திரு.பிரமிள் அவர்களோடு பழகும் சந்தர்ப்பம் எனக்கு திரு.டேவிட் சந்திரசேகர் மூலமாக நேர்ந்தது. எழுபதுகளின் மத்தியில் என் நண்பர் திரு.எஸ்.பார்த்தசாரதி தன்னுடன் பணி புரிந்து வரும் (சிண்டிகேட் வங்கி) டேவிட் சந்திரசேகரை எனக்கு அறிமுகம் செய்தார். இலக்கியம், ஆன்மிகம், சினிமா மற்றும் இதர கலைகளில் எனக்கும் டேவிடுக்கும் இருந்த ஒத்த ஆர்வம் எங்கள் நட்பை வளர்த்தது.
டேவிடும், அவர் நண்பர்கள் திரு.ஜெயபாலன் மற்றும் திரு. மணி (இவர்கள் இருவரையும் நான் சந்தித்ததே இல்லை; இவர்கள் அப்போது சென்னையில் இல்லை) ஆகியோரும் திரு. வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைப் புத்தக வடிவில் கொண்டு வர விரும்பினார்கள். இதன் நிமித்தம் திரு. சி.சு.செல்லப்பா அவர்களை டேவிட் சந்தித்தபோது நானும் உடன் சென்றேன். (செல்லப்பா அவர்கள் இருந்த அதே தெருவில்தான் நானும் இருந்தேன்.) புத்தக உருவாக்கத்தில் சி.சு.செ. பெரிதும் உதவினார். ‘பாலையும் வாழையும்’ வெளி வந்தது.
இது நடந்து கொண்டு இருக்கும்போதே அடுத்து திரு. தருமு சிவராமு (பிரமிள்) வின் கவிதைத் தொகுப்பை அச்சில் கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் (டேவிட் மற்றும் அவர் இரு நண்பர்கள்) விரும்பினார்கள். வெ.சா-வும், சிவராமுவும் சி.சு.செ.வின் இரண்டு மகன்கள்; சிவராமுவே “prodigal son” என்று டேவிட் கூறுவார். டேவிடுக்கு பிரமிளை சந்திப்பதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. என்னையும் உடன் வரச் சொன்னார். ‘அவர் மிகவும் விசித்ரமாகவும், எதிர்பார்க்க முடியாத விதமாகவும் பழகுவாராம். எனக்கு சந்திப்பதற்கு அச்சமாக உள்ளது. அவரிடம் ரொம்பக் கவனமாகப் பேச வேண்டுமாம். அதுவும் மௌனியைப் பற்றி குறை எதுவும் கூறிவிடக் கூடாதாம். நீங்களும் வாருங்கள்” என்று டேவிட் என்னை அழைத்தார்.
நாங்கள் பிரமிளை பெஸன்ட் நகரில் முதன் முதலில் சந்தித்தோம். அவர் ஒரு மிகச் சிறிய அறையில் குடி இருந்தார். அந்த அறையும், சூழ் நிலையும் அவர் வாழ்ந்து வரும் கடின வறுமை நிலையைக் காட்டின.
மிகவும் unconventional ஆக இருந்த போதிலும் அவர் எங்களிடம் நட்பாகவே பேசினார். அவர் பேசிய விதம் சென்னைவாசிகளான எங்களுக்கு மலையாள, தென்தமிழ் நாட்டு பாதிப்போடு அவர் பேசுவது போலத் தோன்றியது. (அது முற்றிலும் சரியல்ல) இடுப்பில் ஒரு துண்டு கட்டியிருந்தார். குத்திட்டுக் கொண்டு பேசினார். ஒரு பெட்டியில் நிறைய புத்தகங்களிருந்தன.
“தமிழ் நாட்டில் ஆறே ஆறு பேர்தான் கலகக்காரர்கள்” என்று கூறினார்; பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செ., வெ.சா., மற்றும் தான் என்றார். (இந்த ஜாபிதா இரண்டே வருடங்களில் தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.)
இதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரை சந்தித்து அவர் பேசுவதைக் கெட்கும் சந்தர்ப்பம் அடிக்கடி வந்தது. டேவிட் அவரைத் தன்னால் முடிந்தவரை பார்த்துக் கொண்டார். என் வீட்டிற்கு டேவிட் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து கொண்டிருந்த காலம் அது. பிரமிளும் அடிக்கடி வந்தார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பும், அவர் பேச்சுக்களையும் சம்பாஷணைகளையும் நேரில் கேட்கும் பேறும் அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் ஆரம்பத்திலுமிருந்தே எனக்குக் கிட்டியதால் பிரமிளுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்த ஈடுபாடு எங்களுக்கு ஒரு பொது ஆர்வமாக இருந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்புகளை பிரமிளைப் போல் யாரும் செய்ததில்லை என்றே எண்ணுகிறேன். பகவான் ரமணர் மீதும், காஞ்சிப் பெரியவர் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) மீதும் அவர் மதிப்புகொண்டிருந்தார். எனினும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர் எண்ணங்களிலும் எழுத்துகளிலும் மிக மிக அதிகமாகவும் முக்கியமாகவும் வியாபித்திருந்தார்.
அவர் பேசுகையில் இயல்பாக அவருடைய ஆழ்ந்த அகன்ற படிப்பும் brilliance-ம் தென்படும். மிக பலமான அபிப்ராயங்கள் கொண்டிருந்த போதும் உரத்தோ சப்தமிட்டோ அவர் பேசி நான் பார்த்ததில்லை. முழு நீள டெரிலின் சட்டையை பேன்ட்டில் இன் செய்து கொண்டு வருவார். ஒரே உடையை பல நாட்கள் அணிய வேண்டிய நிலையிலேயே அவர் இருந்தார்.
தன் சிறு பிராயம் பற்றியும், தாயார், தகப்பனார் பற்றியும் மிகச் சில சமயம் சொல்லுவார். வேடிக்கையும், ஹாஸ்யமும் புத்தி கூர்மையும் நிரம்ப பேசுவார். சில சமயம் கோபமும் எரிச்சலுமாயிருப்பார். எப்பேற்பட்ட நிலையிலும் பணம் வேண்டும் என்று வாய் திறந்து கேட்டதில்லை. டேவிட் வீட்டில் நடந்த கல்யாணத்திற்குச் சென்று வந்த பிறகு “அங்கு நன்றாக சாப்பிட்டேன் உடனே எக்ஸர்சைஸ் செய்து எல்லாவற்றையும் பலமாக மாற்றிக் கொண்டேன்” என்று குழந்தை மாதிரி சொன்னார்.
அவர் சொல்லியே Jorge Louis Borges, Nabokov போன்றவர்களை நாங்கள் படிக்க ஆரம்பித்தோம். (ஆனால் தாஸ்த்யவ்ஸ்கி பற்றியோ டால்ஸ்டாய் பற்றியோ அவர் பேசியதாக ஞாபகம் இல்லை.) Borgess பற்றி மௌனிதான் அவரிடம் முதலில் சொன்னார் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சரிதம், மேரி லூட்யென்ஸ் எழுதியது, முதல் பகுதி அப்போது வெளி வந்தது. அதை வாங்குமளவுக்குப் பணம் இல்லாததால் சர்மா என்ற ஒருவரிடம் அதை வாங்கிப் படித்து அதற்குக் கட்டணமாக ஒரு தொகை கொடுத்தேன். பிரமிளும் அதை படித்திருந்தார். ஹரிஜன ஆலயப் பிரவேசம் பற்றி கிருஷ்ணமூர்த்தி கூறிய மொழிகளை(1) சிலாகித்து நான் டேவிடிடம் சொல்லிய சில நிமிடங்களிலேயே பிரமிளும் வந்து அதைப் பற்றிக் குறிப்பிட்டு மிக உயர்வாகச் சொன்னது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. திரு.சர்மா பற்றிக் குறிப்பிடுகையில் “அவருக்கு என் மேல் பிரியம்” என்றவர் “அவருக்கு எல்லார் மீதும் பிரியம்” என்று முடித்தார்.
சா.கந்தசாமி, ஞானக் கூத்தன், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன் மீதேல்லாம் அவருக்கு இலக்கிய ரீதியான மரியாதை இல்லை. ஜெயகாந்தன் மீதும் அப்படியே. வானம்பாடிகள், கம்யூனிஸ்ட்கள் என்று அந்தப் பட்டியல் நீளும். ‘சோ’வின் துக்ளக்கில் சில இடங்களை ரஸித்துப் படிப்பார். அப்படிப் படிக்கையில் வாய்விட்டு பல முறை சிரித்து நான் பார்த்திருக்கிறேன். ‘மெகனாஸ் கோல்ட்’ அவர் விரும்பி மீண்டும் பார்த்த படம். அதே போல் ‘பொல்டெர்ஜிஸ்ட்’ படம் டெலிவிஷனுக்கெதிரான படம் என்று கூறுவார்.
அவர் கவிதைத் தொகுப்புக்கு ‘கைப் பிடியளவு கடல்’ என்ற தலைப்பைத் தந்து, அதற்கு அட்டைச் சித்திரத்தையும் அவரே வரைந்து தந்தார். செல்லப்பாவும் பிரமிளும் பேசாதும், சந்திக்காதும் இருந்த போதும் அந்தப் புத்தக உருவாக்கத்திலும் செல்லப்பா பெரிதும் உதவி செய்தார். பிரமிளும் செல்லப்பாவிற்காகவே “ஒரு பாப்பாத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி..” என்ற கவிதை வரிகளை ” ஒரு உயர் ஜாதிக்காரி நகத்தோடு என் பறை நகம் மோதி..” என்று செல்லப்பா அதைப் படிப்பதற்கு முன்பே மாற்றிக் கொடுத்தார். முதலில் அந்த கவிதைத் தொகுப்பை செல்லப்பாவிற்கே சம்ர்ப்பணம் செய்யலாமா என்று யோசித்தார். அது மிகவும் பர்சனலாக இருக்குமோ என்றே தன் தாயாருக்கு அதை சமர்ப்பித்தார். புத்தகம் வெளி வந்ததும், பிரமிளுக்கு அதன் அட்டை பிடிக்கவில்லை. “ஜோஸியப் புத்தகம் போலிருக்கிறது” என்று சொன்னார்.
ந்யூம்ராலஜியிலும், இதர ஜோஸிய விஷயங்களிலும் ஆர்வம் காட்டினார். தன் மேலேயே பல பரிசோதனைகளைப் பண்ணிக் கொண்டார். அவர் பெயர் பல மாற்றங்களை அடைந்ததற்கு இதுவே காரணம். அவர் நண்பர்களில் பலரும் பெயரை மாற்றிக் கொண்டமைக்கும் இதுவே காரணம். நாரணோ ஜெயராமன் என்பது கூட இதனால் என்று நினைவு. டேவிட் சந்திரசேகர் ‘தாவிதோ சந்துரு’ வானதற்கு இவரே காரணம். என் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது ஒரு ‘எஸ்’ கூடச் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். இல்லையேல் மிகுந்த ‘பணச் சிக்கல்’ வரும் என்றார். இதை சாதாரணமாகச் சொன்னாரே அன்றி கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாத காரணத்தால் நான் மாற்றிக் கொள்ளவில்லை.
சி.சு.செ.வைச் சந்திக்காமலிருந்த காலம். ஓரு நாள் அவர் வீட்டுக்குப் போய் விடலாம் என்று முடிவு செய்து உள்ளே நுழையப் போனவர் படி ஏறும் முன் பிளாட்பாரம் தடுக்கியதால், போக வேண்டாம் என்று திரும்பி விட்டார்.
தியசாபிகல் சொசைடி, ஜே.கே. ஸ்டடி சென்டர், கன்னிமாரா என்று பல நூலகங்களிலும் புத்தகம் படிப்பார். நபகொவின் ஒரு புத்தகம் (அடா) என்னிடம் இருப்பது கண்டு அதை வாங்கிக் கொண்டார். பெர்க்மனுடைய ‘ஃபோர் ஸ்க்ரீன் ப்ளெஸ்’ அவரிடமிருந்தே வாங்கி நான் படித்தேன்.
ஏப்ரல் 20 அவரது பிறந்த தினம் (1939). ஏப்ரல் 20தான் ஹிட்லருக்கும் பிறந்த தினம் என்பது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஒருவருடைய நெற்றி மற்றும் மூக்கின் அமைப்பு, கைரேகை போன்றவற்றுக்கும் அவரது வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறுவார். (கிருஷ்ண மூர்த்தியின் நெற்றியிலிருந்து பள்ளம் இல்லாமல் நேர்க் கோடாக இறங்கும் மூக்கை விசேஷத் தன்மையது என்பார்) ஓருவர் முகத்தைப் பார்த்தே தன்னால் அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும் என்பார். தனக்கு ‘மைண்ட் ரீடிங்க்’ தெரியும் என்று அவர் கூறியதைக் கேட்ட என் தாயார் அவருக்கு அமானுஷ்ய சக்தியெல்லாம் இருக்கும் என்று நம்பினார்.
ஒரு அதீத செல்லம் கொடுக்கப்பட்ட குழந்தையின் மனப் பான்மை (pampered and spoiled child) அவருக்கு இருந்தது. ஆனால் அவர் ஒரு போதும் பணம் உறிஞ்சுபவராகவோ, தன்மானத்தை விட்டவராகவோ இருந்ததில்லை. சிறு சிறு பண உதவிகளைக் கூட தான் எழுதிய புத்தகங்களை அவை வெளி வருகையில் பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்து அவர் சரி செய்திருக்கிறார்.
சில சமயம் சில விஷயங்களைப் பற்றி மிகவும் அற்புதமாக வர்ணித்துக் காட்டுவார். சில சம்பவங்களைக் விவரிப்பார். தன் தரப்பு வாதங்களைக் கூறுவார். பிறகு “நான் சொன்னது எதுவுமே முக்கியமல்ல. எனக்கு இந்த ‘டிராமா’தான் முக்கியம்” என்பார். நடந்து கடற்கரை அருகில் எத்தனையோ நாட்கள் சென்றிருக்கிறோம். டேவிட் அல்லது என் தோள்களைப் பற்றியப்படி நடப்பார்.
அவருடைய ‘நட்சத்திர் வாசி’ யையும், ‘ஊர்துவ யாத்ரா’ (பின்னால் இது ‘மேல் நோக்கிய பயணம்’ என்ற பெயரில் வெளியானது) வையும் கையெழுத்துப் பிரதிகளாகப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
சங்கரரைவிட புத்தரையே அதிகம் மதித்தார். டைகர் வரதாச்சரியார் போன்றவர்களை சிலாகித்துப் பேசுவார். கிட்டப்பாவை மிகவும் மதித்தார். அவர் சுந்தராம்பளை மணந்து கொண்டதை ரஸித்துச் சொல்லுவார். டி.கே.ஷண்முகம், பகவதி நடிப்பைப் புகழ்வார். காந்தியை ஒரு ரிஷி (saint) என்பார். பெரியார் பற்றி ஒரு கடுமையான விமரிசனம் அவரிடம் சொல்லப்பட்டபோது அதை அவர் மறுத்தேதும் சொல்லவில்லை. பாரதியோடு இருந்த அந்நாட்களிலேயே பாரதிதாசன் நன்கு எழுதினார் என்பார்.
“சாப்பிட்டு சாப்பிட்டு தொப்பை வளர்க்கும் பிராம்மணார்த்தக்காரர்களுக்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்” என்பார் (பாரதி). “வெள்ளாளர்கள் பிராமணர்களை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று நம்புகிறவர்கள்”, “கலப்புத் திருமணம் செய்து கொண்ட உயர் ஜாதிப் பெண்ணின் நடத்தை சமூகத்தால் சந்தேகிக்கப்படும்”, “பிராமணர்கள் மிகப் பலருக்கு சம்ஸ்க்ருதம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் சம்ஸ்க்ருதம் தேவ பாஷை, அது மாதிரி வருமா என்பார்கள்”, “திராவிட இயக்கக்காரர்களுக்கு பிராமணர்கள் என்றால் பிடிக்காது. ஆனால் பிராமணப் பெண்கள் என்றால் தீராத ஆசை”, “சி.சு.செ.வுக்கு கடைசியில் எஞ்சியுள்ளது சி.மணி, சச்சிதானந்தன், மற்றும் நான்தான். இதில் ஒருவரும் பிராமணரில்லை” – இவையெல்லாம் அவர் பேசுகையில் ஜாதி சம்பந்தமாகப் பொதுவாகக் கூறியவை.
மற்றும் நண்பர்களிடையே பயமற்று, தயக்கமற்று எழுத்தாளர்களடும் பிறரோடும் ஆன தனிப்பட்ட உறவுகள் பற்றியும், தன்னைப் பற்றியும், தன்னுடைய சில புதிரும் ஆச்சர்யமும் நிறைந்த திட்டங்கள் பற்றியும் அவர் கூறியிருக்கிறார்.
1978ன் ஆரம்பத்தில் நான் வேலை மாற்றலாகி வேளியூர் சென்று விட்டேன். டேவிடும் அகால மரணம் அடைந்து விட்டார். பிரமிளோடு தொடர்பு விட்டுப் போயிற்று. சென்னையில் இடை இடையே இருக்கையில் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்களைக் கேட்கச் செல்கையில் சில சமயம் அடையார் வஸந்த விஹாரில் பிரமிளைப் பார்ப்பேன். அவரோடு இருக்கும் நண்பர்களை அறிமுகம் செய்வார். நான் சென்னையில் இல்லாத போதும் என் நண்பன் பார்தசாரதியிடம் தான் எழுதி வெளிவந்துள்ள புத்தகத்தை எனக்கு கொடுக்கச் சொல்லி அளித்து இருக்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் மீது அவருக்கு ஈடுபாடு பெரிதும் இருந்தபோதும் அவருக்கு இருந்த கடுமையான அபிப்பிராயங்களும், தன்னைப் பற்றியும் பிறர் பற்றியும் அவருக்கு இருந்த பிம்பங்களுமே அவர் விழைந்த சிருஷ்டியின் உந்நதத்திற்கும், அதை விட ஆன்மிக மலர்ச்சிக்கும் தடைகளாகிவிட்டனவோ என்று அவருடைய பல பிந்தைய எழுத்துகளைப் படிக்கையில் தோன்றுகிறது.
என் பார்வையில் அவருடைய தத்துவ தரிசனங்களின் மற்றும் படைப்புத் திறனின் உச்சமாக அது ஒரு தொகுப்பாகவே இருந்த போதினும் ‘தியானதாரா’ தென்படுகிறது.
1997 ஜனவரியில் அவர் காலமானார். அவர் மறைவு வெகு நாட்கள் கழித்தே எனக்கு தெரியவந்தது.
(நன்றி: உயிரெழுத்து)
குறிப்பு:
[1] When the reporters asked him what he thought about the untouchables entering the temples he shocked them by the unexpected reply that there should be no temples. (1932 – page 283, ‘The Years of Awakening” – Mary Lutyens)