ஆளுமை »
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்தே சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மடைதிறந்த வெள்ளமாக, தேவாரமும், திருவாசகமுமாகப் பாடி வந்தார். இடையிடையே கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் வேறு. மரபின் மைந்தன் பாடிய ஒவ்வொரு பாடலும் எனக்கும் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. சில இடங்களில் கண்மூடி பக்தியில் மூழ்கிக் கிடப்பதான பாவனையில் சமாளித்தேன். உடன் வந்த ‘இசைக்கவி’ ரமணன் அவர்கள் ஒருபடி மேலே போய், மரபின் மைந்தனின் குரலுக்கு வாயசைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.
அனுபவம், ஆளுமை »
பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார்
அனுபவம் »
முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை.
அனுபவம் »
கார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர்.
புத்தகவிமர்சனம், ரசனை »
‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில்(அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும்.
ரசனை »
‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன்.
ரசனை »
வழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.
ரசனை »
எண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர்.
ரசனை »
திரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. நண்பர்களுக்காக சுற்றியது போக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ! இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.
ரசனை »
ரசனை »
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கான கதாபாத்திரங்கள் உருவாவதை விட, கதாபாத்திரங்களுக்கான முகங்களை, மனிதர்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைக்கும் முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அத்திபூத்தாற் போல் எப்போதாவது, ஏதாவது ஓர் அதிசயம் நிகழாமல் இல்லை. அந்த அதிசயங்களில் கொஞ்சம் நேர்மை இருக்கும் பட்சத்தில், அதற்கான அங்கீகாரமும் தானாய்த் தேடி வந்து விடத்தான் செய்கிறது. தமிழ் கதாநாயகர்களின் வரிசையில் தற்போதைய அதிசயமாகத் திகழும் தனுஷ், ஏற்கனவே இங்கு நட்சத்திரமாகி சில வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்மொழி, மற்றும் முகபாவங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற விதமாக, யதார்த்த வாழ்க்கைக்கு வெகு அருகில் அவரைக் கொண்டு சென்று, சேவற்சண்டையில் பங்கேற்கும் ஓர் இளைஞனாக அவரை உருமாற்றி, சென்ற முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
இசை, ரசனை »
‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன்.
ரசனை »
ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.
ரசனை »
காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.
ரசனை »
‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன்.




