சிவபெருமான் திரு அந்தாதி – 1
கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன.
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வன்கொன்றை
மாலை ஒருபால் முடியானை – மணல்
ஒளியானை உத்தமனை உண்ணா நஞ்சு உண்டற்கு
ஒளியானை ஏத்தி உளம்.
என்று ஒரு பாடல். இதில் ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பொருள். திருமால், தோள்மாலை, மாலை நேரம் என.
சுவாரசியத்துக்காக ஒரு பாடல்.
ஊரும் அடு ஏற்றியூர், உண்கலனும் வெண்தலையே
உஊரும் விடை ஒன்று, உடை தோலே – ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை, ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
சிவபெருமானது ஊர் திருவொற்றியூர், நான்முகனின் தலை கொய்து எடுத்த மண்டையோடு உண்ணுகின்ற கலம், ஊர்கின்ற காளை வாகனம், உடை தோல் (பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு அசைத்து – தேவாரம்), ஊர்ந்து கழுத்தில் படமெடுத்து நிற்கும் நாகம் மாலை, இதுவே தானோ யானையை சங்கரித்த உனது அழகு? நாகம் எனில் இங்கு யானை. முன்பு தூது எழுதும்போது எடுத்து ஆண்டிருந்தோம், “கண்ணில் நாகக் குருளையின் பரபரப்புக் காட்டினாள்” எனும் வரியை. நாகக் குருளை எனில் யானைக் குட்டி.
“படநாகம் அட்டார்” என்பதை “நாகம் பட அட்டார்” என்று கொண்டு கூட்டிப் பொருள் கொளல் வேண்டும்.
சிவபெருமான் திரு அந்தாதி – 2
இந்தத் திருவந்தாதி பரண தேவ நாயனார் அருளியது. இதுவும் பதினோராம் திருமுறைதான். வெண்பாவில் அமைந்த நூறு அந்தாதிப் பாடல்கள். யாவும் ஏற்றுவது சிவனையே!
நீரே எருது ஏறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் – நீரே
நெருப்பாய தோற்றத்து நீள் ஆறும் பூண்டு
நெருப்பாய தோற்றம் நிலைத்து.
என்பதோர் ஏற்றும் பாடல்.
ஒரு சொற் பன்மொழிப் பாடல்கள் அனந்தம்.
வாழ்வார் மலர் அணைவார் வந்த வருநாகம்
வாழ்வார் மலர் அணைவார் வண்கங்கை – வாழ்வாய
தீயாட வானாள்வான் வார்கழல்கள் சேராதார்
தீயாட வானாளும் ஆறு.
போன்ற பாடல்கள்.
திரு ஏகம்பமுடையார் திரு அந்தாதி
இதுவும் பதினோராம் திருமுறையினுள் அடக்கம். பட்டினத்துப் பிள்ளையார் அருளியது. பிற நூலகள் – கோயில் நான்மணிமாலை, திருக்கழுமலை மும்மணிக் கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவொற்றியூர் ஒரு பா ஒரு பஃது. இவ்வந்தாதியும் சிவப்பெருமை புலம்பல்தான்.
நூறாவது பாடலில் ஒரு பிரயோகம் என்னைக் கவர்ந்தது. “புன் சொல் பனுவல்களும்” என்பதது. நாம் நன் சொல் பனுவல்களைப் போற்றினால் போதாதா?
பாக்கு என்று தமிழும் அடக்கா என்று மலையாளமும் (அடப்பம் எனில் தாம்பூலம்) கூறும் கமுகுன் முலையின் கைக்கு “செம்பழுக்காய்” என்றொரு சொல் இருப்பது அதேரிய வந்தது. “செம்பழுக்காய் நிறை கொண்ட யானைக் கமுகின் பொழில்” என்பது பாடல் வரி.
செம்பழுக்கா எனும் சொல்லை, பல மலையாளப் பாடல்களில் பொருள் தெரியாமலேயே நான் கேட்டும் அனுபவித்ததுண்டு. இப்போது செம்மையும் பழுப்பும் நிறங்கொண்ட பாக்குக் குலை கண்ணில் பரவுகிறது.
திருத்தொண்டர் திரு அந்தாதி
இதுவும் பதினோராம் திருமுறை நூல். நம்பியாண்டார் நம்பி அருளியது. இவரது பிற யாப்புகள் – திரு நாரையூர் வினாயகார் இரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார திருச் சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் மும்மணிக் கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, ஆளுடைய பிள்ளை திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை என்பன.
சைவத் தொண்டர்கள் மீது அந்தாதியாக, நூறு விருத்தப் பாக்களால் அமைந்த நூல் இது. திருத்தொண்டர்கள் பற்றிய செய்திகள் பேசும் பாடல்கள். எடுத்துக்காட்டுக்கு கண்ணப்ப நாயனார் பற்றிய பாடல் ஒன்று.
நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார் திரு நெற்றியின் மேல்
நலத்தில் பொறிதரு கண்ணில்
குருதி கண்டு உள் நடுங்கி
வளத்தில் கருங்கணையால் தன்
மலர்க்கண் இடத்து நூப்பினான்
குளத்தில் கிராதன் நம் கண்ணப்ப
னாம் என்று கூறுவரே.
ஆளுடைய பிள்ளையார் திரு அந்தாதி
இதுவும் நம்பியாண்டார் நம்பி அருளியது. இந்நூலும் பதினோராம் திருமுறை. திருமுரைல பண்ணிரன்டினுள் இப்பதினோராம் திருமுரையினுள் மொத்தம் பன்னிரண்டு ஆசிரியர்கள் அருளிய, இருபத்தொரு வகை வீரபந்தங்களாக, நாற்பது நூல்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 1400 பாடல்கள். பன்னிரு திருமுறைகளிலும் உள்ள ஒரே பெண்பாற் புலவர் காரைக்கால் அம்மையார் நூல்கள் இதனுள் அடக்கம். அதுபோல் பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்பாற் புலவர் என்று நாம் அறிவோம்.
நூறு பாக்கள் கொண்ட இவ்வந்தாதி ஆளுடைய பிள்ளையாகிய திருஞான சம்பந்தன் மீது பாடப் பெற்றது.
பன்னிரு திருமுறைகளையும் தொகுத்தவர் இந்த நம்பி ஆண்டார் நம்பி. அவை சைவ இலக்கியங்கள். வைணவ இலக்கியங்கள், பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் யாவும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களாகத் ஹ்டோகுக்கப் பெற்றன. தொகுத்தவர் ஸ்ரீமத் நாத முனிகள்.
முதல் திருவந்தாதி
மேற்கண்டவை யாவும் சைவ அந்தாதிகள். இனி அசைவ அந்தாதிகளா எனக் கேட்காதீர்கள். சைவம் என்பது ஒரு மதம்; சைவம் என்பது ஒரு உணவுப் பழக்கமும் ஆம். இனி காணப்போவது வைணவ சமயத்து அந்தாதிகள்.
மொத்தம் ஐந்து திரு அந்தாதிகள் நாலாயிரத்தினுள் அடக்கம். அவற்றுள் முதலாயது முதல் திருவந்தாதி.
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார்.
காப்பு உன்னை உன்னக் கழியும்; அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் – மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை; திருமாலே! னின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி!
எனத் திருமாலை வழிபட்டவர்.
இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு. நூறு பாசுரங்கள் கொண்ட அந்தாதி இது. வைணவ இலக்கியத்தின் முதல் அந்தாதி. இந்நூலுக்கு முதலியாண்டான் அருளிய தனியன் சிறப்பானது.
கைதை சேர் பூம்பொழில் சூழ் கச்சிநகர் வந்துதித்த
போய்கைப் பிரான் கவிஞர் போரேறு – வையத்து
அடியவர்கள் வாழ அருந்தமிழ் நூற்று அந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து.
எனும் வெண்பா அது. கைதை எனில் தாழை என்று பொருள்.
இந்தத் திரு அந்தாதியின் முதற்பாட்டே புகழ் பெற்றது.
வையம் தகளியா வார கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
கூர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
காரைக்கால் அம்மையிடம் காண்பது போலவே, நிறைந்த சமயப் பொறியை நாம் பொய்கை ஆழ்வாரிடமும் காணலாம்.
நெறி வாசல் தாநேயாய் நின்றானை, ஐந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி – அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆழம் அமர கண்டது அரண்.
எனும் பாடல் ஒன்றே போதும் என்றாலும் அடுத்த பாடல் அற்புதமான சமயப் பொறை நாட்டுவது.
அரன் நாரணன் நாமம்; ஆன் விடை புள் ஊர்தி;
ஆரை நூல் மறை; உறையும் கோயில் வரை நீர்;
கருமம் அழிப்பு அழிப்பு, கையது வெல் நேமி,
உருவம் எரி கார்மேனி, ஒன்று
என்றொரு பாடல்.
பெயர் – சிவன், நாராயணன்
ஊர்தி – எருது, பறவை
உரை – நூல், மறை
உறையும் கோயில் – மலை, நீர்
கருமம் – அழித்தல், வழங்கல்
ஆயுதம் – வேல், சக்கரம்
உருவம் – தீ, கார்.
என இருவரும் ஒன்றே என ஒப்பு நோக்குவது.
அரவம், அடல் வேழம், ஆன், குருந்தம், புள்வை,
குரவை, குடம், முலை, மல், குன்றம் – கரவு இன்றி
விட்டு, இறுத்து, மேய்த்து, ஒசித்து, கீண்டு, கோட்டு, ஆடி,
உண்டு, அட்டு, எடுத்த செங்கண் அவன்.
என்றொரு பாடல். ஏதும் விளங்குகிறதா? கொண்டு கூட்டிப் பொருள் கொளல் வேண்டும். அரவம் கரவு இன்றி விட்டு, ஆடம வேழம் இறுத்து, ஆன் மேய்ந்து, குருந்தம் ஒசித்து, புள்வாய் கீண்டு, குரவை கோத்து, குலம் ஆடி, முலை உண்டு, மல் அட்டு, குன்றம் எடுத்த செங்கண் அவன் என்று திருமாலின் சிறப்புச் செயல்கள் யாவும் தரம் தரமாய் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, Match the following போல.
நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரொடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் – வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வரும் ஆறு என் என்மேல் வினை?
என்கிறார் ஆழ்வார். நானோ, பிறர பொருளை நாயக்க மாட்டேன், கீழாரொடு நட்புப் பூணேன், உயர்ந்தவரோடு அல்லால் சேரேன், திருமாலை அல்லாது வேறு தெய்வம் ஏத்தேன், என் மேல் எவ்வழி வினை வந்து சேரும்? என்பது பொருள்.
ஏற்றான், புள் பறர்த்தான், எயில் எரித்தான், மார்வு இடத்தான்
நீற்றான், நிழல்மணி வண்ணத்தான் – கூற்று ஒருபால்
மங்கையான், பூமகளான், வார் சடையான், நீள் முடியான்,
கங்கையான், நீள் கழலான் காப்பு.
என்றொரு செய்யுள்.
ஏறுதனை வாகனமாகக் கொண்டவன், புள்ளின் மேல் ஊர்ந்தவன், முப்புரம் எரித்தவன், இரணியன் மார்பு பிளந்தவன், நீறணிந்தவன், நிழல் மணி வண்ணத்தவன், மங்கையை ஒரு கூராகக் கொண்டவன், பூமிகளை உடையவன், கங்கை அணிந்தவன், நீண்ட கழற்காலை அணிந்தவன் இவர்களே காப்பு என்பது செய்யுளின் பொருள்.
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன், என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.
என்றும் பாடுவது பொய்கை ஆழ்வார்.
இரண்டாம் திருவந்தாதி
இது பூதத்தாழ்வார் இயற்றியது. இவர் காலமும் ஏழாம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. பொய்கை ஆழ்வார், “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்று எடுக்கும்போது பூதத்தாழ்வார்,
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இப்பு உருக்கு சிந்தை இரு திரியா – நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
என்று தொடுக்கிறார்.
பூதனை நச்சுப் பால் ஊட்டிய சம்பவத்தை நாடகமாக்குகிறார்.
உகந்து, உன்னை வாங்கி, ஒளி திறம் கொள் கொங்கை,
அகம் குளிர, உண் என்றாள் ஒளிதிறம் கொள் கொங்கை
முளை உண்பாய் போலே முனிந்து உண்பாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று.
அத்தோடு நில்லாமல்,
அண்டு அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முளை தந்த இந் நீர்மைக்கு – அன்று
வரன் முறையால் நீ அளந்த மாகடல் சூழ் ஞாலம்
பெருமுறையால் எய்துமோ பேர்ந்து?
உகந்து, உனைத் தாய் போல் இரு கரங்களால் வாங்கி, ஒளி நிறம் கொள் கொங்கையை ஏந்தி, அகம குளிர உண்ணுவாய் என்றாள். பூதனை உகந்து முளை குடிப்பவன் போலே, சினந்து அவள் ஆவியையே உண்டாய் அன்று. அன்று அதைக் கண்டு அஞ்சாத ஆய்ச்சி, உனக்கு இரங்கி நின்று, முலை தந்த பெருமைக்கு மூவடியால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் இணையாகுமா? என்று ஆய்ச்சியர் பெருமை பேசுகிறார் ஆழ்வார்.
நான் பலமுறை மேற்கோள் காட்டிய பாடல் ஒன்று.
யானே தவம செய்தேன், ஏழ் பிறப்பும், எப்பொழுதும்
யானே தவம உடையேன்; எம்பெருமான் – யானே
இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன், பெருகு.
நாம் பெருந்தலைவர் கேட்டதுண்டு; பேரறிஞர் கேட்டதுண்டு; பேராசான் கேட்டதுண்டு. ஆனால் தன்னைப் பெருந்தமிழன் என்று செம்மாந்து அறிவித்துக் கொண்ட முதல் தமிழன் பூதத்தாழ்வாராகவே இருக்க வேண்டும்.
ஆழ்வார்களின் தமிழ் அற்புதமான தமிழ். தொட்டு அனைத்து ஊரும் மணற்கேணி. அள்ளி உண்ணத் திகட்டாத தீந்தமிழ். ஆனால் பக்தி இலக்கியம் என்று பேதப்படித்து வைத்திருக்கும் பேதமை நமது.
பல பாடல்களில் இருந்து, சில பிரயோகங்களை எடுத்து திரைபடத் தருகிறேன் கீழே.
அடி மூன்றில் இவ்வுலகம் அன்று அளந்தான், அழகியதே நாகத்தின் தண்பள்ளி கொள்வான், ஒற்றைப் பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்றான், கடந்த ஏழ் உலகும் உண்டான், சென்றது இலங்கை மேல் செவ்வே, தன் சீற்றத்தால் கொன்றது இராவணனை, மனத்து உள்ளான் வேங்கடத்தான் மாக்கடலான், முன்பொருநாள் மாவாய் பிளந்த மகன், மண் கொண்டு, மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன், உணர்ந்தான் மறை நான்கும், ஓதினான் நீதி, மணந்தான் மலர் மகள், முலை சூழ்ந்த நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன், கடல் கடைந்த நீராழி வண்ணன், ஓர் பாதம் நிலம் புதைப்ப நின்றான் தோள் சென்று அளந்தது திசை எல்லாம், அடியால் முன் கஞ்சனைச் செற்றான், அமரர் ஏத்தும் படியான், கொடி மேல் புள் கொண்டான், நெடியான், வடி சங்கம் உடையான், கூந்தல் வாய் கீண்டான், கொங்கை நஞ்சு உண்டான், உலகு ஏத்தும் ஆழியான் என்றெல்லாம் பலபடியாகப் பாடுகிறார் இந்த அந்தாதியில் பூதம்.
அத்தியூரான், புள்ளை ஊர்வான், அணிமணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் – முத்தீ
மறை ஆவான், மாகடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்
என்று நச்சென்றும் அடிக்கிறார் பூதம், இதில் கவனிக்க வேண்டிய வரி, மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான் எங்கள் பிரான்’ என்பது.
மூன்றாம் திருவந்தாதி
இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம்.
திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக்கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று
சொல்ல வேண்டியதில்லை. இதுவும் வெண்பாவில் அமைந்த அந்தாதி என்று.
‘மனத்து உள்ளான், மா கடல் நீர் உள்ளான், மலராள்
தனத்து உள்ளான் தந்துழாய் மார்பன்’ எனத் திருமாலை ஏத்தும்போது, அவன் தண்மையான துளசிமாலை அணிந்த மார்வை உடையவன் எனினும் மயில் வாழும் இலக்குமியின் தனத்தில் உறைபவன், ஆயின் அடியார்களின் மனத்தில் வாழ்பவள், மா கடல் நீரில், பாம்பணை மேல் பள்ளி கொள்பவன் என்கிறார். சமுத்திரம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக மாகடல் என்று வேறு தமிழ்ச் சொல் பெய்வது கவனிக்கத் தக்கது.
என்றுமே ஆழ்வார்களின் தமிழ் பயிலச் சுகமானது. அம்மாவின் கண்டாங்கியைப் போர்த்துக் கொண்டு உறங்குவது போன்றது. மேலும் ஒரு பாசுரம் கவனிப்போம்.
தானே தனக்கு உவமன், தன் உருவே எவ்வுருவம்
தானே தவ உருவும் தாரகையும் – தானே
எரி சுடரும் மால் வரையும் எண்திசையும், அடைந்து
இரு சுடரும் ஆய் இறை
திருவள்ளுவர் இறைவனை, ‘தனக்கு உவமை இல்லாதான்’ என்கிறார். பேயாழ்வார் தானே தனக்கு உவமை ஆகிறவன் என்கிறார். கொஞ்சம் தமிழ் பயிற்சி இருந்தால் ஆழ்வார் பாசுரங்களுக்கு உரையே வேண்டுவதில்லை. என்றாலும் வேதாந்தமாக விரித்துப் பொருள் தருவார்கள் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், பெரிய வாச்சான் பிள்ளை போன்றோர். எனது அனுபவத்தில் ஆழ்வார் எனக்கு எரிவந்த தன்மையர். உரையாசிரியர்கள் சொல்லுக்குச் சொல் உக்கிரமாய்த் தீயெழ விழிப்பவர்கள்.
தெளிவான் இறைத்தன்மை பேசுகின்றன சில பாசுரங்கள்.
நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம்
என்பதன் பொருள் இறைவனின் நிறம் வெண்மை, செம்மை, பசுமை, கருமை என்று உருவம் யாம் அறியோம் என்பது.
நிறங்களை, வடிவங்களை, வாசங்களைக் கடந்து நின்றவன் தானே கடவுள் எனப் படுபவன்!
நான்முகன் திரு அந்தாதி
நாலாம் திருவந்தாதி இது. பாடியவர் திருமழிசை ஆழ்வார். சென்னைக்குப் பக்கமுள்ள திருமழிசைக்காரர். காலம் 7-ம் நூற்றாண்டு. வெண்பாவில் ஆன அந்தாதித் தொகை. 96 பாசுரங்கள்.
பாலில் கிடந்ததுவும், பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் – ஞாலத்து
ஒருபொருளை வானவர்தம் பெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யான் அறிந்த அறு?
என்று எடுக்கிறார் திருமழிசை. பாற்கடலில் பள்ளிகொண்டு கிடந்ததுவும், முன்பு திருவரங்கம் மேயதுவும், ஆலிலையில் துயின்றதுவும் பார் அறிவார்கள்? உலகத்தின் ஒரு பொருளை, வானவர்களின் மெய்ப் பொருளை நீரின் அரும்பொருளை யான் அறிந்தவாறு யார் அறிவார்கள்? என்பது பொருள்.
நான் முதன் முதல் சென்னை போனது 1968-ல், பட்டப்பட்டு தேர்வு எழுதிய பின்பு. கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. பம்பாயில் வாழ்ந்த காலத்தும் கோவையில் வாழும் காலத்தும் எனது ரயில் வந்து சேர்வதும் புறப்பாடும் சென்ட்ரல் நிலையத்தில். எப்படியும் இதுவரை 200 தவணையில் இறங்கி இருப்பேன். இறங்கிய ஐந்து நிமிடத்தில் என் பொறுமை பறந்து போய்விடும். எனதியல்பா, சென்னை மக்கள் இயல்பா, மண்ணின் இயல்பா என்பது இன்றும் என் ஆய்வுக்குரியது. ஆனால் சென்னைக்குப் பக்கத்தில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார், 7-ம் நூற்றாண்டுக்காரர், சற்றும் சமயப் பொறை இழந்து பேசுகிறார்.
அறியார் சமணர்; அயர்ந்தார் பவுத்தர்;
சிறியார் சிபப்பட்டார், செப்பில் – வெறியாய்
மாயவனை, மாயவனை, மாதவனை ஏத்தாதார்
என்பது பாடல்.
சமணர் அறிய மாட்டார், பவுத்தர் அயர்த்துப் போனார், சிவ சமயம் சார்ந்தவர் யாவும் சிறியார், சொல்லப்போனால் தேன்போன்ற மாயவனை, மாதவனை ஏத்தாதவர் இன்று ஈனப்பிறவிகள் ஆனார்கள் என்பது பொருள்.
வைணவம் மாத்திரம் என்றில்லை, வெட்டு, குத்து, கொல்லு சொல்லும் சைவத்துக்கும் குறைவில்லை. எச்சமயத்துக்கும், இறை மார்க்கத்தும் அன்பு தான் அடிப்படை என்பார்கள் மெய்ஞ்ஞானிகள். பிறசமயத்தவரை இகழ்வதில் சைவரும் வைணவரும் யாருக்கும் சளைத்தவரில்லை. அஞ்ஞானிகள் என்று அவிசுவாசிகளை அழைக்கும் கிறிஸ்துவத்தும், காஃபிர்கள் என்று மாற்றாரை அழைக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லை சைவக் குரவர்களும் வைணவ ஆழ்வார்களும் என்பதனையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொருள் புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கும் பாடல்களும் உண்டு.
குறை கொண்டு, நான்முகன் குண்டிகை நீர்பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து – கறை கண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு
என்பது பாடல்.
‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து’ எனும் தொடரில் குண்டிகை எனில் கமண்டலம் என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது. ‘நான்முகன் குண்டி கை நீர் பெய்து’ என்று பிரித்தால் அதற்கு ஆழ்வார் பொறுப்பில்லை. ஆனால் பாடலின் பொருளுக்கு ஆழ்வார் பொறுப்புத் தானே!
தன்னிடம் குறை இருந்த காரணத்தால், வடமுண்ட கறையைக் கண்டத்தில் கொண்ட சிவன், மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, அகில உலகத்தையும் ஆண்ட அகிலாண்ட நாயகன் திருமாலின் சேவடியை சென்னி மேல் ஏற்றி, நான்முகனின் கமண்டல நீர் கொண்டு கழிவினான் என்று தான் பொருள் கொள்கிறேன். தவறு எனில் திருத்துங்கள்.
இன்னுமொரு பாடல் –
நாராயணன், என்னை ஆளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் – தன்பேரான
பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு
ஆசைப் பட்டு ஆழ்வார் பலர்
நாராயணன் என்பது சரி, என்னை ஆள்பவன் என்பதும் சரி, நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் என்பதும் மிகச்சரி, அது ஆழ்வார் திருவுள்ளம். ஆனால் தன்பேரைப் பேசாத பிணச்சமயர் என்பது நமக்கு எவ்விதம் சரி. நான் இவ்விதம் எழுதிச் செல்வதற்கு என்னுள் ஆட்சி செய்யும் பண்டைச் சைவ மரபு எனத் தயவுசெய்து கொள்ளாதீர்கள் நண்பர்களே!
இங்கு மற்றும் ஒரு குறிப்பு. ‘என்னை ஆளி’ என்கிறார் ஆழ்வார். என்னை ஆள்பவனே என்று அர்த்தம். பத்தாண்டுகளுக்கும் மேலிருக்கும், மதுரை பில்லர்ஸ் ஹோமில் ’காலச்சுவடு’ ஏற்பாடு செய்திருந்த, ராஜ்கவுதமன், ராஜேந்திரசோழன் முதலானோரும் கலந்து கொண்ட, மூன்று நாள் நாவல் இலக்கிய முகாம் முடிந்த அன்று மாலை நண்பர் ஐயனாரின் நூல் வெளியீட்டு விழா. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாக மாடியில். தலைவர் பேராசிரியர், கவிஞர் அபி, வெளியிட்டுப் பேசியவர் பட்டிமன்ர மேதை பேராசிரியர் சாலமன் பாப்பையா. நான் பெற்றுக் கொண்டு பேசிய போது படைப்பாளி எனும் சொல்லைப் பயன்படுத்தியதை நக்கல் செய்து பேராசிரியர் சாலமன் பாப்பையா, அவரது வழக்கமான பாணியில், “அது என்ன படைப்பாளி, அது பெண்பாலா” என்று கேட்டார். நான் அடுத்திருந்த கவிஞர் அபியின் காதுகளில் கிசுகிசுத்தேன், எனக்கொரு இரண்டு நிமிடங்கள் தாருங்கள் மறுப்புச் சொல்ல என்று. எனக்கிருந்த கேள்வி, வயசாளி, தொழிலாளி, உழவாளி, உழவாரப் படையாளி யாவும் பெண்பாற் பெயர்கள் என்பது. அபி என்னை அமைதியாக இருக்க ஆற்றுப்படுத்தினார். இன்று ஆழ்வாரும் சொல்கிறார் ‘என்னை ஆளி’ என்று. கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
அது கிடக்க, ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ என்கிற திருமழிசை ஆழ்வாரின் பாடல்கள், திருமாலைப் பாடும்போதெல்லாம் திருநீலகண்டனையும் ஒரு தட்டுத் தட்டிவிட்டுச் செல்வது இன்று வேடிக்கையாகப் படுகிறது.
பெரிய திருவந்தாதி
இது நம்மாழ்வார் அருளிச் செய்த ஐந்தாம் திருவந்தாதி. அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பனால் புலவ. இந்த அந்தாதியில் 87 பாசுரங்கள். குருகூர்ச் சடகோபன் என்றும் வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் அறியப்பட்ட நம்மாழ்வார் மீது கம்பர் சடகோபர் அந்தாதி பாடியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. நம்மாழ்வார் பிறந்தது வேளாளர் குலம் என்றும் தாயார் பெயர் காரிப்பிள்ளை என்றும், தாயார் ஊர் திருப்பதிசாரம் என்று இன்று அறியப்படுகிர திருவண்பரிசாரம் என்றும் ஒரு செய்தி உண்டு. பழையார்றில் இருந்து தேரூர் பெருங்குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் தேரேகாலின் முதல் ஊர் நான் பிறந்த வீரநாராயணமங்கலம், இரண்டாவது ஊர் திருப்பதி சாரம். இதைச் சொன்னால் நம்மாழ்வாருக்கு இழுக்கு ஒன்றும் ஏற்பட்டுவிடாது.
‘வருவார் போவார் வருவிருந்து உபசரிப்பார்…’ என்று நம்மாழ்வார் பாசுரம் திருவண்பரிசாரத்துத் திருவாழி மார்பனைப் பாடுகிறது. என்ன அற்புதமான பெயர் பாருங்கள். திரு-வாழி-மார்பன். இன்னும் புரியவில்லை என்றால் – ஸ்ரீநிவாஸன்.
‘பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ,
மற்றையார் ஆவாரும் நீ, பேசில் – எற்றேயோ
மாய, மா மாயவனை மாய, முலை வாய் வைத்டஹ்
நீ அம்மா! காட்டும் நெறி!’
முதல்வரி, ‘அம்மையே, அப்பனே, ஒப்பிலா மணியே!’ எனும் தேவாரப் பாடலை நினைவூட்டும்.
நம்மாழ்வார் மொழி தத்துவச் செறிவு கொண்டது. பல பாடல் வரிவள் ஆழமான அர்த்த கர்ப்பம் கொண்டவை.
‘நின்றும், இருந்தும், கிடந்தும், திரிதந்தும்,
ஒன்றும் ஓவாற்றான்; என் நெஞ்சு அகலான்’ என்றும்
‘பார் உண்டான், பார் உமிழ்ந்தான், பார் இலந்தான், பார் அளந்தான்,
பார் இடம் முன் படைத்தான், என்பரால்’ என்றும்
’கொண்டல் – தான், மால்வரை – தான், மாகடல் – தான், கூர் இருள் – தான்,
வண்டு அறாப் பூவை – தான்’ என்றும்
நம்மாழ்வாரின் மொழி வேறு தளத்தில் பயில்கிறது.
‘ஒன்று உண்டு, செங்கண் மால்! யான் உரைப்பது; உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ’
என்று அவரால் கட்டளையும் இட முடிகிறது.
’முதலாம் திருவுருவம் முன்றென்பார்; ஒன்றே
முதலாரும் மூன்றுக்கும் என்பர்; – முதல்வா
நிகர் இலகு கார் உருவா! நின் ஆகத்து அன்றே
புகர் இலகு தாமரையின் பூ?’
‘நின் ஆகத்து அன்றே புகர் இலகு தாமரையின் பூ?’ என்றதும் கம்பன் வரி மனதில் ஓடுகிறது. தாமரையின் பூ என்றது செந்திருவை. ஆகம் எனில் நெஞ்சு, மார்பு. கம்பன் பாடல்,
‘பாகத்தில் ஒருவன் வைத்தான்;
பங்கயத்து அமர்ந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்
அந்தணன் நாவில் வைத்தான்’
என்று ஏகும். பொருளாவது – சிவன் உமையை உடலின் பாகத்தில் வைத்தான், தாமரையில் அமர்ந்த செந்திருவை மார்பில் வைத்தான் திருமால், அந்தணன், பிரம்மன் சரசுவதியை நாவில் வைத்தான் – என்பது.
எனக்குத் தனிப்பட்ட முறையில் சிலசமயம் கர்வமாக இருக்கும் நம்மாழ்வாரை நினைக்க. வெள்ளாளன் என்பதால் அல்ல. ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாயார் ஊருக்கு அவர் வந்திருக்கிறார் தானே. திருப்பதி சாரத்தின் மேற்கில் பழையாற்றில் குளித்தும் கீழ்புறத்தில் தேரேகாலில் குளித்தும் அந்நன்னீரைக் குடித்தும் இருப்பார்தானே! அது எனக்கும் நேர்ந்திருக்கிறது தானே! அவர் வழிபட்ட திருவாழிமார்பனை நானும் வழிபட்டிருக்கிறேன் தானே!
எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான பாடல்களும் உண்டு நம்மாழ்வாரிடம்.
‘பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காந்தொறும் – பாவியேன்
மெய் ஆவி, மெய் மிகவே பூரிக்கும் அவ்அவை
எல்லாம் பிரான் உருவே என்று’
யாவும் இறைவடிவம் என்பது தான் பாடலின் நுட்பம்.
இன்னும் இருக்கின்றன ஈண்டு நான் பேசாத அந்தாதிகள். பொதுவாக அபிராமி அந்தாதி என்ற ஒரு செல்வத்தை மட்டுமே அறிந்திருக்கும் தமிழருக்கு, தோண்டினால் கிடைப்பது பெரும் புதையல் என்பது தெரியாது.
(தொடரும்)