ஆசிரியருக்கு,
தவில் குறித்து ஒரு அற்புதமான கட்டுரையை அளித்த திரு.கோலப்பனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கட்டுரை நிறைய தகவல்களுடனும் மேலும் நாதஸ்வரம் மற்றும் தவில் ஆர்வலர்கள் தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்ளும் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
நாதஸ்வரம் மற்றும் தவில் குறித்து கட்டுரைகளை சொல்வனம் தொடர்ந்து இது போன்ற பல கட்டுரைகளை வருங்காலத்திலும் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
முனைவர்.எஸ்.ஐ.ஸ்ரீதரன்
-o00o-
அன்பு உள்ளங்களே,
26-11-2011 தேதியிட்ட சொல்வனம் இதழில் திரு.சுகாவின் காந்திமதியின் தாயார் என்ற கட்டுரையில் வரும் சில விஷயங்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். முதலில் நான் ஆழ்வார் குறிச்சியைச் சேர்ந்தவன் என்ற அளவில் எனக்குத் தெரிந்த விஷயம் இது. சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைல நாதர் மேற்கு பார்த்து இருப்பதற்கு காரணங்கள் பல கூறப் படுகின்றன. அகஸ்தியருக்கு சிவபெருமான் பாபநாசத்தில், கல்யாண தீர்த்தத்திலும் தரிசனம் கொடுத்தார்.
இங்கு சிவசைலத்தில் அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிக் கொண்ட படியால் இங்கு சுயம்புவாக எழுந்தருளினார். நன்றி.
sankaranarayanan
-o00o-
அன்பு ஆசிரியருக்கு,
மிருதங்க வித்வான பழநி சுப்பிரமணியப் பிள்ளை குறித்த ‘துருவ நட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றேன்.
முனைவர். விஜயலட்சும் சுப்பிரமணியம் அவர்களின் கச்சேரி செவிக்கு விருந்தாக இருந்தது. விழா மிக விமரிசையாக நடந்தது
இன்றைய நுகர்வுச் சூழலில் ஸ்ரீ.லலிதா ராம் போன்ற இளைஞர்கள் வெகு குறைவாகவே அறியப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையை, தற்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்காக பதிய எடுத்த கடும் முயற்சிகள் மிகுந்த நம்பிக்கையளிக்கின்றன.
அறிவியல், கலை, இசை, இலக்கியம் ஆகிய பலதளங்களில் உள்ள இத்தகைய ஆளுமைகளை அறிய வாய்ப்பைத் தரும் சொல்வனம் இதழுக்கு எனது நன்றி.
வனமாலி கோபால்
மும்பை