண்டித்தான்.

ஷேபனின் மிக விரிவான கதைப் பின்னல் ஒரு சில இடங்களில் நாவலின் மைய இழையிலிருந்து விலகிச் செல்கிறது. ஒரு துயரச் சம்பவத்தைப் பற்றி ஜோ அறிந்தபிறகு நடப்பதைப் பார்ப்போம். அவனுடைய குற்ற உணர்வு (survivor guilt) இன்னும் மோசமாகிறது. அமெரிக்க ஜெர்மானியர்களுடன் வீண் சண்டை பிடித்து, அவர்களிடம் அடிபடுவது போன்ற தன்னைத்தானே வறுத்திக்கொள்கிற செயல்களைச் செய்கிறான். இது புரிந்துகொள்ளக் கூடியதே. இப்படி நடக்குமா என்பதல்ல இங்கு கேள்வி, மிகவும் மனமுடைந்த நிலையில் மனிதன் என்ன செய்வான் என்று யார்தான் உறுதியாகச் சொல்ல முடியும்? ஆனால் இந்த வம்புச் சண்டை பற்றிய விவரிப்புக்கள் தொடர்ந்து பல பக்கங்கள் விரியும்போது ஷேபன் ஜோவுடன் நாம் இன்னும் பச்சாதாபம் கொள்ளவே இதை வலிந்து திணிக்கிறார் என்று தோன்றுகிறது.

பொதுவாக ஜோ/ரோஸா இருவருக்கிடையே உள்ள உறவை, க்ளே/ட்ரேசி உறவைவிட நன்றாகக் கையாண்டிருக்கிறார். க்ளே தன் பாலியல் விழைவு பற்றி குழப்பம் உடையவனாக இருப்பதால் அவனின் உறவுகளில் சஞ்சலம், நிலையின்மை, அதில் அவனால் பொருத்திக் கொள்ள முடியாத நிலை (awkwardness) இருப்பது இயல்பானதே. ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் இரவில், க்ளே டிரேசியுடன் இணைவது போன்ற சில வகைமாதிரி (cliche) சூழல்களும் அவன் உறவுகளின் சித்தரிப்பில் இருப்பது துரதிருஷ்டவசமானது.

இருவரின் காமிக்ஸால் கோபமுற்று, இனவெறி கொண்ட சில அமெரிக்க ஜெர்மானியர்கள் (domiciled Germans) அவர்களுக்கு தீங்கிழைக்க முயல்வது ஒரு உப கதையாக நாவலில் உள்ளது. போரின்போது அமெரிக்க ஜெர்மனியர்களின் மன உணர்வுகள்,மற்ற அமெரிக்கர்கள் பொதுவாக அவர்களை எப்படிப் பார்த்தனர், போருக்கு முன் அவர்களுடன் இருந்த உறவு எப்படி மாறியது என இதை இன்னும் விரிவாகத் தொட்டிருக்கலாம். ஆனால் நாவலில் உள்ள இந்தப் பகுதிகள், அதன் இயல்பான போக்கோடு ஒட்டாமல் இருக்கிறது.

ஜோ, க்ளே இருவரும் தங்கள் வாழ்க்கையுடன் ஓரளவுக்கு சமரசம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நிகழும் இரு (தனித்தனி) சம்பவங்கள் அவர்களை புரட்டிப் போட்டு, அவர்கள் செல்லும் திசையையே மாற்றி விடுகின்றன. இங்கு ஒரு விஷயம். இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடக்கின்றன. சரி இதை கவித்துவ உரிமை என்று கொள்ளலாம். ஆனால் அன்றுதான் ‘Pearl Harbor’ தாக்குதலும் நடக்கிறது எனும்போது, இதுவும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

The true magic of this broken world lay in the ability of the things it contained to vanish, to become so thoroughly lost, that they might never have existed in the first place

என்று நாவலில் ஒரு இடத்தில் ஷேபன் சொல்கிறார். அன்பு மட்டுமே இந்த மாஜிக்கை வெல்ல முடியும். அது மட்டுமே மறைந்த விஷயங்களை, நினைவில் வைத்திருந்து ஒரு வேளை அந்த விஷயம் மீண்டும் கிடைத்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யும். பகிர்ந்து கொள்ள யாருமில்லாதது என்ன வாழ்க்கை? தனக்கேற்பட்ட அனுபவங்களிளால் ஜோ யாருமில்லாமல் இருக்கக்கூடிய சூழல் பற்றிய பயத்தால் எப்போதுமே பீடிக்கப்பட்டிருக்கிறான், அதுவே அவனை அலைக்கழிக்கிறது, அதுவே அவனை தன் (கர்ப்பமாக உள்ள ) காதலி/ நண்பன் இருவரையும் பிரிந்து செல்ல வைக்கிறது.

நாவலின் கடைசி பகுதி ‘Pearl Harbor’ சம்பவத்திற்கு பத்து ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது. போருக்குப் பின் அதிநாயகர்கள் வரும் காமிக்ஸின் அபிரித தேவை குறைகிறது.

ஒரு கலைஞன் அறிவுஜீவி என்றோ முட்டாள் என்றோ குறிப்பிடப்பட்டாலும், தன் படைப்புக்கள் ஏதோ ஒரு வகையில் எதிர்வினைகளை உருவாக்குகின்றன என ஆறுதல் கொள்ளலாம், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டலோ சமூகம் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படலாம். ஆனால் அவனுடைய இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, அதே நேரம் பொருட்படுத்தத் தகாதவனாக (mediocre) அவன் அலட்சியப்படுத்தப்பட்டால் அதை அவனால் தாங்க முடியாது. அதுவும் க்ளே போன்ற, தன் துறையில் உச்சத்தை அடைந்த ஒருவர் இப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்வது மிகக் கடினம். க்ளே அந்த நிலையில் உள்ளான். வாழ்க்கையை ஓட்ட சராசரி படைப்புக்களை உருவாக்குபவனாக அவன் உள்ளான். ஒரு ‘இலக்கிய நாவல்’ எழுதும் அவன் முயற்சி முடிவுறவில்லை .

ஜோ அவர்கள் வாழ்விலிருந்து விலகிய பிறகு, க்ளே ரோஸியை மணந்து அவள் மகளுடன் வாழ்கிறான்.இதை நட்பிற்கான தியாகமாகவோ, அல்லது க்ளே தன் பாலியல் குறித்த மற்றவர்களின் சந்தேகங்களைப் போக்கச் செய்ததாகவோ ஷேபன் சொல்வதில்லை. அதை வாசகனின் முடிவுக்கு விட்டு விடுகிறார். மிகக் குறைவாகவே வரும், ஜோவின் மகன் டாமியுடன் க்ளே கொண்டிருக்கும் உறவு குறித்தப் பகுதிகளும் வாசகனை நாவல் முடிந்தும் யோசிக்க வைப்பவை.

இந்நிலையில் ஜோ மீண்டும் அவர்கள் வாழ்வுக்குள் நுழைகிறான். ரோஸா, க்ளே, ஜோ மூவரும் க்ளே வீட்டில் பேசிக்கொள்கிறார்கள். ஜோ தன் செய்கைகளுக்கு சில காரணங்கள், அது குறித்த குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்த முயலும்போது க்ளே

“Christ, Joe, you fucking idiot,” Sammy said. “We love you”.

என்கிறான். இது ஒரு எளிய வாக்கியம்தான். அதில் பொதிந்திருக்கும் அன்போ மிக ஆழமானது. நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நாம் சொல்வதைக் கேட்காமல், நம் உதவியை ஏற்றுக்கொள்ளாமல் துன்புறும் போது அவர் மேல் நாம் கொண்டுள்ள அன்பு, கோபமாக/ஆதங்கமாக வெளிப்படும் அல்லவா.
(பத்தாண்டுகள் சென்று விட்டாலும், அந்த மூவரிடையே உள்ள அன்பு முன்னளவுக்கு இல்லாவிட்டாலும், முற்றிலும் மறைந்து விட்டிருக்காது இல்லையா). இப்படிப் பட்ட சூழலில் வியாக்கியானம் பண்ணுவது போல் பேசுவதைவிட இதுவே இயல்பாக உள்ளது. (love means never to say you’re sorry’ என்ற வரி அதிகப்படியான ஒன்றாக இருந்தாலும், அதிலும் ஒரு உண்மை உள்ளது அல்லவா?)

இந்தப் பத்தியை படிக்கும்போது, இந்த வரியை அதிகமாகப் புகழ்வது போல் தோன்றலாம். ஆனால் நாவலில் மூவருக்கிடையே உள்ள உறவோடு இந்தக் காட்சியை இணைத்துப் பார்க்கும்போது இதன் தாக்கம் புரியும். இவ்வளவு சுருக்கமாக, உச்சகட்ட மனவெழுச்சியை ஏற்படுத்தும் ஒரு காட்சியை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் நான் அதிகம் படித்ததில்லை.

காமிக்ஸ் கலை/ கலையல்ல என்ற விவாதங்களைத் தாண்டி காமிக்ஸ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும் என்றும் ஒரு தரப்பு அன்று(இன்றும்) இருந்துள்ளது .’Fredric Wertham’ என்ற உளவியல் மருத்துவரால் 1954இல் எழுதப்பட்ட ‘ Seduction of the Innocent’ என்ற நூல் காமிக்ஸ் போன்ற எழுத்து வகைகள் சமூகத்தில் ‘ஓர்பால் சேர்க்கை’ போன்ற ‘ஒழுக்கக் கேடுகளை’ ஊக்குவிக்கின்றன என்று கூறியது. (Batman/Robin உறவு குறித்த ஹேஷ்யங்கள் இன்றும் உள்ளன) அமெரிக்க செனட் செயற்குழு ஒன்று இது குறித்த விசாரணையும் மேற்கொண்டது. இதில் விசாரிக்கப்படும் க்ளே, அவனுடைய பாலியல் விழைவு குறித்த சந்தேகங்களால் அவமானப்படுத்தப்படுகிறான்.

தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அந்த விசாரணை பலரால் பார்க்கப்பட்டு அவர்களின் கேலிக்குள்ளாகிறான். ஆனால் இது ஒரு விதத்தில் நன்மையையும் செய்கிறது. வாழ்வு முழுதும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அவன், உலகை நேரடியாக எதிர்கொள்ள முடிவெடுக்கிறான். ஜோ/ ரோஸி தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க முயல்கிறார்கள்.

நட்பு, அன்பு, காதல் என பல இழைகள் இருக்கும் இந்த நாவலின் எல்லாவற்றைவிட முக்கியமானதாக இருப்பதை ஒரு பாத்திரம் சொல்வதின் மூலம் பார்ப்போம்.

“there is no force more powerful than that of an unbridled imagination”.

இதுதான் இந்த நாவல். அதீதமான விஷயங்களை யோசிப்பதும், கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க முயல்வதுமே நாம் எண்ணிப் பார்த்திராத பல விஷயங்களை சாதித்திருக்கின்றன. எனவே தான் எல்லா காலத்திலும் அரசுகள் கற்பனைக்கு கடிவாளம் போட முயன்றுள்ளன.

இந்த விசைதான் ஜோவை எப்படியாவது தன் குடும்பத்தைக் காக்க முயற்சி செய்ய வைக்கிறது, பதின்வயதிலேயே க்ளே ஒரு காமிக் சாம்ராஜ்யம் அமைப்பதைப் பற்றி கனவு காண வைக்கிறது. கற்பனைகள் அனைத்தும் நனவாவதில்லை. ஜோ/ க்ளேவின் கற்பனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்கு சில நேரம் வெற்றி, சில நேரம் தோல்வி என மாறி மாறி வந்து ஒரு கட்டத்தில் கற்பனை அணைந்தே விட்டது போல் தோன்றினாலும், நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கிறது.

இறுதியில், ஜோ வந்தபிறகு எடுக்கப்படும் முடிவுகளோடு, இவர்கள் வாழ்க்கையில் அந்தக் கங்கு மீண்டும் கொழுந்துவிட்டு எரியும்/ எரிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு/ விருப்பத்தோடு நாவலின் பாத்திரங்களிடமிருந்து நாம் விடைபெறுகிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.