முகம்மது ஆல்வி உருதுமொழியில் முக்கியமான கவிஞராக கருதப்படுகிறார். குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்.
1940களில் இடதுசாரிக்கவிஞராகத் தன் கவிதைப்பயணத்தைத் துவங்கியவர். தரமான கவிதைகள் தனக்கு எழதவரவில்லையென்று பதினைந்தாண்டுகள் எழுத்துத்துறவு பூண்டவர்.
1963ல் துவங்கி நீண்டயிடைவெளிகளில் காலிவீடு, கடைசிநாளைத்தேடி மூன்றாவது புத்தகம், நான்காவது வானம் என்று 4 கவிதைத் தொகுப்பகளை வெளியிட்டிருக்கிறார். நான்காவது வானம் விதைகளுக்காக 1991ல் சாகித்ய அகாதெமி பரிசுபெற்றவர்.
அசாதாரண எளிமை,சொற்சிக்கனம், மெல்லிய நகைச்சுவை இவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள். வாசகனைக் கிள்ளிவிட்டு ஒரு காட்சியைக்காணவைத்து அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொள்கின்றன முகம்மது ஆல்வியின் கவிதைகள்.
முபைதார் பக்த், மேரி ஆனி எர்கி இருவராலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The wind knocks and other poems என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள நூலிலிருந்து மூன்று கவிதைகள் தமிழில்.
நினைவுக்கல்
என் புதைகுழியிலிறங்கி
வசதியாக என் கால்களை அகட்டி
மகிழ்ந்தேன்.
யாரும் இங்கு
எனக்கு ஆபத்து விளைவிக்கமாட்டார்களென்று.
இந்த இரண்டு கஜ மண்
என் சொத்தாக இருந்ததது
எனக்குமட்டும் சொந்தமாக
சாவகாசமாக
நான் கரையத் துவங்கினேன் மண்ணில்
காலவுணர்வு
இங்கு மறைந்துவிட்டது
நான் நிம்மதியாயிருந்தேன்
ஆனால் நீண்டநேரத்துக்கல்ல
நான் இன்னும்
முழுதும் மண்ணாகவில்லை. அதற்குள்
இன்னொருவன்
என் கல்லறையை ஆக்கிரமித்துக் கொண்டான்
இப்போதென் கல்லறையின்மீது
இன்னொருவனின் நினைவுக்கல் இருக்கிறது
தட்டும் காற்று
காற்று
ஜன்னலைத் தட்டுகிறது
நடுங்கும் குரலில்
கெஞ்சுகிறது
‘தயவுசெய்து என்னை உள்ளே விடு
பனிப்புயல்
என்னைக் கொல்கிறது
அது என்னைப் பனிக்கட்டியாக்கும்
என்னை உள்ளே விடு
நான் சுவாசிக்க
உன் வெதுவெதுப்பான சுவாசத்தில் கலக்க’
காற்று
ஜன்னல் கதவைத் தட்டுகிறது
காற்றின் விரல்கள்
அதன் கைகள், அதன் முகம்
ஜன்னலின் கண்ணாடிக்கதவுகளின்மீது
பனிக்கட்டியாய் மாறிக்கொண்டிருக்கின்றன.
பறவைகளும் அலைகளும்
வெள்ளிச்சிறகுகளை அகல
விரித்தொரு பறவை
தனதேயானப் பரவச அலையில்
மிதக்கிறது,
நீலக் கடலலைகளின் மேல்.
கடலினலைகள் விரைகின்றன
தம் வலையில் பறவையை சிறைப்பிடிக்க.
பறவையை நெருங்கமுடியாதபோது,
அலைகள் அழுது கதறி
அதன் நிழலைத் தழுவியபடி
தம் தலைகளை மோதுகின்றன
கரை மீது.
(ஆங்கில வழி மொழிபெயர்ப்பு : லாவண்யா, எஸ்.காயத்ரி)