இருத்தலின் பறவை
மாலை நடையின்
மரங்களடர்ந்த பாதையில்
பறவையின் குரல்.
பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும் மரங்களில்
தேடிச்சலித்தபோது
என் திசையின் முப்பரிமாணத்தை
கடந்து விட்டிருந்தது
பறவை.
பிறகு
ஏதோ ஒருகிளையில்
என்னை உற்றுநோக்கி
சிலையைப்போல்
அமர்ந்திருந்தது.
பறவையை உணர்ந்த பின்
சொற்களை அறிந்த மனம்
சொற்களால் நிரம்பியது.
சொற்கள் இன்றி
பறவையை உணர்ந்த கணம்
உணர்விலிருந்தும்
பிரிந்தது பறவை.
உணர்விலிருந்து
என்
இருப்பையும் பிரித்தபின்
முடிவற்று இருந்தோம்
நானும் பறவையும்
காலத்தின் வெளியில்.
oOo
oOo
அம்மாவும் அருவாமணையும்
– ச.அனுக்ரஹா
தலைகுனிந்து சிறகுகள் மடித்து
வளைந்த கழுத்துடன்
வைத்த இடத்திலேயே
நீந்திக்கொண்டிருக்கும்
உலோகபறவை.
பெருத்தபூசணியும்
இளைத்த முருங்கையும்
அரிவாள்.
எனக்கு ஒருபோதும்
அதில் நறுக்கவருவதில்லை.
வளையாத கத்தி
அம்மாவுக்கு பழக்கமில்லை.
அம்மா எங்களுடன் நீந்திக்கொண்டிருக்கிறாள்.