மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்

ப்பொழுதும் போல்” எதுவும் நடப்பதேயில்லை.
முப்பொழுதும் முகிழ்க்கும் புதிது.
இப் பொழுதுக்கு ஏழு கடல், ஏழு மலை,
ஏழு ஜென்மம் தாண்டி வர வேண்டும்.

0

அது துல்லியமானது.
காத்திரமானது.
பிரபஞ்சத்திலேயே பலமானது.
உண்மை மட்டுமே ஆனது.
அதைப் பிடித்துக் கொண்டு
சொர்க்கத்திற்குப் போய் விடலாம். – ஏன்
மோட்சத்தையே அடைந்து விடலாம்.
அது
இங்கு மட்டுமே இப்போது மட்டுமே.

0

தூய ஊற்றின் துளி ஒன்று
கலைஞனின் உள் பட்டு என்
கண்ணை, காதை, மனதைத் தொட்டு
ஒளியேற்றும். ஒளியை
கைப் பையில், பாக்கட்டில்,
நினைவில், உயிலில்
போட்டு வைக்க முடியாது.

0

எல்லா உணர்ச்சிகளும்
கண்ணீர்களும்
சிரிப்புகளும்
அப்போதைக்கு
மட்டுமே.

moon_tree

ற்று முன் பார்த்த
சந்திரன் – அருகில் ஒரு தாரகை –
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும், நிழலும்தான்.

மரமும், நிழலும் மட்டும்
மட்டமா என்ன?

0

திரை கழன்று
தெரியும் காட்சியும்
இன்னொன்றின் திரை.

0

ஸ்பரிசம்

உடல்
மொழியையும்
எண்ணத்தையும்
உதிர்த்து விட்டு
தானே
தொடர்பு கொள்ள
விழைகிறது.

0

கண்ணாடிக்கு நினைவுகளே இல்லை/கிடையாது.