நதியினுள்ளே
நதியினுள்ளே
ஆகாயம் மேகம் குளிர்ந்த சூரியன்
குவிந்த என் உள்ளங்கைகளில் நதி.
என் கைகளை வீசினால்
நதி துளிகளாகச் சிதறி
ஆகாயம் மேகம் சூரியனாக
என் மேல் தெறிக்கிறது
உள்ளங்கை கிண்ணத்தின்
நீரை நான் பருகினால்
நான் அருந்தியது
நதியை ஆகாயத்தை மேகத்தை சூரியனை
சொல்லுங்கள் இப்போது
யாருக்குள் யார் ?
***
கண்ணாமூச்சி
இலை ஒன்று
மெள்ள மெள்ள
மரத்திலிருந்து
வழுக்கி சறுக்கி
ஊஞ்சலாடி காற்றாடியாகி
காற்றைத் தழுவி விழுந்து
நீரின் மேல் தோணியானது
வண்ண வண்ண மீன்களுடன்
தங்கமய நீரலையின் மேல்
பச்சை ஒளிக்கீற்றாக மின்னி
சரசரவென கண்களிலிருந்து தப்பி
நீரின் ஓட்டத்தில் மறைகிறது
நீருக்கும் தெரியவில்லை
மீனுக்கும் தெரியவில்லை
காற்றுக்கும் தெரியவில்லை
மரத்துக்கும் தெரியவில்லை
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்
***
என் தாய்க்கு
அவள் தலையை உயர்த்திப் பார்க்கையில்
ஆகாயம் முழுக்க பிரகாசம்
அவளின் கண்களில் மேகங்கள் மிதக்கின்றன
அவளின் கண்கள் மூடும்போது
ஆகாயம் இருளில் மூழ்குகிறது
மேகங்கள் உடைந்து துக்கமழை பொழிகிறது
***
கன்னட கவிஞரும் கன்னட நாடக ஆசிரியரும் ஆன மம்தா சாகர் கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்தாளர் என பல பரிமாணங்களைக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருபவர். மூன்று கவிதைத்தொகுதிகள், நான்கு நாடகங்கள் வெளியாகியுள்ளன. இவருடைய கவிதைகள் இந்திய மொழிகளிலும், பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.மொழிபெயர்ப்பாளராய் கன்னட மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் சிறந்த படைப்புகளை அளித்துள்ளார்.