என் தொஸ்தாயெவ்ஸ்கி

ஒரு எழுத்தாளன் நிகழ்காலத்தைப் பார்ப்பது போலவே இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறான். அதற்கான கண் அவனுக்கு உண்டு. இறந்தகாலத்தில் நடந்த பேரழிவுகள் எப்படி அவனைத் துன்புறுத்துகின்றனவோ அதே போல வருங்காலத்தில் நடக்கவிருக்கும் பேரழிவுகள் பற்றிய எதிர்பார்ப்பும், ஊகங்களும் அவனைத் துன்புறுத்துகின்றன. அவனுடைய அதீத நுண்ணுணர்வு அவனை மிகவும் துயரம் கொண்டவனாக பதற்றம் நிறைந்தவனாக எப்போதும் இருக்கச் செய்கிறது. அப்படித் துன்பப்பட்ட ஒரு ஆன்மாதான் தொஸ்தாயெவ்ஸ்கி.

fyodor-dostoevsky

ஃப்யோடர் தொஸ்தாயெவ்ஸ்கி

தொஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் உக்கிரமான நாடகீயத் தருணங்கள் நிறைந்தவை. குற்றமும் தண்டனையும் நாவல் ரஸ்கோல்நிகோவ் செய்யும் கொலையை மையப்படுத்தி நிகழ்கிறது. அது போல கரமாசவ் சகோதரர்கள் நாவல் தந்தை கரமாசவின் கொலையை மையப்படுத்தி நிகழ்கிறது. தந்தை ஃப்யோடர் கரமாசவின் மூன்று மகன்களான டிமிட்ரி, இவான், அல்யோஷா- தந்தை கரமாசவிற்கு முறைகேடாக பிறந்தவன் என்று கருதப்படும் ஸ்மெர்ட்யகோவையும் சேர்த்து நால்வரும் ஃப்யோடர் கரமாசவின் கொலையில் ஏதோவோரு வகையில் சம்பந்தப்படுகிறார்கள். டிமிட்ரி, குருஷன்கா என்ற பெண் மீது அதீத விருப்போடு இருக்கிறான். அதே நேரத்தில் தந்தை கரமாசவ் குருஷன்காவுக்கு மூன்றாயிரம் ரூபள்கள் கொடுத்து அவளை தன்னுடையவளாக்கிக் கொள்ளப் போவதாகச் சொல்கிறார். தந்தை மகனுக்குமான இந்த பிரச்சனையில் தந்தை கரமாசவின் கொலை நிகழ்கிறது.காவல் துறை டிமிட்ரிதான் கொலையை செய்திருக்ககூடும் என்று எண்ணி அவனை கைது செய்கிறது. ஆனால் உண்மையில் இவான்தான் மறைமுகமாக ஸ்மெர்ட்யகோவை உந்திக் கொலை செய்ய வைக்கிறான். தன் மீதான குற்றவுணர்வால் இவான் மனபிறழ்வு அடைகிறான். ஸ்மெர்ட்யகோவ் தற்கொலை செய்து கொள்கிறான். டிமிட்ரி சிறை தண்டனை பெறுகிறான். அல்யோஷா சிறுவர்களுடன் நிகழ்த்தும் உரையாடலோடு நாவல் முடிவடைகிறது.

இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத வேண்டும் என்று தொஸ்தாயெவ்ஸ்கி எண்ணியிருந்தார். ஆனால் நாவல் வந்த அடுத்த வருடம் அவர் மரணமடைந்தார். பேதை நாவல் இப்படிப்பட்ட நாடகீயத் தருணங்களால் ஆனது அல்ல என்பது உண்மையே. மனநல விடுதியிலிருந்து திரும்பும் மிஸ்கின் தன் குடும்பப் பெயரை கொண்டிருக்கும் யெபான்சினின் மனைவியை சந்திக்க அவர்கள் வீட்டுக்கு செல்கிறான். அங்கே நாஸ்டாஸியாவின் வரைபடத்தை பார்க்கிறான். அவளின் முகத்தில் துயரத்தை பார்ப்பவன் அவளுக்காக இரக்கம் கொள்கிறான். அவளை துயரத்திலிருந்து காப்பாற்ற நினைக்கிறான். அன்று நிகழும் நாஸ்டாஸியாவின் பிறந்த நாள் விருந்தில் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறான். அதே நேரத்தில் நாஸ்டாஸியா மீது அதீத விருப்பால் துரத்தப்படும் ரோகஸின் அவளுக்கு ஒரு லட்சம் ரூபள்களை அளித்து அவளை தன்னுடன் வர சொல்கிறான். மிஸ்கினின் தூய அன்புக்கு முன் தன்னை மிகவும் கீழானவளாக கருதும் நாஸ்டாஸியா ரோகஸினுடன் சென்று விடுகிறாள்.அதன்பின் ரோகஸினுக்கும் மிஸ்கினுக்கும் இடையில் ஊசலாடியபடியே இருக்கிறாள் நாஸ்டாஸியா. இதற்கிடையில் அக்லேயா என்ற யெபான்சினின் கடைசி மகள் மிஸ்கினை விரும்புகிறாள். இறுதியில் அக்லேயாவின் மீதான காதலுக்கும் நாஸ்டாஸியாவின் மீதான இரக்கத்திற்கும் இடையில் நாஸ்டாஸியா மீதான இரக்கத்தின் பக்கமே மிஸ்கின் செல்கிறான். ஆனால் மறுபடியும் நாஸ்டாஸியா மிஸ்கினை விட்டு ரோகஸினிடம் சென்று விடுகிறாள்.இந்த முறை ரோகஸின் நாஸ்டாஸியாவை கொலை செய்து விடுகிறான். ரோகஸினுக்கு பதினைந்து வருட சிறை தண்டனை கிடைக்கிறது. மிஸ்கின் மறுபடியும் மனநலம் பாதிக்கப்பட்டு மனநலவிடுதியில் சேர்க்கப்படுகிறான்.

crime-and-punishmentதொஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. அவை கருத்துருவகங்கள். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்நிகோவ் ஒரு வட்டிக்கடை அம்மையாரை கொலை செய்கிறான். அங்கே எதிர்பாராத விதமாக வந்துவிடும் அவளின் தங்கையையும் கொலை செய்து விடுகிறான். ரஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தியல் அடிப்படையில் இந்த கொலையை செய்கிறான். மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒருவகையினர் சாதாரண மனிதர்கள். இவர்கள் சட்டத்திற்கும் , அறத்திற்கும் , விழுமியங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள். மற்றொரு வகையினர் உண்டு. இவர்கள் அதிமனிதர்கள். தாங்கள் செய்யும் செயலால் மானுட இனமே நன்மை அடையும் என்கிறபோது அதன் பொருட்டு அவர்கள் எந்த செயலையும் செய்யலாம். எந்த கொலைகளும் செய்யலாம்.அவர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள். மாறாக அவர்கள் புரவலர்களாக கொண்டாடப்படுவார்கள். இது ஒரு கருத்தியல். இந்த கருத்தியலை ரஸ்கோல்நிகோவ் என்ற எந்த அதிகாரமும் இல்லாத ஒரு மாணவன் நிகழ்த்தும்போது அது இரண்டு கொலைகளில் முடிந்து விடுகிறது. இது போன்ற ஒரு கருத்தியலை அதிகாரத்தில் இருப்பவர்கள் உருவாக்கிக்கொண்டால் அது மானுடம் நினைத்துப் பார்க்கவே அஞ்சக்கூடிய பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது. அதற்கான சான்றுகள் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

தொஸ்தாயெவ்ஸ்கியின் இறுதி நாவலான கரமாசவ் சகோதரர்களில் இவான் கரமாசவ் சொல்லும் ஒரு வாக்கியம் ‘கடவுள் இல்லையென்றால் பின் எல்லாம் அனுமதிக்கப்பட்டவையே’ . தொஸ்தாயெவ்ஸ்கியின் உலகத்திற்கான திறவுகோல் இந்த வாக்கியம். இவான் கரமாசவ் ஒரு அறிவுஜீவியாக இருக்கிறான். அவனால் சேமர்டகோவ்வை மறைமுகமாக உந்தி தன் தந்தையை கொலை செய்ய வைக்க முடிகிறது. இவான் மேல் சொன்ன கருத்தியலின் துணை கொண்டுதான் இதைச் செய்கிறான். கடவுள் இல்லையென்றால் கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட அறமும் விழுமியங்களும் இறக்கின்றன. அறமும் விழுமியங்களும் இல்லாத ஒரு உலகில் எல்லாம் அனுமதிக்கப்பட்டவை. இங்கே இவான் கரமாசவ் என்ற அறிவுஜீவி கதாபாத்திரத்தை கருத்துருவகமாக மாற்றி சற்று விரித்தால் நாம் வந்து சேரும் இடம் விஞ்ஞானம். ஆம். கடவுள் இல்லை என்ற எதிர்வினையில் தன் இருப்பை உருவாக்கிக் கொண்ட ஐரோப்பிய நாத்திகவாதமும் அதன் சகோதர சோஷியலிசமும் கடவுளுக்கு மாற்றாக பகுத்தறிவை முன்வைத்தன- அதன் அனைத்து உரையாடல்கள், கலைகள், தத்துவங்கள் மூலமாக முன்னேற்றிய ஒரு துறை விஞ்ஞானமே.

இன்று ஒரு விஞ்ஞானியால் எந்த அறப்பிரச்சனையும் இல்லாமல் அணுமின் நிலையத்தில் வேலை செய்ய முடிகிறது.சோதனை கூடத்தில் அமர்ந்து கொண்டு எந்த சலனமும் இல்லாமல் மரபணு மாற்று விதைகளை உருவாக்க முடிகிறது. இந்த விஞ்ஞானிகள் யார்? ஏதேனும் தனித்த ஒரு சமூக சூழலில் வளர்ந்தவர்களா? இல்லையே. நாம் வாழும் இதே சமூகத்தில் படித்து வளர்ந்த மத்திய தர வர்க்கத்தினர்தானே. அப்படியென்றால் எப்படி எந்த சலனமும் இல்லாமல் அவர்களால் இதை செய்ய முடிகிறது? இவானின் வாக்கியமே அதற்கான பதில் தருகிறது.

மிகப்பெரிய அநீதிகளையும் , பேரழிவுகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானம், அரசு, நவீன முதலாளித்துவம் அல்லது கம்யூனிசம் (இரண்டும் ஒன்றுதான்) தன் வலைப்பின்னலின் மறுமுனையில் மத்திய தர வர்க்கத்தினரைத் தனக்கு வேலை செய்பவர்களாகவும் நுகர்வோராகவும் இருக்கும்படி செய்து முடிந்திருக்கிறது. நாமும் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் அந்த வலையில் முன்னேறியபடி இருக்கிறோம். நமது கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. கூட்டு பாவம் என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறார் கரமாசவ் சகோதரர்கள் நாவலில் வரும் பாதிரியார் ஜோஷிமா.கடவுளை கொன்றுவிட்டு அந்த இடத்தை பிடித்த விஞ்ஞானத்தால் தன்னளவில் அறத்தையோ, விழுமியங்களையோ உருவாக்க முடியவில்லை என்பதே இவை அனைத்தும் சாத்தியமாகக் காரணமாக இருக்கிறது.விஞ்ஞானம் என்ற சட்டகத்துக்குள் அவற்றுகான இடமே இல்லை. இதை முன்னறிவித்தவர் தொஸ்தாயெவ்ஸ்கி.விஞ்ஞானம் குறித்து எந்தவிதமான அறிதலும் இல்லாமல் தொஸ்தாயெவ்ஸ்கி இதை சொல்லவில்லை. கரமாசவ் சகோதரர்கள் நாவலில் அவர் அந்த காலகட்டத்தின் விஞ்ஞான வளர்ச்சியை,அது தொடர்பான உரையாடல்களை, மேலோட்டமாக அல்ல- மிக தீவிரமாக அறிந்திருகிறார் என்பதற்கான தடயங்கள் இருக்கின்றன.

தூய அறிவுக்கு எதிர் நிலையில் அவர் மற்றொரு கருத்துருவகத்தை நிறுவுகிறார். அதுவே அமைப்புகளுக்கு வெளியே இருக்கும் கிறுஸ்து. இந்த கிறுஸ்துவின் கருத்துருவகக் கதாபாத்திரங்களே அல்யோஷா(கரமாசவ் சகோதரர்கள்), மிஸ்கின் ( பேதை), ஒரளவு வரை சோனியா (குற்றமும் தண்டனையும்). இங்கே அல்யோஷா மடத்திலிருப்பதும், மிஸ்கின் மனநல விடுதியிலிருந்து திரும்புவதும், சோனியா விலைமாதுவாக இருப்பதும் தற்செயல்கள் அல்ல. இவர்கள் மைய அமைப்புக்கு வெளியே இருக்கிறார்கள். பணம் என்பது லெளகீகத்தை குறிக்குமென்றால் பணத்தின் மீது மதிப்பற்றவர்கள். பேதை நாவலில் ஒருவர் மிஸ்கினைப் பற்றி சொல்லும் போது ஸ்லாவோவிரும்பி (Slavophile) என்று குறிப்பிடுவார். ஸ்லாவோவிரும்பி என்பது மேற்கு ஐரோப்பாவின் தாக்கத்தை எதிர்ப்பது.

110பேதை நாவலில் மிஸ்கின் இரண்டு இடங்களில் மட்டுமே நீளமான உரையாடலை நிகழ்த்துகிறான். ஒன்று முதல் முறையாக ஜெனரல் யெபான்சின் வீட்டில் யெபான்சினின் மனைவியையும் அவரது மூன்று மகள்களையும் சந்திக்கும்போது. மற்றோன்று ஒரு மாலை விருந்தில். முதல் உரையாடல் மரண தண்டனை பற்றியது. இரண்டாவது உரையாடல் ரோமன் கத்தோலிக்கம் பற்றியது. ரோமன் கத்தோலிக்கம் பற்றி மிஸ்கின் சொல்வதே தொஸ்தாயெவ்ஸ்கி எதை நினைத்து அச்சப்படுகிறார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ரோமன் கத்தோலிக்கத்தின் எதிர்வினைதான் ஐரோப்பிய நாத்திகவாதமும் , சோஷியலிசமும். அவை ரோமன் கத்தோலிக்கத்தின் மீதான விரக்தியால் முளைத்தவை. அவை தம்மளவில் சுய சிந்தனைகள் அல்ல. சமயம் உருவாக்கிய அற நம்பிக்கைகள் ரோமன் கத்தோலிக்கத்தால் தோல்வியடைந்த காரணத்தால் அவற்றை மறுபடியும் இவை மீள் உருவாக்கம் செய்ய முயல்கின்றன. ஆன்மிக தாகத்தில் இருக்கும் மானுட குலத்தின் தாகத்தைத் தணிக்கவும் காப்பாற்றவும் இவை முயல்கின்றன. அதை கிறுஸ்துவின் மூலமாக அல்லாமல் வன்முறையால் செய்ய முயல்கின்றன. இவை மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்கிறான் மிஸ்கின். அதுவும் ரஷ்யாவில் அது பயங்கரமாக இருக்கும் என்கிறான். உண்மையில் நாம் ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்த்து ரஷ்ய வேர்களை நோக்கி மக்களைத் திருப்ப வேண்டும் என்கிறான்.அப்போது ஒருவர் சொல்கிறார், நீங்கள் சமூகத்தில் பழக பழக இவை எல்லாம் பெரிய விஷயங்களாக தெரியாது, என்று. இது முக்கியமான ஒரு வாக்கியம். அதாவது தொஸ்தாயெவ்ஸ்கி நிறுவனப்படுத்தப்படாத அமைப்புக்கு வெளியே உள்ள ஒரு கிறுஸ்துவை யத்தினிக்கிறார்.

இந்த கதாபாத்திரங்கள் எல்லாமே பிறர் மீது அன்பை மட்டுமே செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இங்கே அன்பு என்பது தூய அன்பு. தூய அறிவுக்கு எதிரிடையாக தூய அன்பு. பிறரின் துன்பத்தை தன் துன்பமாக கருதுபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக அழுகிறார்கள்.துயரம் கொள்கிறார்கள். மிஸ்கினிடமும் அல்யோஷாவிடமும் பிற கதாபாத்திரங்கள் தங்களின் அகத்தை சட்டென்று திறந்து கொள்கிறார்கள். கரமாசவ் சகோதரர்கள் நாவலில் மிக எளிதாக அல்யோஷாவை தன்னால் வசியப்படுத்திவிட முடியும் என்று குருஷன்காவின் உறவினான ராத்திகனிடம் சவடால் விடும் குருஷன்கா அல்யோஷா வந்த பின் அவனிடம் கிட்டத்தட்ட சரணாகதி என்பது போல் ஆகிறாள். குருஷன்கா மீது அதீத விருப்பத்தால் இருக்கும் டிமிட்ரியும் நாஸ்டாஸ்யா மீது அதீத விருப்புடன் இருக்கும் ரோகஸினும் முறையே அல்யோஷாவிடமும் மிஸ்கினிடமும் தங்களின் அந்தரங்கமான துயரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். குற்றமும் தண்டனையும் நாவலில் மர்மலதேவ்வின் மூலம் சோனியா என்ற அவனது பெண்னை பற்றி மதுவகத்தில் வைத்து அறிந்து கொள்ளும் ரஸ்கோல்நிகோவ் தான் கொலை செய்த பின் அந்த கொலையை தான் ஏன் செய்தேன் என்பதை சோனியாவிடமே சொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறான். அதைப்போல தான் கொலை செய்தபின் சோனியாவிடம் சென்று அதை சொல்கிறான். ‘நான் நெப்போலியனாக விரும்பினேன். அதனால் நான் கொலை செய்தேன்,’ என்கிறான். தன் தந்தை மர்மலதேவ் குடிகாரராக இருப்பதால் வீட்டின் பொருள் தேவைக்காக ஒரு சிறிய சூழ்ச்சியில் விலைமாதுவாகும் சோனியாவே பிறரின் துயரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆத்மா என்பதை அவன் அறிவதால் அவளிடம் இதை சொல்கிறான். உடனே சோனியா, ‘அழுதபடியே நாற்சந்திக்கு சென்று மானுட குலத்திற்கு முன் மண்டியிட்டு ‘நான் ஒரு கொலைகாரன்,’ என்பதை பிரகடனம் செய்’ என்று சொல்கிறாள். இறுதியில் ரஸ்கோல்நிகோவ்வும் அப்படியே செய்கிறான்.

அல்யோஷாவையும் மிஸ்கினையும் எடுத்துக்கொண்டால் அவர்களால் எந்த ஒரு சம்பவத்தையும் நிகழ்த்தவோ நிகழாமல் தடுக்கவோ முடியவில்லை.மிஸ்கினால் நாஸ்டாஷியாவின் கொலையையோ அல்யோஷாவால் தன் தந்தையின் கொலையையோ தடுத்து நிறுத்த இயல்வதில்லை. ஒரு வகையில் பார்த்தால் அவர்களின் தூய அன்பை கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள்.இவான் கரமாசவால் ஒரு குறிப்பட்ட கட்டத்திற்குப்பின் அல்யோஷாவின் இருப்பை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. பேதை நாவலில் இப்போலிட் மிஸ்கினை நேரடியாகவே தூற்றுகிறான். நமக்கு லெளகீகமான ஒரு அன்பை ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே செலுத்தப்படும் தூய அன்பு நம்மை அச்சுறுத்துகிறது. இங்கே மேலும் ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு குரல் அமைப்புக்கு வெளியிலிருந்து வரும்போது அது எல்லா வகைப்பட்ட மனிதர்களையும் சலனமடைய, நிம்மதியிழக்கச் செய்கிறது. உதாரணமாக இன்று மனித உரிமை குறித்து , நாட்டார் கலைகள் அழிவது குறித்து, பழங்குடியினர் தங்கள் இருப்பிடத்தை விட்டு துரத்தப்படுவது குறித்து, விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து, உலகமயமாதலின் பிரச்சனைகள் குறித்து , அணு பெளதீகம் குறித்து, மரபணு மாற்று விதைகளை குறித்து என்று எவை குறித்தும் நாம் அக்வாபீனா பொத்தல்களை மேடையில் வைத்துக்கொண்டு பேசலாம்.

ஆனால் அவற்றை குறித்து பேசும்போதே குறியீட்டுத்தளத்தில் நவீன முதலாளிகளுக்கும் அரசுக்கும் ஒரு செய்தி சொல்கிறோம். நாங்கள் இந்த அமைப்பின் சலுகைகளையும் செளகரியங்களையும் மிகவும் விரும்புகிறோம். உண்மையில் நாங்கள் விரும்புவது மாற்றம் அல்ல மாறாக Status Quo தான் என்று. உடனே கார்ப்ரேட்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். பிரச்சினை எதுவும் இல்லையென்றானபின் நமக்கு உதவிகள் செய்யக்கூட முன்வருகிறார்கள். இப்படித்தான் நாட்டார் கலைகள் குறித்தும் நாட்டார் பண்பாடு குறித்தும் ஆராய கார்ப்ரேட் உதவி செய்யும் அபத்தத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஆக, இந்த அமைப்புக்குள் இருந்து கொண்டே எழுப்பப்படும் குரல்கள் மையத்தில் கலக்கின்றன. அப்படியல்லாமல் அமைப்புக்கு வெளியில் இருக்கும் குரல்கள் சேர்ந்து ஒலிக்கும்போது அது மிகப்பெரிய சலனத்தையும் அச்சத்தையும் மையத்தில் ஏற்படுத்துகிறது. உடனே அந்தக் குரல் ஒடுக்கப்படுகிறது. ஆனால் அதுதான் உண்மையான மாற்றுக்குரல். தொஸ்தாயெவ்ஸ்கியும் அப்படிப்பட்ட ஒரு மாற்றுக் குரலை ஒலிக்கச் செய்கிறார். அது புரட்சியின் குரலாகவோ கலகக் குரலாகவோ அல்லாமல் தூய அன்பின் குரலாக இருக்கிறது.அதுவே தொஸ்தாயெவ்ஸ்கியின் குரல்.

அவர் நாவலின் இருமைகள் மிஸ்கின் X ரோகஸின், ரஸ்கோல்நிகோவ் X சோனியா, இவான் X அல்யோஷா சந்தித்துக்கொண்டு மிக அந்தரங்கமான உரையாடல்களை நிகழ்த்திக் கொள்கின்றனர். இவையே தொஸ்தாயெவ்ஸ்கி நாவல்களின் நாடகீயத் தருணங்களின் உச்சம். கரமாசவ் சகோதரர்கள் நாவலில் வரும் புகழ்பெற்ற The Grand Inquistor இவான் கரமாசவ் அல்யோஷாவிடம் உரையாடலில் சொல்லும் புனைவே. அவரின் நாவல்களை தனித்த ஒன்றாக அல்லாமல் இணைத்துப் பார்க்கும்போது அதில் ஒரு தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. ரோகஸினில் டிமிட்ரியையும், ஸ்விட்ரிகைலோவ்வில் தந்தை கரமாசவையும்,மிஸ்கினில் அல்யோஷாவையும் சோனியாவையும்,  குருஷன்காவில் நாஸ்டாஸ்யியாவையும், ரஸ்கோல்நிகோவில் இவானையும் நாம் பார்க்கலாம்.

the_brothers_-karamazov_large-254x300கரமாசவ் சகோதரர்கள் நாவலில் வரும் கோல்யாவும் பேதை நாவலில் வரும் கோல்யாவும் கிட்டத்தட்ட ஒரே சிறுவன்தான். அவர் ஒரு இருமையை உருவாக்கினாலும் அதில் பிரச்சாரம் இல்லை. டிமிட்ரி அதீத விருப்பால் துரத்தப்படுபவன். அதை முன்னிட்டு பல தவறுகளை செய்பவன். ஆனால் அவனின் தொலைந்து போன பால்ய காலம் ஒன்று உள்ளது. ஹெர்ஸன்டியூப் என்ற மருத்துவர் மூலமாக நாவலின் இறுதியில் அது நீதிமன்றத்தில் பேசப்படுகிறது. அதே போல ரோகஸின் பற்றிய ஒரு சித்திரத்தை வரையும்போது அவன் மட்டும் நாஸ்டாஸ்யா மீதான அதீத விருப்பால் உந்தப்படாமல் இருந்தால் ஒரு கட்டளைக்கு அடிபணியும் பெண்னை திருமணம் செய்து கொண்டு அவனது தந்தையை போலவே பெரும் செல்வம் ஈட்டக்கூடியவனாக இறுதியில் சகாப்ட்சி (Skoptsy) போன்ற ஒரு ரகசிய குழுவின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவாக அவன் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வான் என்று மிஸ்கினும் நாஸ்டாஸியாவும் சொல்கிறார்கள். ரோகஸின் இருண்மையானவன்தான் என்றாலும் அவன் தீமையின் உருவம் அல்ல. அவரின் பெண்கள் பெரும்பாலும் அழகிகள் அல்ல. மாறாக, பேரழகிகள்.  துயரத்தில் இருப்பவர்கள்.

தொஸ்தாயெவ்ஸ்கியின் மைய கதாபாத்திரங்கள் எத்தனை முக்கியமானவையோ அதே அளவுக்கு முக்கியமானவை அவரின் குறும் கதாபாத்திரங்கள். உதாரணமாக குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் மர்மலதேவ். சோனியாவின் தந்தையான மர்மலதேவ் குடிகாரர்.ஆழமான முறையில் தான் பிறரால் மதிக்கப்படவில்லை என்பதை ஒருவன் உணரும்போதே அவன் குடிக்கிறான் என்று மர்மலதேவ் ஒரிடத்தில் சொல்கிறார். இது மர்மலதேவ் கதாபாத்திரத்தை பற்றிய ஒரு முக்கியமான சித்திரத்தை ஏற்படுத்தும் வரி. அது போல பேதை நாவலில் வரும் இப்போலிட் காசநோயால் பாதிக்கப்பட்டவன். மரணத்தை எதிர்நோக்குபவனின் பார்வையில் இந்த உலகம் எப்படி காட்சியளிக்கிறது என்பதை ‘ஒரு அவசியமான விளக்கம்’ என்ற அறிக்கையில் அவன் விளக்குவது நாவலின் முக்கியமான இடம். ஒரு சாதாரணமானவன் அந்திப்பொழுதை பார்ப்பதற்கும் ஒரு நோயாளி அந்திப்பொழுதை பார்ப்தற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை நாம் இப்போலிட்டின் அறிக்கையில் கண்டுகொள்ளலாம். இங்கே ஒரு விஷயத்தை மிக அழுத்திச் சொல்ல வேண்டும். தொஸ்தாயெவ்ஸ்கியின் நாவலின் முக்கிய விஷயமே இப்படி ஒரு குடிகாரனின் குரல் ஒரு நோயாளியின் குரல் என எல்லா குரல்களையும் ஒலிக்கச் செய்வதுதான்.

மேலும் அவர் தன் நாவல்களில் மைய கதாபாத்திரங்களின் பிரச்சனைகளைக் குறும்பாத்திரங்கள் வழியாகச் சொல்லவும் செய்கிறார். உதாரணமாக ரஸ்கோல்நிகோவை புரிந்து கொள்ள ஸ்விட்ரிகைலோவ் கதாபாத்திரம் பெரிய அளவில் உதவி செய்கிறது. ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்நிகோவின் தங்கை துனியா வேலை செய்த வீட்டின் முதலாளி.துனியா மீதான தன் பாலியல் வேட்கைக்காக அவளை தொடர்ந்து துரத்துபவன். பதினையந்து வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமானவன் என்று சொல்லப்படுபவன்.ஒரிடத்தில் ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்நிகோவை சந்திக்கும்போது சொல்வான், ‘பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிறபோது அதை நான் எதன் பொருட்டு நிறுத்திக்கொள்ள வேண்டும்?’ என. நாவலின் இறுதியில் துனியா அவனுடைய பாலியல் இச்சைக்கு இணங்க மறுக்கும்போது சட்டென்று அவனுள் ஏற்படும் கீழ்மையிலிருந்து மேன்மைக்கான உச்சத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். ஸ்விட்ரிகைலோவ் எப்படி தன் பாலியல் விருப்பத்தின் காரணமாக தான் செய்யும் எந்த செயலுக்கும் குற்றவுணர்வு கொள்ளாமல் இருக்கிறானோ அதுபோல ரஸ்கோல்நிகோவின் கொலையையும் தன் இருப்பின் நிறைவுக்கான கொலையாக அமைகிறது.

நாவலின் போக்கை புரிந்து கொள்ள நாவலில் சில குறியீடுகளை பயன்படுத்துகிறார் தொஸ்தாயெவ்ஸ்கி. ஒரு குதிரையை அதிக அளவில் மது அருந்திய ஒருவன் மிக மூர்க்கமாக அடித்து தன் குரூர மகிழ்ச்சிக்காக கொலை செய்வதாக ரஸ்கோல்நிகோவ் ஒரு கனவு காண்கிறான். ஒரு வகையில் ரஸ்கோல்நிகோவ் செய்யும் கொலையும் அது போல தன் இருப்பின் நிறைவுக்காக செய்யப்படும் கொலையாக அமைகிறது என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது.

பேதை நாவலில் ஹோன்ஸ் ஹோல்பின் என்ற ஒவியர் வரைந்த கிறுஸ்துவின் ஒவியம் ஒன்று வருகிறது. கிறுஸ்து சிலுவையிலிருந்து அகற்றப்பட்டு படுத்த நிலையிலிருக்கும் ஒரு காட்சியை சித்தரிக்கும் ஒவியம். இதுவும் இந்த நாவலை புரிந்துகொள்ள ஒரு குறியீடுதான். இந்த கிறுஸ்து வலியும் வேதனையும் கொண்ட ஒரு எளிய மனிதனாக இயற்கையின் மிகப்பெரிய சக்திக்குமுன் தோற்றுப் போனவனாக இருக்கிறார். இயற்கையின் நியதிகளை மீறி லாசரஸை உயிர்ப்பிக்கச் செய்த கிறுஸ்து அதே இயற்கை என்னும் மிகப் பெரிய கொடிய விலங்கின் முன் மீள் உயிர்ப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறார். இது பார்ப்பவர்களின் நம்பிக்கையை இழக்க செய்வதாக இருக்கிறது. மிஸ்கினும் நாவலின் இறுதியில் யதார்த்த உலகின் விளையாட்டுகளால் மறுபடியும் மனநலம் குன்றியவானாகிறான். தான் ஒலிக்கச்செய்யும் குரல் யதார்த்தத்தில் ஒலிக்க முடியாத குரலோ என்று  தொஸ்தாயெவ்ஸ்கி அச்சப்படுகிறார்.தூய அன்பு அறிவின் முன் தோற்றுவிடுமோ என்று பதறுகிறார். தொஸ்தாயெவ்ஸ்கி எதையெல்லாம் நினைத்து அச்சப்பட்டாரோ, பதறினாரோ, அவையெல்லாம் இன்று அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. அவற்றை நிகழ்த்துவோராகவும் அவற்றின் சாட்சிகளாகவும் இருந்து கொண்டிருக்கும் நாம் வேறு என்ன செய்துவிடப் போகிறோம்?

தொஸ்தாயெவ்ஸ்கி ஒரு வாசகனுக்கு, மிக முக்கியமாக, இளைஞனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அவரிடம் நீங்கள் உங்களின் இயற்பியல் சந்தேகங்களிலிருந்து உங்கள் காதலர் உங்களிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை என்பது வரை எதை குறித்தும் புகை பிடித்துக் கொண்டோ, மதுவகத்தில் அமர்ந்து கொண்டோ பேசலாம். டால்ஸ்டாய் போல கையை உயர்த்திக் கொண்டு உங்களுக்கு அவர் ஆசிர்வாதம் செய்து துன்புறுத்த மாட்டார். அறிவுரைகளோ, ஆலோசனைகளோ வழங்க மாட்டார். மாறாக உங்களுக்காக துயரம் கொள்வார்,  தாராளமாக நீங்கள் அவர் தோளில் சாய்ந்து கொள்ளலாம். அப்போது கொதி நெருப்பில் நிற்பவனின் முணுமுணுப்பு ஒசை உங்களுக்கு கேட்கக்கூடும்.அதுவே தொஸ்தாயெவ்ஸ்யின் புத்தகங்களில் நாம் கேட்கும் ஒசை.