மித்திலன் அவர்கள் எழுதிய யாமறியும் மொழி என்கிற கட்டுரையைப் பற்றிய எனது கருத்து. முதலாவதாக கட்டுரையில் நோக்கம் தெளிவாக ஞானக்கூத்தன் வாயிலாகப் புலப்படுகிறது. எல்லா மொழிகளும் சந்தோஷத்தை கொடுக்கிறது (பொருள் புரிந்தால் மட்டுமல்ல, உச்சரிப்பு பழக்கப்பட்டால் கூட) எல்லா மொழியும் சமம்தான்.
இதன் அடிப்படையில் இக்கட்டுரையின் அடுத்த பத்தியில் தொடர்கிறது. ஆங்கிலம் உலகப் பொது மொழியானதற்கான காரணங்களை கூறும் அதே சமயம் செம்மொழி தகுதியைப் பெற்ற தமிழைப் பற்றிக் குறிப்பிடும்போது உலகின் முதன்மையான மொழி என்ற உணர்வு பலரிடம் வெளிப்பட்டதாக கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இது மாநாட்டின் மையக் கருத்து அல்ல. செம்மொழி தகுதியைப் பெற்ற ஒரு மொழியின் குணங்களை ஆராய்வதும் செம்மொழியான மற்ற மொழிகளோடு ஒப்பாய்வு செய்யப் பட வேண்டும் என்பதும், செம்மொழி தகுதிக்கான பத்து அம்சங்கள் தமிழில் உள்ளது பற்றி ஆய்வு நடத்தப் பட வேண்டிய தலையாயப் பணிக்காகத்தான் மாநாடு நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆயின் நடந்தது வேறு என்பது வெளிப்படை.
எனவே கட்டுரையின் நோக்கம் மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தனிச் சிறப்புடையனவே என்பதை விளக்கவே அமைந்துள்ளதா எனப் பார்க்கலாம். மொழிகள் வளர்ச்சிப் பாதையில் வெவ்வேறு திசைகளில் பயணித்தால் சில மொழிகள் வளர்ச்சியடையாது காணாமலேயே போய்விடுகின்றன என்பதை எழுத்தாளர் கு.ராமகிருஷ்ணன் கடைசிப் பெண் என்ற கட்டுரையில் சுட்டி காட்டியுள்ளார். ஆனால் இந்த கட்டுரையிலோ அவ்வாறு வளர்ச்சியடையாது மறைந்து போன மொழிகளைப் பற்றியோ, அவை வளர்ச்சியடையாதற்கான காரணங்களோ ஆராயப்படவே இல்லை.
அதே போல கடைசிப் பத்தியில் எல்லா மொழிகளும் மானிடர்களாகிய நமக்கு உரியனவே என்கிற கருத்தில் நான் மாறுபடுகின்றேன். ஏனெனில் கட்டுரையில் விலங்குகள், பறவைகளுக்கான மொழிகளைப் பற்றி குறிப்பிடப் படவும் இல்லை. அதன் பயனை ஆராயவும் இல்லை.
எனவே கட்டுரையின் மைய நோக்கான “உயர்வு தாழ்ச்சி சொல்லல் பாவம்” என்கிற கருத்தளவில் மட்டுமே முழுமையான வடிவமாகவும் எல்லா மொழிகளின் சிறப்புகளைப் பற்றிய கட்டுரை என்ற அளவில் முழுமையடையாமலும் உள்ளது.
மேலும் கட்டுரை எங்கே தொடங்கியதோ அங்கேயே நின்று விட்டது. தொடராக வந்து ஒவ்வொரு மொழிகளின் சிறப்புகளை ஆய்ந்திருந்தால் நன்கு அமைந்திருக்கக் கூடும். மாறாக அனைத்து கருத்துகளையும் ஒரே கட்டுரையில் அள்ளி தெளித்த ஆர்வமே வெளிப்படுகிறது என்பதால் ஒவ்வொரு பத்தியும் ஒரு தனிக் கட்டுரை எழுதுவதற்கான கருத்துகளோடு அமைந்த கதம்பமாகவே உள்ளது என்பது எனக்கு மிகையாகத் தெரியவில்லை.
C.S.வீரராகவன்
ஐயா
நான் தமது ‘சொல்வனம்’ இணைய இதழ் (23.07.2010 தேதியிட்டது) வாசித்தேன். சிறப்பாக உள்ளது. அதில் மித்திலன் அவர்களின் யாமறிந்த மொழிகளின் கருத்துகள் என்னை மிகவும் ஈர்த்தது. மொழிகளில் ஏற்றத்தாழ்வன்பது நமது பகுத்தறிவை அல்ல பகுப்புணர்வைக் காட்டுகிறது என்ற வரிகள் மிகப் பொருத்தமானவை. அவர் சொல்லியிருந்தது போல் மொழியின் அடிப்படையில் சொந்த விருப்பமே மாறுவதும் உலக இயல்பாக உள்ளது.
இவ்விதழ் இன்று தான் முதலாவதாக படிக்கிறென். இவ்விதழை அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்கு என் நன்றி. இனி என் பொழுதுகள் பயனுடன் கழியுமென்றண்ணுகிறேன்.
நான் கணிணியில் தமிழ் எழுத்துக்களை முதன் முதலாக பயன்படுத்துவதால் பிழைகள் இருக்கும். மன்னிக்கவும்.
வாழ்த்துக்களுடன்
மு.சாந்தி.
நாஞ்சில்நாடன் அவர்களின் ‘பனுவல் போற்றுதும்’ தொடரைத் தவறாது படித்து வருகிறேன். இது ஓர் அரிய பொக்கிஷமான தொடர் என்பதில் சந்தேகமேயில்லை. தொடர்ந்து இப்படிப் பலர் கவனத்துக்கும் வராத புத்தகங்களைக் குறிப்பிட்டு நாஞ்சில்நாடன் அவர்கள் எழுதவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
தன்னுடைய இரண்டாவது கட்டுரையில் நாஞ்சில் நாடன் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்:
இதற்கு மேல் எந்த அரசும் என்ன செய்ய இயலும்? மக்களுக்கு வாசிக்கும், தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லையே?
இந்த வரியோடு நான் சற்று மாறுபடுகிறேன். அரசில் இருப்பவர்கள்தானே தனியார் தொலைக்காட்சி சேனலை ஆரம்பித்து, வாரம் சில மணிநேரங்கள் டிவி முன்பு இருந்த தமிழனை வாரம் முழுதும் சினிமாவைக் காட்டி தொலைக்காட்சி முன்பு உட்கார வைத்தது? தமிழனை டிவி இல்லாமல் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளி, இலவச டிவி கொடுத்து அடுத்த ஐந்து வருடத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. எங்கும் சினிமா, எதிலும் சினிமா என்றாக்கியது. இன்று தமிழன் படிக்கும் வெகுஜனப் பத்திரிகை அனைத்துமே சினிமாவை மட்டுமே எழுத்தில் காட்டுகின்றன. இப்போது அரசுக்கட்சி சினிமாவும் எடுக்கிறது. அடுத்த தேர்தலுக்கு கிராமத்துக்கொரு திரையரங்கம் என்று வாக்குறுதி கொடுத்து அரசுக்கட்டிலைத் தற்காத்துக்கொண்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.
இப்படிப்பட்ட சூழலில் தமிழன் எப்படிப் படிப்பான்? அவன் எதையும் படிக்காமல் பார்த்துக்கொள்வதே அரசுதானே?
நன்றியுடன்,
ஆர்.பாஸ்கரன்.
நாஞ்சில் நாடன் அவர்களின் பனுவல் போற்றுதும் இரண்டு பாகமும் அருமையாய் இருந்தது. சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகன் (முதல் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த பள்ளி நூலைப் பார்த்ததும் விக்கித்துப் போனேன் – அதில் Pine குறித்த பாடல் ஒன்று இருந்தது. நமக்குத் தெரிந்த எந்த மரத்தைப் பற்றிய குறிப்பும் அதில் இல்லை. Pine மரத்தைக் காட்டச் சொல்லிக் கேட்டால் என்ன செய்வார்கள் என்று தோன்றியது. கேட்டால், அதற்குத்தான் Discovery Channel இருக்கிறதே என்பார்கள். எனக்குத் தாவரங்கள் குறித்துக் கொஞ்சம் அறிவு இருந்தாலும், அவையெல்லாம் ஆங்கில புத்தகம் படித்துத் தெரிந்துகொண்டவை. May Flower என்றும், Gulmohar என்றும் அறிந்திருந்த மரம்தான் செந்தூரம் என்பது சில நாட்கள் முன்புதான் தெரிய வந்தது. நாஞ்சில் நாடன் போல் நானும் மயிர்க்கூச்செரிந்தேன் அப்போது. தமிழில் இது போன்ற புத்தகங்கள் குறைவு என்ற எண்ணம் பெரும்பாலோர்க்கு உண்டு. எனவே இது போன்ற புத்தகங்கள் குறித்து தொடர்ந்து எழுதவும்.
நன்றியுடன்,
மோகன் சுப்ரமணியன்.
அருண் நரசிம்மனின் ராகம்-தானம்-பல்லவி பிரமாதம். ஆரம்பத்தில் படிக்கக் கொஞ்சம் கஷ்டமாகப் பல விஷயங்களை அவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டாலும், அடுத்தடுத்துப் படிக்கப் படிக்க ராகம்-தானம்-பல்லவியைக் குறித்துப் பல விஷயங்கள் பிடுபடுகின்றன. பல்லவி என்றால் திரும்பத் திரும்ப அந்த வரியைப் பாடுவது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதில் இத்தனை வகைகள், நுணுக்கங்கள், தாளக்கணக்குகள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த வரும் பகுதிகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பல புதிய விஷயங்களுக்காகவும், இதற்கு முன் அவரெழுதிப் புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களுக்காகவும் 🙂
அன்புடன்,
சாமி.ஆர்
ஐயா,
உங்கள் கட்டுரையில் ஆக்டபஸுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்று கேட்டிருந்தீர்கள். ஆக்டபஸ் என்ற சொல்லுக்கு “பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி” என்பன போன்ற தமிழ் பதங்கள் இருக்கின்றன என விக்கிப்பீடியா தகவல் தருகிறது.
மிக்க நன்றி.
அன்புடன்,
அனானி
Dear Editor,
Thank you very much for publishing the interview with Mr Venkat Swaminathan. I respect him a lot. He is a genius and very bold in his views. Though I know him personally very well I have learned a lot from his writings. I really admire his neutral view. Nowadays I could not find Mr Desikan’s writings in Solvanam. Is he contributing under different name? Is it possible for you to give the phone number of Kizhakku Pathippakam. I would like to buy the book NOVEL by M A Susila.
Thank you,
Dr M S Shri Lakshmi
அன்புள்ள சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு,
திரு.நரசய்யா எழுதிய சிட்டி நினைவுமலர் வெளியீட்டுவிழாவைக் குறித்துப் படித்தேன். மிக்க நன்றி. வீரராகவன் போன்றவர்கள்தான் நம் இலக்கியத்தின் தூண் போன்றவர்கள். வெளியீட்டுவிழாவின்போதே புத்தகத்தில் எச்சில் துப்பும் எழுத்தாள மேதைகளும், எழுத்தாளன் இருக்கும் வரை அவன் ரத்தத்தை ஒரு பைசா காபிரைட் காசு தராமல் உறிஞ்சிக் குடித்துவிட்டு செத்தபின் விழாவெடுப்பவர்களும் இல்லை.
வீரராகவனின் கையெழுத்துப் புத்தகத்தின் ஸ்கேன் வடிவம் இங்கே கிடைக்கிறது.
இப்புத்தகத்தைக் குறித்து எதிர்வரும் சொல்வனத்தில் எழுத முயற்சிக்கிறேன்.
எம்.ஏ.சுசீலா அவர்களின் நாவல் பற்றிய கட்டுரையும் மிக நேர்த்தியான ஒன்று. அவருக்கும் என் நன்றியும், பாராட்டுகளும்.
அன்புடன்,
மாதவப் பெருமாள்
சென்ற சொல்வனம் இதழைக் குறித்ததொரு விரிவான விமர்சனம் இந்த வலைப்பதிவில் இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கிறது. இந்த விரிவான விமர்சனத்துக்கு சொல்வனத்தின் நன்றிகள்.
சொல்வனம் முப்பது- 1
சொல்வனம் முப்பது- 2
நன்றியுடன்,
ஆசிரியர் குழு